திங்கள், 5 ஆகஸ்ட், 2019

பாகிஸ்தான் : எங்கள் நாட்டவர்கள் யாரும் ஊடுருவவில்லை.. இந்திய எல்லையில் கிடக்கும் உடல்கள் யாருடையது?

பிரச்சினை 7 பேர் tamil.oneindia.com - vishnu-priya : இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரச்சினையை உலக நாடுகள் கவனத்திலிருந்து திசை திருப்புவதற்காகவே பேட் அமைப்பை சேர்ந்த 7 பேரை கொன்றதாக இந்திய ராணுவம் பொய்யான தகவலை தெரிவித்துள்ளது என பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
ஜம்மு- காஷ்மீரின் சோப்பூர் நகரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தினர் ஊடுருவியுள்ளதாக உளவு துறை மூலம் இந்திய ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீருக்குள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அஸாரின் சகோதரர் உள்பட 15 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தீவிரவாத அமைப்புக்கும் பாதுகாப்பு படை வீரர்களும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்ப்பட்டனர். ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 36 மணி நேரத்தில் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தின் பேட் அமைப்பை சேர்ந்த 7 பேரை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அவர்களின் உடல்கள் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கிடக்கின்றன. வெள்ளைக் கொடியுடன் வந்து உடல்களை எடுத்துச் செல்லுமாறு இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பாகிஸ்தானோ இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஆசிப் காஃபூர் கூறுகையில் எங்கள் ராணுவத்தினரை சுட்டுக் கொன்றதாக இந்திய ராணுவம் பொய்யான தகவலை பரப்பி வருகிறது. உலக நாடுகளின் கவனத்திலிருந்து காஷ்மீர் பிரச்சினையை திசை திருப்பவே இதுபோன்று இந்தியா முயற்சிக்கிறது.

பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஊடுருவியதாகவும் அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் இந்திய ராணுவத்தினர் கூறுவதை நாங்கள் மறுக்கிறோம் என தெரிவித்தார். பேட் என்ற அமைப்பில் ராணுவ கமாண்டோக்களும் பயங்கவாதிகளும் உறுப்பினர்களாக இருப்பர்.
இவர்களுக்கு 8 மாத ராணுவ பயிற்சியும் 4 வாரங்களுக்கு விமான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்த குழு இந்திய எல்லையில் ஊடுருவுவதற்காகவே பாகிஸ்தானால் ஏற்படுத்தப்பட்டது. இவர்கள் கொரில்லா போரையும் தெரிந்திருப்பர். இவர்கள் பிடிபடும் போது இவர்கள் தங்கள் நாட்டினர் இல்லை என மறுப்பதே பாகிஸ்தானின் வாடிக்கையாகும்.

கருத்துகள் இல்லை: