வெள்ளி, 27 அக்டோபர், 2017

ஸ்டார்ட்அப்புகள் ... தேவையான முதலீடு கிடைக்கும்பட்சத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைவோம்.

Karthikeyan Fastura : பினாக்கிள்(Finacle) என்ற வங்கிமென்பொருள் தான் இன்றும் பல வங்கி, பெருநிதி நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை அன்று உருவாக்கிய ஸ்டார்ட்அப் தான் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்று திகழ்கிறது. அது தான் இன்போசிஸ். இதை தயாரிக்கும்வரை உலகின் பார்வையில் இன்போசிஸ் ஒரு சிறுநிறுவனம் தான். இதுதான் அவர்களின் தலைஎழுத்தையே மாற்றிய மென்பொருள். முதலில் Core Banking மட்டிற்கும் கொண்டுவரப்பட்ட இந்த மென்பொருள் இன்று பல கிளைபரப்பி வங்கியின் அத்தனை துறையிலும் வியாபித்து இருக்கிறது. இதை தூக்கிவிட்டு இன்னொரு மென்பொருள் உள்ளே வரமுடியாது. ஆகவே வங்கிகள் இருக்கும் வரை பினாக்கிள் இருக்கும். அது இருக்கும்வரை இன்போசிஸ் இருக்கும். FinTech நிறுவனங்களின் தேவையை புரிந்துகொள்ளத்தான் இந்த கதையை கூறுகிறேன்.

மாறிவரும் இணைய சூழலும், மொபைல் பிளாட்பார்ம் வளர்வதும் நிதிசேவை தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவையை வெகுவாக கூட்டிவருகிறது. 90களில் இணையம் பிறந்தபோது வங்கி பரிவர்த்தனை, பங்கு பரிவர்த்தனை எல்லாம் கணினிமயமாக்கப்பட்டது. 2000ல் அவை சிறிய நெருக்கடியை சந்தித்தன. அதாவது தேதியில் வருடத்தை குறிக்க கடைசி இரண்டு இலக்கம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதனால் 99க்கு பிறகு 2000ஐ தொடும்போது கடைசி இரண்டு இலக்கம் மட்டுமே எடுக்கப்பட்டு 00 என்றடையும். இதனால் பல குழப்பங்கள் நிகழ இருந்தது. இதற்கு பெயர் தான் Y2K இதை சரிசெய்ய நிறைய மென்பொருள் வல்ல்லுனர்கள் தேவைப்பட்டது.
அதன்பிறகு Desktop Applicationல் இருந்து பயனாளிகளும் இணையத்தை பயன்படுத்த Web Applicaton பிறந்தது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நிதி பரிவர்த்தனைகளுக்காக Web Application உருவாக்கி கொடுத்த ஸ்டார்ட்அப்புகள் பல இன்று பில்லியன் டாலர் நிறுவனங்கள். Paypal, Yodlee, Mint, Avant, Prosper, Zenefits Credit Karma இப்படி ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.
இன்று இவை அடுத்தகட்டத்திற்கு நகரத் தொடங்கியிருக்கிறது. எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டது. அதன் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. ஆனால் அதற்கு போதுமான அளவிற்கு நிதி சேவை வழங்கும் ஸ்டார்ட்அப்புகள் இந்தியாவில் வரவில்லை.
சிக்கலான நிதி சேவையை புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல. நிதி சேவையில் அனுபவமும், தொழில்நுட்ப அறிவும் ஒருசேர வேண்டும். இதில் கூடுதலாக பயனாளிகளை பற்றிய புரிதலும் வேண்டும். நிதிசேவை ஸ்டார்ட்அப்புகள் தேவை அதிகம் இருந்தபோதும் நம்பகத்தன்மையை உருவாக்காமல் அவை வெற்றிபெற முடியாது.
அதற்காக தான் நாங்கள் ஆரம்பத்தில் ட்ரேடிங் வாடிக்கையாளர்களை அதிக அளவில் பெற உழைத்தோம். இன்று அது நல்ல பலனை கொடுத்திருக்கிறது. 75000 பயனாளிகளை தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
நிதிசேவை வழங்கும் ஸ்டார்ட்அப்புகள் தப்பிபிழைத்து இரண்டு வருடங்கள் தாக்குபிடித்தாலே அதன் மதிப்பு கூடிவிடுகிறது. 2017 முதல் காலாண்டில் மட்டும் இந்த துறையில் உள்ள ஸ்டார்ட்அப்புகளுக்கு செய்யப்பட்ட முதலீடு 20000 கோடிகளுக்கும் மேல் என்கிறது www.cbinsights.com தளத்தின் ஆய்வு முடிவுகள்.
இன்று மட்டுமல்ல என்றும் ஹாட் கேக் Financial Technology தான். காரணத்தை வள்ளுவர் அன்றே எழுதிவைத்துவிட்டார்.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்
மதிக்கத்தகாதவரையும் மதிக்கச் செய்யும் அவர்களிடம் சேர்ந்துள்ள செல்வத்தை போன்ற பிறிதொரு பொருள் இல்லை.
அத்தகைய பொருளை சாமானிய மக்கள் எங்கள் மொபைல் ஆப்பினை பயன்படுத்தி பொருள்வணிக(Commodity Market), பங்குச்சந்தை(Stock Market) சந்தையில் சரியான முறையில் ட்ரேடிங் செய்யும் போது பெற முடிகிறது. இதனை இன்னும் பல வசதிகளை சேர்த்து மெருகூட்டும் போது இதன் வீச்சு பல மடங்கு எட்டும். பங்குவணிக, பொருள்வணிக சந்தையில் உள்ள புரோக்கரேஜ் நிறுவனங்களுக்கு தேவையான மென்பொருளையும் உருவாக்கி வருகிறோம். இந்த துறையில் எங்களை போன்ற ஸ்டார்ட்அப்புகள் மிகக் குறைவு.
நாங்கள் மொபைல் ஆப் வெளியிட்டபோது எங்களின் போட்டியாளர்களை கண்டறிவது கடினமாக இருந்தது. காரணம் அப்போது அப்படியான ஆப் அன்று வரவில்லை. இன்று நிறைய வருகிறது, குறிப்பிடத்தக்கவகையில் மொபைல் ஆப்புகள் வருவதை கண்டு பயம் கொள்ளவில்லை, மாறாக மகிழ்கிறோம். இன்னும் கொஞ்சம் பொருளாதாரபலம் கிடைத்திருந்தால் அன்றே சாதித்திருப்போம். பரவாயில்லை இன்றும் சாதிக்க நிறைய இருக்கிறது. இது ஒரு பெரிய கடல். மீன்களுக்கு பஞ்சமில்லை. எங்கள் கட்டுமரம் என்றோ பயணிக்கத் தொடங்கி கடலுக்கும் மீன்களுக்கும் நன்கு பழக்கமாகிவிட்டது. தேவையான முதலீடு கிடைக்கும்பட்சத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைவோம்.

கருத்துகள் இல்லை: