வியாழன், 6 செப்டம்பர், 2018

ராஜீவ் கொலை .. ஏழு பேர்களையும் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு... உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

tamilthehindu : ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை
செய்யும் விஷயத்தில் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது, தமிழக அரசு இதுதொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரையை அனுப்பலாம் என  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறும்போது, ''ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரைக்கலாம்'' என்றார்.< அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், ஆளுநர் அந்தப் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கேட்க வாய்ப்புள்ளது.
என்ன நடந்தது?
கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இதர 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
பின்னர் கடந்த 2000-ம் ஆண்டில் நளினியின் மரண தண்டனையை அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி மனிதாபிமான அடிப்படையில் ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். சுமார் 11 ஆண்டுகள் கால தாமதத்துக்குப் பிறகு அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
உச்ச நீதிமன்றம் கெடு
இந்த முடிவை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். கடந்த 2014-ம் ஆண்டில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, ராஜீவ் கொலை வழக்கின் 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடிவு எடுத்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதற்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. இதனிடையே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்தின் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கெடு விதிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் நிராகரிப்பு
இதைத் தொடர்ந்து 7 குற்றவாளிகளின் உடல்நிலை, குடும்ப சூழல், பொருளாதார பின்னணி குறித்த விவரங்களை கோரி தமிழக அரசுக்கு மத்திய அரசு அண்மையில் கடிதம் அனுப்பியது. இதற்கு தமிழக அரசு உரிய பதில் அளித்தது. தமிழக அரசு அனுப்பிய 7 குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள், வழக்கு விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தது.
இதனை பரிசீலித்த குடியரசுத் தலைவர், ராஜீவ் கொலை வழக்கின் 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தார்.
இந்நிலையில் கருணை அடிப்படையில் எழுவரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.ஆனால் எழுவரை விடுவிக்க மறுத்த மத்திய அரசு, அதற்கான கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், எழுவர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கக் கோரி, தமிழக அரசு அதிகாரம் உள்ளது. இதுதொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
இதனால் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்த முடிவு மீண்டும் மத்திய அரசிடமே சென்றுள்ளது.

கருத்துகள் இல்லை: