ஞாயிறு, 22 அக்டோபர், 2017

எடப்பாடி பழனிசாமி : அன்புமணி அமைச்சில் ... கேதான் தேசாயின் 1600 கோடி +7 டன் தங்கம் ஊழல் ...

நக்கீரன் : அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய் வீட்டில் இருந்து லாரிகளில் பணம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டது என்றால், அன்புமணி எவ்வளவு கொள்ளையடித்து வைத்திருப்பார் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் அதிமுக ஆண்டுவிழா பொதுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில், அதிமுக மீது ஊழல் புகார்களை கூறும் முன் அன்புமணி தன் மீது உள்ள ஊழல் புகார்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் மீது சிபிஐ வழக்கு போடப்பட்டு நிலுவையில் உள்ளது. அவர் நம்மை பார்த்து ஊழல் கட்சி என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அவர் இருந்தபோது, இந்திய மெடிக்கல் கவுன்சில் சேர்மேன் கேதன் தேசாய் இருந்தார். அவர் வீட்டில் சோதனை செய்தபோது இரண்டு லாரிகளில் 1600 கோடி, இந்தியாவிலேயே எந்த ஒரு அதிகாரியிடமும் இல்லாத இவ்வளவு பணத்தை கண்டுபிடித்து அதனை லாரிகளில் ஏற்றிச் சென்றனர். அதுமட்டுமல்ல கேதன் தேசாய் வீட்டில் இருந்து 7 டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு டன் என்றால் ஆயிரம் கிலோ. ஒரு கிலோவுக்கு 125 பவுன். அப்படியென்றால் ஒரு டன்னுக்கு எத்தனை பவுன் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.


மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது அந்த துறையில் சேர்மேனாக இருந்த ஒருவர் இவ்வளவு கொள்ளையடித்து வைத்திருப்பார் என்றால், அன்புமணி எவ்வளவு கொள்ளையடித்து வைத்திருப்பார் என்று எண்ணிப்பாருங்கள். ஊழல் ஆட்சி என்று எங்களைப் பார்த்து அன்புமணி கூறுகிறார். முதலில் உங்களைத் திருத்துங்கள் அப்புறம் எங்களைப் பேசலாம். இவ்வாறு பேசினார்.

கருத்துகள் இல்லை: