செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

நண்பர் ( கலைஞர்) சிலை திறக்க வருவாரா ஃபரூக் அப்துல்லா

டிஜிட்டல் திண்ணை: நண்பர் சிலை திறக்க வருவாரா ஃபரூக் அப்துல்லா?மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் டெல்லி காட்டியது.
“நாளை தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக இருந்து மறைந்தவருமான கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள். 2018 ஆகஸ்டு 7 ஆம் தேதிதான் கலைஞர் முதுமை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையெடுத்துக் கொண்டிருந்தபோது காலமானார்.
கலைஞரின் இந்த முதல் நினைவு நாளான நாளை முரசொலி அலுவலகத்தில் கலைஞர் அமர்ந்து எழுதிக் கொண்டிருப்பது மாதிரி சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட இருக்கிறது. இச்சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். இந்நிகழ்வுக்காக காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் கலைஞரின் நெருங்கிய நண்பருமான பரூக் அப்துல்லா , புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் அழைக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே தமிழக எம்பிக்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மூலமாக ஃபரூக் அப்துல்லாவிடம் பேசி இதற்கான ஒப்புதலையும் அவர் வழங்கியிருந்தார். இன்று அவர் டெல்லி வந்து டெல்லியிலிருந்து சென்னை வருவதாகத்தான் ஏற்பாடு.

ஆனால் இதற்கிடையே நேற்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவால் ஃபரூக் அப்துல்லாவின் பயணத் திட்டமெல்லாம் மாறிப் போய்விட்டது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி இரவு முதலே ஃபரூக் அப்துல்லா, அவரது மகன் ஓமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா உள்ளிட்ட காஷ்மீரி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தகவல் அறிந்ததும் திமுக எம்.பி.க்கள் அவரைத் தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார்கள். ஆனால் முடியவில்லை.
இந்நிலையில்தான் இன்று நாடாளுமன்றத்தில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா இல்லாதது குறித்து சில எம்.பிக்கள் கேள்வியெழுப்பினர். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்ரியா சூலே, ‘ஃபரூக் அப்துல்லா எனக்கு அருகே அமருவார். அவர் ஜம்மூ காஷ்மீரிலிருந்து தேர்ந்தெடுக்கபட்டவர். இன்று அவர் இங்கே இல்லை. இந்த விவாதம் முழுமையடையாது’ என்று பேசினார். டெல்லியில் இருந்து ஃபரூக் அப்துல்லாவை வரவேற்று சென்னைக்கு அழைத்துச் செல்லலாம் என்று நினைத்த தயாநிதிமாறனும் இன்று மக்களவையில்,
’அவையில் ஃபரூக் அப்துல்லா இல்லை. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதுபற்றி நமக்கு தகவல் அளிக்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பாதுகாப்பளித்து நடுநிலையுடன் செயல்பட வேண்டும்’என்று வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ’ஃபரூக் அப்துல்லா காவலிலும் வைக்கப்படவில்லை, கைது செய்யப்படவும் இல்லை. அவர் தனது விருப்பப்படி வீட்டிலேயே இருக்கிறார்’ என்று தெரிவித்தார். ஃபரூக் அப்துல்லாவிற்கு உடல்நிலை சரியில்லையா என்று சுப்ரியா சூலே என்று கேட்டார். அதற்கு அமித்ஷா, “நான் ஒன்றும் டாக்டர் இல்லை” என்று பதிலளித்தார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் ஸ்ரீநகரில் உள்ள தனது வீட்டில்செய்தியாளர்களை சந்தித்தார் ஃபரூக் அப்துல்லா. உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பொய் சொல்வதாக ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். வீட்டுக் காவலையும் மீறி என்டிடிவி ஊடகத்திடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, ’நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறேன். ஒரு உள்துறை அமைச்சர் இப்படி பொய் சொல்வது வருத்தமளிக்கிறது. அவரது பேச்சு அடிப்படையற்றது. எனது வீட்டிற்கு முன் ஒரு டிஎஸ்பி நிறுத்திவைக்கப்பட்டுள்ளார். எனது மகளைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை. என்னுடைய மாநிலமே தீயிட்டு கொளுத்தப்பட்டு எனது மக்கள் சிறைகளில் அடைக்கப்படும் நேரத்தில் நான் ஏன் வீட்டில் இருக்கப்போகிறேன்? நான் நம்பிக்கை வைத்திருந்த இந்தியா இதுவல்ல. நான் காவலில் வைக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சரே நாடாளுமன்றத்தில் சொல்லிவிட்டார். நீங்கள் யார் என்னை காவலில் வைக்க என்று காவலாளிகளிடம் கேள்வியெழுப்பினேன். பிறகே செய்தியாளர்களை சந்திக்க வந்தேன். என்னை அனுமதித்ததற்காக எத்தனை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எனக்கு தெரியவில்லை’ என்று செய்தியாளர்களை சந்திக்க அவர் எடுத்த முயற்சிகள் பற்றி விளக்கினார்.
இப்போதைய நிலவரப்படி தனது நெருங்கிய நண்பராக இருந்த கலைஞரின் சிலை திறப்பு நிகழ்வுக்கு ஃபரூக் அப்துல்லா வர வாய்ப்பில்லை என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். எப்படியாவது வருவதற்கு அவர் முயற்சி செய்கிறார். ஆனால் காஷ்மீர் சூழல் அனுமதிக்குமா என்று தெரியவில்லை என்கிறார்கள். அதேநேரம் மம்தா பானர்ஜி புறப்பட்டு வருவது உறுதியாகியிருக்கிறது. கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் சிலை திறப்பு நிகழ்வில் கூட தேசிய அரசியல் எதிரொலித்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார்கள் திமுகவினர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: