வெள்ளி, 27 அக்டோபர், 2017

பொம்பளதானே?‘ Lipstick Under My Burkha',, பார்த்து முடித்த பிறகுதான் என்னவோ செய்கிறது.

nisaptham.com : என்ன இருந்தாலும் பொம்பளதானே? நான்கு பேர்கள் விதவிதமான பிரச்சினைகளைச் சந்தித்துவிட்டுக் கடைசியில் ஒரு புள்ளியில் இணைகிறார்கள் என்பது திரைக்கதை ஃபார்முலாக்களில் ஒன்று. சமீபத்தில் வந்த ‘மாநகரம்’ திரைப்படத்தை உதாரணமாகச் சொல்லலாம். சென்னை நகரில் ஒரேயிரவில் சிலருக்கு நடக்கும் பிரச்சினைகள்தான் திரைக்கதை. ஒவ்வொருவரையும் இன்னொருவருடன் சம்பவத்தின் வழியாகப் பிணைத்திருப்பார்கள். சம்பவங்களால்தான் இணைக்க வேண்டும் என்பதில்லை. உணர்வுப்பூர்வமாகவும் இணைக்க முடியும் என்பதற்கு ‘Lipstick Under My Burkha'வைச் சுட்டிக் காட்டலாம். 

அமேசான் ப்ரைமில் பார்த்த படம். 
நான்கு பெண்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள். நால்வரும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள்.
அம்மா அப்பாவின் சொற்படி நடக்கும் இசுலாமியப் பெண் ரெஹானா. பர்தா இல்லாமல் எங்கேயும் செல்ல அவளுக்கு அனுமதி இல்லை. வெளியில் பர்தாவும் உள்ளுக்குள் நாகரிகப் பெண்ணாகவும் திணறுகிறாள். கல்லூரியில் முதலாமாண்டு சேரும் அவள் தமக்குத் தேவையான லிப்ஸ்டிக், ஷூவையெல்லாம் பெரும் கடைகளில் இருந்து திருடுகிறாள். கல்லூரியில் ஜீன்ஸுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்கிறாள். கல்லூரி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது எல்லாவற்றையும் வெளியிலேயே விட்டுவிட்டு லிப்ஸ்டிக்கைத் துடைத்துவிட்டு பர்தா அணிந்தபடி நுழைகிறாள். இது ஒரு பாத்திரம்.  Plabita அஸாம் பெண் நடித்திருக்கிறாள்.
ஷிரின் இன்னொரு பெண். மனைவியை தமக்கான பாலியல் உருவமாக மட்டுமே பார்க்கிற கணவன் அவளுக்கு. அவனுக்குத் தெரியாமல் வேலைக்குச் செல்கிறாள். அவன் வெளிநாட்டில் இருந்து வரும் போதெல்லாம் கருக்கலைப்பும், கருத்தடையுமாக நைந்து போகிறாள். ஆணுறை கூட அணிய மறுக்கும் அவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பும் இருக்கிறது. அவளிடம் கொஞ்சிக் குலாவும் அவன் மனைவியிடம் இயந்திர கதியில் இயங்கிவிட்டு எழுந்து ஆடையை அணிந்து கொள்கிறவனாக இருக்கிறான். ஷிரின் வேலைக்குச் செல்கிறாள் என்பதைத் தெரிந்த பிறகு அவள் வேலைக்குச் செல்லக் கூடாது என்பதைக் கூட உறவின் போது முரட்டுத் தனமாக இடித்து ‘நீ பொம்பளை’ என்கிறவன் அவன். கொங்கனா சென், ஷிரினாக நடித்திருக்கிறார்.
லீலாவின் அப்பன் சிறுவயதிலேயே மனைவியையும் மகளையும் விட்டுச் சென்றுவிட லீலாவின் அம்மா நிர்வாண மாடலாக பணியாற்றுகிறார். லீலா அழகுக்கலையில் பயிற்சி பெற்றவள். அழகுக் கலைக் கூடத்தில் பணியாற்றுகிறாள். அவளுக்கு ஒரு நிழற்படக்காரனுடன் காதல். ஆனால் லீலாவின் அம்மா அவளை வேறொருவனுக்கு நிச்சயம் செய்து வைக்கிறாள். நிச்சயம் நடக்கும் நாளில் ஓர் அறைக்குள் லீலாவும் நிழற்படக்காரனும் உறவில் ஈடுபடுகிறார்கள். அம்மா வந்துவிடுகிறாள். ‘உனக்கு எவ்வளவுதான் நல்ல இடமா பார்த்தாலும் நீ இப்படியானவனைத்தான் தேடிப் போவ’ என்று அம்மா சலித்துக் கொள்கிறாள். நிச்சயதார்த்தத்துக்குப் பிறகும் நிழற்படக்காரனுடன் தான் அவள் நேசத்துடன் இருக்கிறாள். அவளது நிச்சயதார்த்தமும் காதலும் மேடும் பள்ளங்களைச் சந்திக்கின்றன. இது மற்றொரு பாத்திரம். 
உஷாவாக நடித்திருக்கும் ரத்னா பதக் மிக முக்கியமான பாத்திரம். கணவனை இழந்து ஒரு காலனிக்குப் பொறுப்பானவளாக இருக்கும் ஐம்பதுகளைத் தாண்டிய முதிர் பெண். அவளது நிறைவேறாத காமமும் வெளியுலகில் அவளுக்கு இருக்கும் பிம்பமும் மிகப்பெரிய முரண். தனக்கு நீச்சல் பயிற்சியாளனாக இருக்கும் இளைஞனுடன் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஃபோன் வழியான காம சல்லாபத்தில் ஈடுபடுவதும் அதே சமயத்தில் தனது அபிலாஷைகளை வெளியில் காட்டிக் கொள்ள முடியாமல் தவிப்பதுமாக தூள் கிளப்பியிருக்கிறார்.
நான்கு பெண்களும் எதிர்கொள்ளும் சம்பவங்கள், அவர்கள் சந்திக்கும் மனிதர்கள், உண்டாகும் பிரச்சினைகள் என்பதெல்லாம் வெவ்வேறாக இருப்பினும் இந்தச் சமூகம் அவர்களைப் பார்த்து ‘நீ பொம்பளதான்’ என்று சொல்வதுதான் நால்வரையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது. அதைத்தான் படமாக்கியிருக்கிறார் Alankrita Shrivastava. தில்லான திரைப்படமும் கூட. உடலுறவுக்காட்சிகளையும் முத்தக்காட்சிகளையும் இயல்பாக இணைத்திருக்கிறார்கள்- ஆபாசம் என்று ஒதுக்கிவிட முடியாதபடிக்கு.
ஆரம்பத்தில் படம் குறித்தான குறிப்புகளையும் விளம்பரங்களையும் பாரத்துவிட்டு பெண்ணியவாதியின் படம் என்று சற்று பயந்தபடிதான் இவ்வளவு நாட்களாகப் பார்க்காமல் விட்டு வைத்திருந்தேன். பெண்ணியவாதிகள் என்ற பெயரில் துள்ளி தமக்கான அடையாளத்தை மட்டும் கோருகிறவர்களையெல்லாம் பொருட்படுத்தவே வேண்டியதில்லை. 
இந்தத் திரைப்படத்தில் வரும் பாத்திரஙளைப் போன்ற பெண்களால்தான் நம் சமூகம் நிரம்பியிருக்கிறது. இவர்கள் நான்கு பேர்களுமே நம் சமகாலப் பெண்களின் முகங்கள். பிரதிநிதிகள்.
ஆசைகளையும் துக்கங்களையும் தமக்குள் புதைத்துக் கொண்டு இந்தச் சமூகம் ஒரு பெண் வெளியுலகில் எப்படி வாழ வேண்டும் என்று நிர்பந்திக்கிறதோ அதற்கு இம்மியும் பங்கமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிற பெண்கள்தான் இங்கே பெரும்பான்மையினர். தம்மைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் கண்களுக்குத் தெரியாத இரும்புச் சிறைக்குள் இருந்தபடி புன்னகைக்கும் பல கோடிப் பெண்கள்தானே நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள்? வெளிப்படையாகச் சொன்னால் இங்கே நாம் சுதந்திரம் என்று சொல்லிப் பெண்களுக்குக் கொடுத்து வைத்திருப்பதெல்லாம் வெறும் பாவனைதான்.
வேலைக்குச் செல்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். ஆனால் ஆயிரம் ரூபாயைச் சுதந்திரமாக எடுத்து ‘என் பணம்’ என்று செலவு செய்ய எத்தனை பெண்களுக்கு வாய்த்திருக்கிறது? ஏதோவொரு பயம் அவர்களுக்குள் இருந்து கொண்டேயிருக்கிறது. உடைபடாத விலங்கு அது. என்னதான் படித்திருந்தாலும் வேலைக்குச் சென்றாலும் பெண் என்றால் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். சமையலை அவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். இன்றைக்கும் முக்கால்வாசிப் பெண்களுக்கு இதுதானே சூழல்? ஐஸ்க்ரீம் கடையிலும் உணவகத்திலும் எந்தவொரு கட்டுப்பாடுமில்லாமல் நினைத்த நேரம் சென்று வருகிற வாய்ப்பும் வசதியையும் எத்தனை பெண்களுக்கு உருவாக்கி வைத்திருக்கிறோம்? 
‘இந்தக் காலத்துல பொம்பளைங்களுக்கு என்ன இல்லை?’ என்று கேட்பது எளிது. ஆனால் உண்மையை பெண்களால்தான் சொல்ல முடியும். அமத்தாவும் ஆத்தாவும் வாழ்ந்த காலத்தைவிடவும் இப்பொழுது நிலைமை முன்னேறியிருக்கிறது. அம்மாவுக்கும் அத்தைக்கும் இருந்ததைவிடவும் இன்றைய பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் நம் சமூகத்தின் ஆழ்மனங்களில் ஏறிக்கிடக்கும் துரு அப்படியேதான் இருக்கிறது. ‘என்னதான் இருந்தாலும் நீ பொம்பளதான’ என்கிற துரு. 
படம் பார்க்கும் போது தெரியவில்லை. பார்த்து முடித்த பிறகுதான் என்னவோ செய்கிறது.

கருத்துகள் இல்லை: