திங்கள், 5 ஆகஸ்ட், 2019

BBC : மலையகத் இளைஞர் வென்ற சர்வதேசப் பதக்கம்.. வெறும் தேநீர் கோப்பையை கொடுத்த இலங்கை அரசு!

BBC : இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டத்
தொழிலாளி மகனான
மாதவன் ராஜகுமாரன் சர்வதேச உடற்கட்டழகுப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். சீனாவில் நடைபெற்ற 53ஆவது ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் பங்கு பெற்று வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார் இவர்.
நுவரெலியா மாவட்டத்தின் லபுக்கலை பகுதியைச் சேர்ந்த இவர், தனது 15ஆவது வயது முதல் உடற்கட்டழகர் போட்டிக்காக தன்னை தயார்படுத்தியுள்ளார்.
பல்வேறு உடற்கட்டழகர் போட்டிகளில் பங்கேற்ற மாதவன் ராஜகுமாரன், இதுவரை 10 பதக்கங்களை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
இதில் இரண்டு சர்வதேச பதக்கங்களும் உள்ளடங்குகின்றன.
  • 2015 - மத்திய மாகாண உடற்கட்டழகர் போட்டி - வெள்ளிப்பதக்கம்
  • 2015 - அகில இலங்கை பாடசாலை மட்ட உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
  • 2015 - மத்திய மாகாண 55 கிலோகிராம் எடை பிரிவின் கீழ் உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
  • 2016 - அகில இலங்கை பாடசாலை மட்ட உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
  • 2016 - அகில இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
  • 2016 - தேசிய மட்ட 55 கிலோகிராம் எடை பிரிவின் கீழ் உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
  • 2017 - அகில இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
  • 2017 - தேசிய மட்ட 60 கிலோகிராம் எடை பிரிவின் கீழ் உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
  • 2018 - தெற்காசிய உடற்கட்டழகர் போட்டி (நேபாளம்) - தங்கப்பதக்கம்
  • 2019 - ஆசிய உடற்கட்டழகர் போட்டி (சீனா) - வெண்கலப் பதக்கம்
உடற்கட்டழகர் விளையாட்டை தேர்வு செய்வதற்கான காரணம் என்ன என பிபிசி தமிழ், மாதவன் ராஜகுமாரனிடம் கேட்டது. ''நான் அதிகளவில் எல்லா விளையாட்டும் விளையாடுவேன். அதற்கு உடல் பலம் தேவைப்பட்டது. அதை செய்ய ஜிம் சென்றேன். அப்படியே உடல் பலமாகியது. மத்திய மாகாண ஆணழகன் போட்டியில் முதலாவதாக வெற்றி பெற்றேன். அதில் இருந்தே நான் இதே விளையாட்டை எடுத்துக்கொண்டேன்" என்று அவர் தெரிவித்தார்.சர்வதேச உடற்கட்டழகர் போட்டியில் பங்கு பெற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என கூறிய அவர், அந்த போட்டிகளிலும் வெற்றி பெற்று நாட்டிற்கும், மலையகத்திற்கும் பெருமை சேர்ப்பதாக நம்பிக்கை வெளியிட்டார்.
 

மலையகத்தில் மரக்கறி தோட்டமொன்றில் நாள் சம்பளத்தில் ராஜகுமாரனின் பெற்றோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சர்வதேச உடற்கட்டழகர் போட்டியில் பங்குபெற்று வெற்றிக் கொள்வதற்கான நம்பிக்கை தனக்கு காணப்படுகின்ற போதிலும், அதற்கான பண வசதிகள் தன்னிடம் கிடையாது என அவர் கவலை தெரிவிக்கின்றார்.
சர்வதேச போட்டிகளில் பங்கு பெறுவதற்கு யாரேனும் உதவிகளை வழங்க முன்வந்தால், தான் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.


 சீனாவில் நடைபெற்ற 53ஆவது ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் பங்கு பெற்று இலங்கைக்கு பெருமை சேர்ந்த மாதவன் ராஜகுமாரனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு தேநீர் அருந்தும் கோப்பையொன்றை பரிசாக வழங்கியுள்ளது.re>இந்த விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் தன்னை அமைச்சுக்கு அழைத்து இந்த தேநீர் அருந்தும் கிண்ணத்தை வழங்கியதாக மாதவன் ராஜகுமாரன் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பொறிக்கப்பட்ட தேநீர் அருந்தும் கோப்பையொன்றே மாதவன் ராஜகுமாரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தனக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாகவும் மாதவன் ராஜகுமாரன் குறிப்பிடுகின்றார்.

கருத்துகள் இல்லை: