வெள்ளி, 23 ஜூன், 2017

கனிமொழி தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் .. கூவத்தூர், ஆர் கே,நகர் ...

மின்னம்பலம் : கூவத்தூரில் எம்.எல்.ஏ.-க்களுக்கு பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாகவும்
மற்றும் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்று திமுக சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்த போது பணப்பட்டுவாடா தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த, விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.-க்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக வெளிவந்த வீடியோ விவகாரம் குறித்தும், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களின் 9-பக்க புகார் மனுவை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் ஜூன் 23-ஆம் தேதி(இன்று) அளித்தார்.

தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், “ஆர்.கே.நகரில் பணம் விநியோகித்தவர்கள் பெயர்களை அதிகாரிகள் மறைத்துவிட்டனர். விஜயபாஸ்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் விநியோகித்தவர்கள் பெயர்கள் இருந்தன. ஆனால் அவர்கள் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாகவும் மற்றும் கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுக்கு பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்தத் திமுக சார்பில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய புகார் மனுவை ஆணையர் நசீம் ஜைதியிடம் அளித்துள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: