வியாழன், 26 அக்டோபர், 2017

கம்யூனிஸ்ட் எம்.பி-க்கள் எழுதிக் கொடுப்பதைப் பேசுவேன்!..அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்

அ.தி.மு.க மற்றும் தி.மு.க பிரமுகர்கள் ஒரே மேடையில் இணைவது அரிதாகவே நடக்கும் நிகழ்வு. சீதாராம் யெச்சூரியின் புத்தக வெளியீட்டு விழா, அப்படி அரசியல் எல்லைகளைக் கடந்த ஒரு பண்பாட்டு விழாவாக நடந்துள்ளது.
அ.தி.மு.க எம்.பி-யின் வெளிப்படியாயன் பேச்சு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் ‘நாடாளுமன்ற உரைகள்’ நூல் வெளியீட்டு விழா சென்னை கேரள சமாஜம் அரங்கில், கடந்த 22-ம் தேதி நடந்தது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் என மேடை நிறைந்திருந்தது. ஒவ்வொருவரையும் சிறப்பு அடையாளங்களுடன் பேச அழைத்தார், மார்க்சிஸ்ட் எம்.பி-யான டி.கே.ரங்கராஜன். மேடையில் கனிமொழி எம்.பி-யுடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார்,
அ.தி.மு.க எம்.பி.நவநீதகிருஷ்ணன். யெச்சூரிக்கு ‘மெர்சல்’ விவகாரத்தை விளக்கிக்கொண்டிருந்தார் கனிமொழி. பி.ஜே.பி தவிர மற்ற முக்கியக் கட்சிகளை மேடையில் ஏற்றியிருந்தது மார்க்சிஸ்ட் கட்சி.
நவநீதகிருஷ்ணன் பேசியபோது அரங்கத்தில் சிரிப்பலை. “மூன்று வருடங்களாக யெச்சூரியின் நாடாளுமன்ற உரைகளை ஒரு வார்த்தைகூட விடாமல் குறிப்பெடுத்துள்ளேன். முதல்வர் அம்மா என்னை அழைத்து, எம்.பி ஆக்குவதாகச் சொன்னார். ‘எனக்கு எதுவுமே தெரியாதேம்மா’ என மறுத்தேன். ‘நான் எழுதித்தருகிறேன்’ என்று அம்மா சொன்னார். பிறகு, என்னிடம் அவர் பரிந்துரைத்த முதல் பெயர், சீதாராம் யெச்சூரி. ‘அவரிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்’ என்றார். ‘எங்கள் கட்சிக்கு எப்படிப் பேசினால் சரியாக இருக்கும்’ எனக் கேட்டு டி.கே.ரங்கராஜன் எம்.பி-யிடம் நோட்ஸ் எடுத்துக்கொள்வேன். அவர்களை விமர்சித்துப் பேசுவதற்கும் டி.கே.ரங்கராஜனே எழுதிக் கொடுப்பார். கனிமொழி, டி.கே.ஆர் ஆகியோர் அவையில் இருப்பார்கள். ஏதாவது சந்தேகமென்றால் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன்” என, மனதில் பட்டதை மறைக்காமல் பேசினார் நவநீதகிருஷ்ணன். அவர் பேசிமுடித்தபோது, கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது.
‘காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்’ எனச் சில காலத்துக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நவநீதகிருஷ்ணன் பாடியது ஏகத்துக்கும் கிண்டல் ஆனது. அந்த உரையை யார் எழுதிக் கொடுத்தார்கள் என விழாவில் அவர் சொல்லவில்லை. பி.ஜே.பி-யைத் திட்டிப் பேசும் கூட்டத்தில் துணிச்சலோடு பங்கேற்ற நவநீதகிருஷ்ணனைப் பாராட்டத்தான் வேண்டும்.
காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், “இந்தக் கூட்டத்துக்கு அ.தி.மு.க சார்பில் நவநீதகிருஷ்ணன் வந்திருப்பது, ‘அம்மாவின் ஆன்மாவே’ வந்திருப்பதுபோல இருக்கிறது. பி.ஜே.பி தூக்கியெறியப்பட வேண்டும் என இங்கிருக்கும் அனைவரும் முழங்குகிறோம். நவநீதகிருஷ்ணன், நீங்கள் பயப்படாதீர்கள். உங்களுக்குப் பதவிக்காலம் இருக்கிறது. உங்களை யாராலும் நீக்க முடியாது” எனக் கிண்டலடித்தார்.
கனிமொழி பேசியபோது, “நாடாளுமன்றத்தில் யெச்சூரி பேசும்போது, அவைத் தலைவரே ‘பெல்’ அடிக்க மறந்துவிடுவார். ‘யெச்சூரிக்கு மட்டும் அதிக நேரம் தருகிறார்களே’ எனச் சிலர் கேட்பார்கள். அதற்கு, ‘அவரைப்போல பேசுவதாக இருந்தால், நிச்சயமாக உங்களுக்கும் நேரம் தருவார்கள்’ என நான் சொல்வேன். ஆங்கிலத்தில் உரையாற்றும் யெச்சூரி, சிலருக்குப் புரிவதற்காக இந்தியிலும் பேசுவார். எனக்குக் கோபம் வந்து, அவரிடம் சண்டை போடுவேன். காரணம், எனக்கு இந்தி தெரியாது. யெச்சூரி பேசும்போது, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பேசுவதுபோலவே இருக்கும். கல்வியைப் பொதுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என ஒலித்த முதன்மையான குரல் அவருடையது. யெச்சூரி, தன் அனுபவங்கள் மூலமாகவே அரசை விமர்சிப்பார். ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நான் டெல்லியிலிருந்து கிளம்பி நெல்லைவரை சென்று திரும்பியபோதும், என் பாக்கெட்டில் வைத்திருந்த 2,000 ரூபாய் நோட்டுக்குச் சில்லறை கிடைக்காமல் அப்படியே இருந்தது’ என யெச்சூரி குறிப்பிட்டதை ஒட்டுமொத்த அவையும் ஆமோதித்தது. இப்போதைய சூழலில், நாடாளுமன்றத்தில் யெச்சூரி இருக்க வேண்டியது அவசியம். அவரை மீண்டும் அவைக்கு அனுப்புவது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசிக்க வேண்டும்” என்றார்.
இறுதியாக பேசிய யெச்சூரி, “பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, இந்திய மக்கள்மீது தொடுக்கப்பட்ட மிகக்கொடூரமான பண மோசடி நடவடிக்கை. பி.ஜே.பி-யினரின் ஊழல், நிச்சயம் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும்.
ஜி.எஸ்.டி-யால் பெருமுதலாளிகளுக்கு மட்டுமே நன்மை. மக்கள் போராட்டங்களைத் திசைதிருப்பவே பசுப் பாதுகாப்பு, தாஜ்மஹால் எனக் கிளப்புகிறார்கள். முஸ்லிம்களும், தலித்களும் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறார்கள். இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சீரழிக்கத் தொடங்கி விட்டார்கள். ‘பாரதம்’ என்ற அடிப்படையையும் நொறுக்குகிறார்கள். நாடாளுமன்றத்தில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்கான ஒரு படைவீரனைப்போல செயல்படுவேன். நாம் ஒன்றிணைய வேண்டியது அவசியம்” எனத் தீர்க்கமாகப் பேசிமுடித்தார்.
சிறந்த நாடாளுமன்றவாதிகளுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ள சூழலில், எம்.பி-க்களிடம் யெச்சூரியின் இந்த நூல் சேரவேண்டியது மிக அவசியம்.
- சி.மீனாட்சிசுந்தரம்
படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு, க.மீனாட்சி
ஜூ.வி.

கருத்துகள் இல்லை: