சனி, 10 ஆகஸ்ட், 2019

காஷ்மீரில் முதலீடு: தொழில் துறை ஆதரவு!

காஷ்மீரில் முதலீடு: தொழில் துறை ஆதரவு!மின்னம்பலம் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்வதில் இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக மத்திய அரசிடம் உறுதியளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் தொழில் துறை வளர்ச்சி மேம்படுத்தப்படும் எனவும் அரசு உறுதியளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்வது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பினர் ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தின் முடிவில் முதலீடுகளை உயர்த்த முழு ஆதரவும் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமனிடம் தொழில் துறைக் கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பின் தலைவரும் கோடாக் மகிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநருமான உதய் கோடாக் ”பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “ஜம்மு காஷ்மீரின் பல்வேறு துறைகளில் முதலீடுகள் அதிகமாகக் குவிவதை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு முதலீடுகள் அதிகரிப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்த தொழில் துறைக் கூட்டமைப்பு தயாராக உள்ளது. அதற்கு நிர்மலா சீதாராமனிடமும் மத்திய அரசிடமும் உறுதியளித்துள்ளோம். பல்வேறு துறைகள் குறித்தும் அவற்றின் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் எங்களது கருத்துகளை நாங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளோம்” என்றார்.

கருத்துகள் இல்லை: