திங்கள், 23 ஜனவரி, 2017

ஆந்திரா விரைவு ரயில் விபத்து 39 பேர் மரணம் .. பலர் காயம்

ஆந்திர மாநிலம், குனேரு ரயில் நிலையம் அருகே ஜக்தல்பூர்- புவனேசுவரம் செல்லும் ஹிராகண்ட் விரைவு ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டதில் 39 பேர் பலியாகினர். 69 பேர் காயமடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரிலிருந்து, ஒடிஸா மாநிலம் புவனேசுவரம் நோக்கி ஹிராகந்த் விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் ஆந்திரம், ஒடிஸா, பிகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் அதிக அளவில் பயணித்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள குனேரு ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த ரயிலின் 9 பெட்டிகளும், ரயில் என்ஜினும் எதிர்பாராதவிதமாக தடம் புரண்டன.

மீட்புப் பணிகள் தீவிரம்: தகவலறிந்த ரயில்வே போலீஸாரும், மாவட்ட நிர்வாகத்தினரும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை மேலும் விரைவுப்படுத்த தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 100 வீரர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒடிஸா பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவ இடம் விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் 39 பயணிகளின் உயிரிழப்பை உறுதி செய்தனர். மேலும் 69 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் விசாகப்பட்டினம், பார்வதிபுரம் ஆகிய பல்வேறு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் சேவைகள் பாதிப்பு: இந்த விபத்தால் ராயகடா மற்றும் விஜயநகரம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.
மாவோயிஸ்டுகளின் சதியா?: குனேரு ரயில் நிலைய தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று ரயில்வே துறை சந்தேகிக்கிறது.
இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
ஹிராகண்ட் விரைவு ரயில் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் அவ்வழியாக சென்ற மற்ற ரயில்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
எனவே விபத்து நடைபெற்ற பகுதி நக்ஸல் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதாலும், குடியரசு தினம் நெருங்குவதாலும் அமைதியை சீர்குலைக்க தீவிரவாதிகள் தீட்டிய சதியா? அல்லது தண்டவாளத்தை பராமரிப்பதில் அதிகாரிகளின் கவனக் குறைவா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒடிஸா மறுப்பு: ஹிராகண்ட் ரயில் தடம் புரண்டதன் பின்னணியில் நக்ஸல்களின் சதி இருப்பற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று ஒடிஸா மாநில காவல் துறை டிஜிபி கே.பி. சிங் தெரிவித்தார்.
பிரதமர் இரங்கல்: இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒடிஸா, ஆந்திர முதல்வர்கள் இரங்கல்: ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
அதேபோல் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.
மீட்புப் பணிகள், விபத்து நடந்த பகுதியில் உள்ள சூழல் ஆகியவை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், சந்திரபாபு நாயுடு தொலைபேசி வாயிலாக விவரித்தார்.
மத்திய அரசு, ஆந்திர அரசு இழப்பீடு: விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். அதேபோல், ஆந்திர அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.  தினமணி

கருத்துகள் இல்லை: