திங்கள், 23 அக்டோபர், 2017

விவசாயம் மத்திய பட்டியலுக்கு செல்கிறது .... தூங்கும் போது திருடப்படுகிறது

மின்னம்பலம் :விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விவசாயமும் மத்தியப் பட்டியலுக்குச் செல்கிறதா?இது தொடர்பாக இன்று (அக்டோபர் 22) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கோ, பொதுப்பட்டியலுக்கோ மாற்ற வேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் கூறியிருக்கிறார். மாநில உரிமைகளைப் பறிக்கும் நோக்கம் கொண்ட இப்பரிந்துரை கண்டிக்கத்தக்கது.
விவசாயத்தை மத்தியப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்காக நிதி ஆயோக் அமைப்பு கூறியுள்ள காரணம் வினோதமாக உள்ளது.
ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குச் செல்லும் கடிதங்களைக் கையாளும் அஞ்சல் நிலையங்கள் மத்திய பட்டியலில் இருப்பதாகவும், வேளாண் விளைபொருட்கள் ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலத்திற்கு விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுவதால் விவசாயத்தையும் மத்தியப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூறியிருக்கிறது.
இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆறுகளின் நீரைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க அவற்றைத் தேசிய மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற நிதி ஆயோக் முன்வைக்கும் அளவீட்டின் அடிப்படையில் பார்த்தால், மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆறுகள் எப்போதோ தேசிய மயமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யாத நிதி ஆயோக் அமைப்பு விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்றத் துடிப்பது சரியல்ல.
இந்தியாவில் எந்தத் துறையையும் ஒரு பட்டியலில் இருந்து இன்னொரு பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசுக்கும், நாடாளுமன்றத்திற்கும் அதிகாரம் உண்டு. ஆனால், அதற்கான தேவைகளும், நியாயங்களும் இருக்க வேண்டும். இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்த காலத்தில் 1976-ஆம் ஆண்டில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகள் மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அப்போது கூட கல்வி மற்றும் சுகாதாரத்தை தொலைதூரப் பகுதிகளுக்கு மாநில அரசால் கொண்டு செல்ல முடியவில்லை என்பதைக் காரணம் காட்டித்தான் அவைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டனவே தவிர, நிதி ஆயோக் அமைப்பு முன்வைக்கும் அளவீட்டின் அடிப்படையில் அல்ல.
மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்படுவதால் விவசாயத்திற்கு ஏதேனும் நன்மை கிடைக்குமென்றால் அதைப் பட்டியல் மாற்றம் செய்வதில் தவறு இல்லை. மாறாக மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டால் விவசாயம் முற்றிலுமாக அழிந்தும் விடும். அத்துடன் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 50 ரூபாயும், ஒரு டன் கரும்புக்கு ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கத் தமிழக அரசு வகை செய்கிறது. ஆனால், இந்த ஊக்கத்தொகையை விவசாயிகளுக்கு வழங்கக் கூடாது என்று மத்திய அரசு தடுக்கிறது.
அதுமட்டுமின்றி, விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கூடாது என்பது தான் மத்திய அரசின் கொள்கையாகும். விவசாயம் சார்ந்த மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிரானதாக இருக்கும் போது, விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்றினால் விவசாயம் முற்றிலுமாக அழிந்து விடும். அதற்கான கருவியாக நிதி ஆயோக்கை பயன்படுத்திக் கொள்கிறது.
நிதி ஆயோக் அமைப்பின் செயல்பாடுகள் தாராளமயமாக்கலுக்கு எதிரானதாகவும், ஏழை, நடுத்தர மக்களுக்கு எதிரானதாகவும் இருக்கும் என்பதால் அந்த அமைப்பை பாமக கடுமையாக எதிர்த்தது. நிதி ஆயோக் அமைப்பின் மீதான பாமகவின் மதிப்பீடு இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே, விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அத்துடன் நிதி ஆயோக் அமைப்பையும் மத்திய அரசு கலைக்க வேண்டும்'' என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: