வியாழன், 22 ஜூன், 2017

கர்நாடகாவில் விவசாயக் கடன் தள்ளுபடி

கர்நாடகாவில் விவசாயக் கடன் தள்ளுபடி:  தமிழகத்தில்?
மின்னம்பலம் : தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வறட்சி நிலவுகிறது. கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு பயிர்கள் கருகிப்போனதால் தமிழகத்தில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
அண்மையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் தலைநகர் டெல்லி சென்று, மத்திய அரசு விவசாயிகளின் வங்கிக்கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் நடத்திய போராட்டத்தை தேசமே திரும்பிப் பார்த்தது. ஆனால், நமது பிரதமர் நரேந்திர மோடியோ விவசாயிகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதியை ஏற்று விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு தமிழகம் திரும்பினார்கள். ஆனால் தமிழக முதலமைச்சரோ, அவர் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை ஒரு மாத காலம் கடந்த பிறகும் இன்னும் நிறைவேற்றவில்லை.
டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கலாம். ஆனால், தமிழக விவசாயிகளின் போராட்டத்தால்தான் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களின் விவசாயிகளின் வாழ்க்கை நிலை அரசியல் கவனம் பெற்றது. இதைத்தொடர்ந்து, கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டு மடிந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் பிரச்னையைச் சில மாநிலங்கள் பரிசீலனை செய்தது.
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அம்மாநில விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தார். அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று ஜூன் 21ஆம் தேதி கர்நாடகா அரசு, அம்மாநில விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்களைத் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பதாவது: “வறட்சி பகுதிகளுக்கு செல்லும்போதெல்லாம், விவசாயிகள் தங்களின் விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதே கோரிக்கையை எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இதை ஏற்று கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனில் ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் 22 லட்சத்து 27 ஆயிரத்து 506 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ. 8,165 கோடி நிதி சுமை ஏற்படும். அதை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும். கர்நாடகா அரசு போல மத்திய அரசும், விவசாயிகள் தேசிய வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்துக்குத் தண்ணீர் தரக்கூடிய நிலையில் இருக்கும் கர்நாடகா அரசுகூட அம்மாநில விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு, ‘சிறு, குறு, பெரு விவசாயிகள் என்று பார்க்காமல் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறிய உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது.
தமிழக விவசாயிகளின் போராட்டத்தால் அண்டை மாநில விவசாயிகள் எல்லாம் கடன் தள்ளுபடி பெற்று மகிழ்ச்சியாக இருக்கும்போது போராடிய தமிழக விவசாயிகள், ‘இன்னும் தமிழக அரசு கடன் தள்ளுபடி செய்யுமா? நமது கவலை தீருமா?’ என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: