ஞாயிறு, 22 அக்டோபர், 2017

உத்தர பிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!

பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!
மின்னம்பலம் : இந்தியாவில் நாளுக்கு நாள் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராஜேஷ் மிஸ்ரா என்னும் பத்திரிகையாளர் நேற்று (அக்டோபர் 21) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியபூரில், டெய்னிக் ஜக்ரான் பத்திரிகையில் பணியாற்றி வந்தவர் ராஜேஷ் மிஸ்ரா (38). அவர் குடும்பத்தினர் நடத்தும் கட்டடக் கலைப் பொருள்கள் கடையில் நேற்று காலை அவர் அமர்ந்திருந்தபோது, சுமார் 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அவரை சரமாரியாகச் சுட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் மிஸ்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேஷ் மிஸ்ராவைக் காப்பற்ற வந்த சகோதரர் அமிதாப் மிஸ்ராவையும் மர்ம நபர்கள் சுட்டுவிட்டுத் தப்பியுள்ளனர். ப
லத்த காயமடைந்த அவர் உடனடியாக காசியாபூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வாரணாசியில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கொலை செய்யப்பட்ட ராஜேஷ் மிஸ்ரா ஆர்.எஸ்.எஸ். இயக்க அமைப்பிலும் செயல்பட்டு வந்தார். அவர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கொலை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 5ஆம் தேதி இரவு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் (55), பெங்களூருவில் உள்ள அவரது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
செப்டம்பர் 7ஆம் தேதி, பீகார் ‘ராஷ்திரிய சஹாரா’வின் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவர் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயையும் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த மிஸ்ரா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
செப்டம்பர் 21ஆம் தேதி திரிபுரா ‘தீன் ராத்’தொலைக்காட்சியின் இளம் பத்திரிகையாளர் சாந்தனு பவுனிக் திரிபுராவில் பழங்குடியினர் கலவரம் பற்றி செய்தி சேகரிக்கச் சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
செப்டம்பர் 22ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் மற்றும் அவரது தாயார் மொகாலியில் உள்ள அவர்களது வீட்டில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை: