வியாழன், 26 அக்டோபர், 2017

சேகர் ரெட்டி 33 கோடி புது நோட்டு .... வழக்கு ஊத்தி மூடப்படுகிறது ..சீரியல் இலக்கங்கள் ரிசேர்வ் வங்கியிடம் இல்லையாம் ?

Mathi - Oneindia Tamil  :  ஊற்றி மூடப்படுகிறது சேகர் ரெட்டி கேஸ்-வீடியோ சென்னை: தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான சட்டவிரோத பணப் பதுக்கல் வழக்கு ஊற்றி மூடப்படும் நிலைமைக்கு வந்துள்ளது. சேகர் ரெட்டியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ33 கோடி மதிப்பிலான ரூ2,000 நோட்டுகள் குறித்து தங்களிடம் எந்த விவரமுமே இல்லை என அந்தர் பல்டி அடித்துவிட்டது ஆர்பிஐ. தமிழக அரசின் பிரதான ஒப்பந்ததாரராக இருந்தவர் சேகர் ரெட்டி. முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கும் மிக நெருக்கமானவர் சேகர் ரெட்டி. கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது நாடு முழுவதும் புதிய ரூ2,000 நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டன. சென்னையில் சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையில் ரூ33 கோடி மதிப்பிலான ரூ2,000 நோட்டுகள், தங்க கட்டிகள் பெருமளவு பறிமுதல் செய்யப்பட்டன.


இவ்வழக்கில் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட ரூ2,000 நோட்டுகள் எந்த வங்கி அல்லது குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது என்கிற விவரங்களை ரிசர்வ் வங்கியிடம் சிபிஐ கேட்டிருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கியோ, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு அப்படியே வங்கிகளுக்கும் கிட்டங்கிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

ஒரு மாதம் கழித்தே நிலைமை இயல்பு நிலைக்கு வந்த பின்னர், ரூபாய் நோட்டுகளின் சீரியல் எண்கள் குறித்து வைக்கப்பட்டு எந்தெந்த வங்கிகளுக்கு அனுப்பி வைத்தோம் என்கிற பணி தொடங்கியது.

சிபிஐ குறிப்பிட்டுள்ள ரூ2,000 நோட்டுகளின் சீரியல் எண்கள் தொடர்பான விவரங்கள் எங்களிடம் எதுவுமே இல்லை என கைவிரித்துவிட்டது.
இதனால் சேகர் ரெட்டி மீதான வழக்கில் இனி மேல் நடவடிக்கை எதுவும் செய்ய முடியாத நிலைக்கு சிபிஐ தள்ளப்பட்டுள்ளது. அனேகமாக சேகர் ரெட்டி மீதான வழக்கு கைவிடப்படும் நிலைமையும் உருவாகலாம் எனவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: