சனி, 10 ஆகஸ்ட், 2019

விஜய் பட ஷூட்டிங் விபத்தில் சிக்கியவர் மரணம்!

விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!மின்னம்பலம் : விஜய்யின் பிகில் பட படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் சிக்கிய செல்வராஜ்(52) என்பவர் நேற்று மாலை மரணமடைந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்ட படமென்பதால் பூந்தமல்லியை அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் ஈ.வி.பி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கும் இரவு-பகல் பாராமல் நடைபெற்று வந்துள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதியன்றும் இரவில் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இந்த பணியில் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் செல்வராஜ்(வயது 52) என்பவரும் ஈடுபட்டு வந்துள்ளார்.

100 அடி உயரத்தில் கிரேனில் அதிக திறன்கொண்ட மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 100 அடி உயரத்தில் கிரேனில் கட்டப்பட்டு இருந்த மின்விளக்கு கழன்று, கீழே நின்று கொண்டிருந்த செல்வராஜ் தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே மயங்கினார். உடனடியாக போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் செல்வராஜ். இத்தகவலை காலை படப்பிடிப்புக்கு வந்த விஜய் அறிந்தவுடன் மருத்துவமனைக்கு நேரில் சென்று செல்வராஜின் உடல்நிலை குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் நேற்று (ஆக. 9) மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார். மாலை இத்தகவல் கிடைத்தவுடன் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து செல்வராஜ் உடலைப் பார்க்க கிளம்பியுள்ளனர். பின்னி மில்லில் பிகில் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தகவல் அறிந்தவுடன் விஜய் படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி கிளம்பியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: