சனி, 28 ஜனவரி, 2017

வேளாசேரி ரயில் நிலைய டிக்கெட் பரிசோதகரையும் (டி டி ஆர்) அடித்து உள்ளே தள்ளிய போலீஸ் ..

போலீசின் அடிக்கு டிடிஆரும் தப்பவில்லை; ஜெயாவிடம் பரிசு, இப்போது சிறையில்! மெரினா போராட்டத்தை முடிப்பதற்காக போலீஸ் நடத்திய வன்முறைகளைத் தொடர்ந்து, திடீரென மின்ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. வேளச்சேரி ரயில் நிலையத்தில் டி.டி.ஆர். ஆகப் பணியாற்றும் மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்த பிரேமானந்தன், ரயில்கள் நிறுத்தப்பட்டதை அடுத்து அதிகாரிகள் வீட்டுக்குச் செல்லும்படி சொல்ல, வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். அப்போது அவருக்கு நடந்ததை நேரில் பார்த்த அவரின் தாய், கண்ணீருடன் விவரிக்கிறார். "போலீஸ்காரங்க கும்பலா எங்க ஏரியாக்குள்ள வந்தாங்க. தெருவில இருந்த வண்டிய எல்லாம் ஒடச்சுட்டு வந்தாங்க. அப்போதான் என்னோட பையன் வீட்டுக்கு வந்தான். வண்டிய போலீஸ்காரங்க அடிக்கப் போறாங்கனு தள்ளிப்போய் நிறுத்த... அவன அங்கவந்த போலீஸ்காரங்க முரட்டுத்தனமா அடிச்சாங்க.


தீவிரவாதி, சமூகவிரோதின்னு சொல்லி அடிச்சாங்க. அவனோட சின்ன வயசுல இருந்து இந்தியாவுக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் நீச்சல் போட்டியில விளையாடி பதக்கம் வாங்கித் தந்திருக்கான். அவன் சமூக விரோதியா? முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாகிட்ட வாழ்த்து வாங்கிருக்கான். அவன் தீவிரவாதியா? நல்லா விளையாடிய அவனுக்கு ரயில்வேயில வேலை குடுத்தாங்க. அங்கயும் போயி நிறைய விருது வாங்கியிருக்கான். அரசு வேலையில இருக்கற அவனை இந்த போலீஸ் அடிச்சு இழுத்துட்டுப் போயிருக்கு" என்கிறார்.

அடுத்த தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன், இவர் அஞ்சல்துறையின் ஊழியர். அன்றைய தினம் கருப்பு நிறத்தில் உடை அணிந்திருந்த ஒரே காரணத்திற்காக ரத்தம் வரும்வரை அடித்திருக்கிறது போலீஸ். அவருக்கு நடந்த கொடூரத்தைப் பார்த்தும் தடுக்கமுடியாமல் மாடியின்மேல் இருந்த உறவினர்கள் நம்மிடம்,’""அவரு சொல்ல வந்ததை எதையுமே கேட்காம போலீஸ்காரங்க பெரிய தடியால அவரோட கால் உடையிற வரை அடிச்சாங்க. அப்புறமா அங்கு இருக்கிற காவாய்க்குள்ள அவரை தூக்கிவீசிட்டுப் போயிட்டாங்க. அவங்க போன அப்புறம் நாங்க அவர வெளிய எடுத்துட்டு வந்தோம்.

ரொம்ப வலியால் துடிச்சாரு. மீன்பாடி வண்டியில ஏத்திக்கினு ஆஸ்பத்திரிக்குப் போனோம். அப்போவும் போலீஸ்காரங்க மறிச்சுக்கினு தடுத்தாங்க, சார்'' என்கிறார்கள். காக்கிகளின் வெறியாட்டத்தை மொபைல் போனில் படம்பிடித்து, பரப்பிவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களையும் குறிவைத்து இழுத்துச்சென்று கொடூரமாகத் தாக்கியிருக்கிறார்கள். தாக்கப்பட்டிருக்கும் பிரேமானந்தனை தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்காமல் புழல் சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை.  நக்கீரன்

கருத்துகள் இல்லை: