புதன், 7 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் விவகாரம் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது


காஷ்மீர் விவகாரம்: எதிர்ப்பு தெரிவித்த சீனா.. பதிலளித்த இந்தியா.. மாலைமலர் :  லடாக்கினை யூனியன் பிரதேசமாக பிரித்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் பதிலளித்துள்ளார். பீஜிங்: காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி காஷ்மீர் மாநிலம் இனி லடாக் என்ற ஒரு பகுதியாகவும், ஜம்மு காஷ்மீர் என்ற மற்றொரு பகுதியாகவும் செயல்படும். அந்த 2 பகுதிகளும் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. லடாக் யூனியன் பிரதேசம் சட்டசபை இல்லாமல் செயல்படும். அங்கு துணை நிலை கவர்னர் நியமனம் செய்யப்படுவார் என கூறப்பட்டது.
 இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் பல தலைவர்கள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா, லடாக்கினை பிரித்தது குறித்து  சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து சீனா வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹூவா சூயுங் கூறுகையில், ‘இந்தியா, சீன எல்லைக்குள் நுழைவதற்கு என்றுமே சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


அப்படி இருக்கையில், சீனாவின் இறையாண்மையை சீர்குலைக்கும் வகையில் இந்தியா தன்னுடைய சட்ட விதிகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதனை சீனா ஏற்றுக் கொள்ளாது.

எனவே, இந்தியா எல்லை விவகாரத்தில் சரியாக செயல்பட வேண்டும். இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை ஒப்பந்தத்திற்கு மதிப்பளிக்கும் விதமாக இந்தியா செயல்பட வேண்டும்’ என கூறினார்.

இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், ‘காஷ்மீர் மறுசீரமைப்பு என்பது உள்நாட்டு விவகாரம். இந்தியா, எந்தவொரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்திலும் தலையிட்டு கருத்து தெரிவிக்காது.

அதேபோலதான் மற்ற நாடுகளும் இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். இந்தியா-சீனா எல்லை ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் ஆலோசித்துதான் இதனை ஒத்துக் கொண்டுள்ளது’ என கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: