வெள்ளி, 23 ஜூன், 2017

நீட் தேர்வு முடிவுகள் ... தமிழகத்துக்கு மரண அடி .. முதல் 25 இடத்தில ஒருவர் கூட கிடையாது. திட்டம் போட்டு படு குழி ..

நீட் தேர்வு
விகடன் : தமிழக மாணவர்களை மிகவும் பதைபதைப்புக்கு உள்ளாக்கிய நீட் தேர்வின் முடிவுகள் இன்று (23.6.2017) வெளியாகியுள்ளன. எதிர்பார்த்தது போலவே, தமிழகத்துக்கு இத்தேர்வு சாதகமாக அமையவில்லை.
இந்தியா முழுவதும் 11,38,890 பேர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தார்கள். இதில் மாணவர்கள், 4,97,043. மாணவிகள் 6,41,839. திருநங்கைகள் 8 பேர். விண்ணப்பித்தவர்களில் 48,805 பேர் தேர்வை எழுதவில்லை. தேர்வு எழுதிய 10,90,085 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 6,11,539 பேர். மாணவர்களின் எண்ணிக்கை, 2,66,221. மாணவிகள், 3,45,313. தேர்வெழுதிய 8 திருநங்கைகளில் 5 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.  4,78,546 பேரை மருத்துவப் படிப்புக்குத் தகுதியில்லாதவர்கள் என்று நிராகரித்திருக்கிறது இந்தத் தேர்வு.
நீட் தேர்வை எழுதிய 80 சதவீதம் பேர் ஆங்கிலத்தில்தான் எழுதினார்கள். 10 சதவீதம் பேர் இந்தியில் எழுதினார்கள். 15,206 மாணவர்கள் மட்டுமே தமிழில் தேர்வை எழுதினார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் தேர்வை எழுதியுள்ளார்கள். ஆங்கிலம், இந்தி தவிர்த்து, குஜராத்தியில் 47,853 மாணவர்களும், பெங்காலியில் 34,417 மாணவர்களும் தேர்வை எழுதினார்கள்.

தேர்ச்சி பெற்றுள்ள 6,11,739 பேரில் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் 14,637 பேர் தான். எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள் 6,028 பேர். அகில இந்திய அளவில் பஞ்சாபைச் சேர்ந்த நவ்தீப் சிங் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்சித் குப்தா இரண்டாம் இடத்தையும், மனீஷ் முல்சந்தானி மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். நான்காம் இடத்தை கர்நாடகாவைச் சேர்ந்த சந்தீப்  சதானந்தா பிடித்திருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த டெரிக் ஜோசப் 6-வது இடத்தையும், தெலுங்கானாவைச் சேர்ந்த லக்கீம்ஷெட்டி அர்னாவ் திரிநாத் 12-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். டாப்-25 இடத்துக்குள் தென்னிந்தியாவைச் சேர்ந்த 7 பேர் மட்டுமே இடம் பிடித்திருக்கிறார்கள். தமிழக மாணவர் ஒருவர்கூட அதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது
நீட் தேர்வு முடிவுகள் வந்து விட்டன... அடுத்து?
தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்தே அடுத்து என்ன என்பது தீர்மானிக்கப்படும். நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதா ஜனாதிபதி மாளிகையில் தேங்கியிருக்கிறது. இப்போது ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவுபெறும் நிலையில், புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தச்சூழலில் தமிழக அரசின் சட்டம் குறித்து மத்திய அரசு சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளுக்கும் உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுவிட்டது.  தமிழக அரசு வழக்கம்போல பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தப்போகிறதா அல்லது, ஏதேனும் காரணத்தைச் சொல்லி, நீட் தேர்வு முடிவின்படியே மாணவர் சேர்க்கையை தொடங்கப்போகிறதா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை: