செவ்வாய், 24 ஜனவரி, 2017

கமிஷனர் ஜோர்ஜ் ஆணையின்படி போலீஸ் பகல் முழுதும் ஆடிய கோரத்தாண்டவம்.. சமுகவலையில் ...

சிவசங்கர் எஸ்.எஸ்:   டியர் மிஸ்டர் கமிஷ்னர் ஜார்ஜ்,
காவல்துறை தோழர்களின் நட்பு, பாசத்தை ஆறு நாட்களாக பார்த்து சொக்கி போயிருந்த மாணவர்கள் மற்றும் தமிழ்மக்களை இன்று ஒரே நாளில் எதிரி ஆக்கி விட்டீர்கள். இந்தக் கசப்பு லேசில் மறையாது.
ஒரு சின்ன கூட்டம் நடத்தனும்னா கூட மைக்செட் லைசென்ஸ்ல ஆரம்பிச்சி ஏகப்பட்ட ஃபார்மாலிட்டியோட, விண்ணப்பிச்சாலே அனுமதி தர உங்க துறை அவ்வளவு இழுத்தடிப்பீங்க.
ஆனா இந்த முறை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் மெரீனாவில் துவங்கிய போது இதை விண்ணப்பிக்க நேரம் இல்லை. காரணம், அலங்காநல்லூரில் நடந்த போலீஸ் நடவடிக்கையால் கோபப்பட்ட இளைஞர்கள் தானாக மெரீனாவில் கூடினார்கள். யாரும் தலைமை ஏற்கவில்லை. யாரும் கூட்டி வரவில்லை. போராட்டக் களம் சூடானது.
பிறகு மைக் கட்டி பேச ஆரம்பித்தார்கள். அப்போது உங்கள் துறை, மைக் லைசென்ஸ் கேட்கவில்லை, பர்மிஷன் வாங்கவில்லை என்று சொல்லவில்லை. பொறுமையாக இருந்தீர்கள். காரணம், அரசு உங்களை அமைதி காக்க சொன்னது. அவர்கள் சொன்னாலும் நீங்கள் சட்டப்படி நடந்துக் கொண்டிருக்க வேண்டுமல்லவா?

இல்லை, சட்டப்படி நடக்கவில்லை. அப்புறம் இன்று காலை மட்டும் சட்டத்தை சொல்லி அவர்களை எப்படி வெளியேற சொல்லலாம்?
ஆறு நாட்கள் பொறுமை காத்த காவல்துறையால், சட்டம் நிறைவேறும் இந்த ஒரு நாள் பொறுமை காக்க முடியவில்லையா? இத்தனை நாள் அமைதியாக நடந்த போராட்டம் இன்று பகலிலா வன்முறையாகி இருக்கும்?
காரணம் கேட்டால், 'வேறு குழுக்கள் நுழைந்து விட்டார்கள்' என்று சொல்கிறீர்கள். உளவுத்துறைக்கு தான் தெரியுமே, யார் 'வேறு குழுக்கள்' என்று. அவர்களை மாத்திரம் ஒதுக்கி கைது செய்திருக்கலாமே?
அப்படி வன்முறை செய்யும் 'வேறு குழுக்கள்' இருந்தது என்றால், நீங்கள் பகல் முழுதும் ஆடிய கோரத்தாண்டவத்திற்கு மெரீனாவில் பதில் கொடுத்திருப்பார்களே. ஆனால் அவர்கள் அமைதியாக கடல் ஓரமாக சென்று நின்று விட்டார்களே?
அந்த வேறு குழுக்களால் தான் வன்முறை என்று சொல்கிறீர்கள், அவர்கள் தான் வெளியேறவில்லை என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் இன்று கடற்கரையில் தொடர்ந்து போராடியவர்களை தானே 'வேறு குழுக்கள்' என்று சுற்றி வளைத்து சொல்கிறீர்கள். அந்த 'வேறு குழுக்களை' கைது செய்யாமல் விட்டு விட்டீர்களே? கைது செய்து அடையாளப் படுத்தி இருக்கலாமே?
நீதிபதி அரிபரந்தாமனை விளக்கம் அளிக்க வைத்து, ராகவா லாரன்ஸை பேச வைத்து ஏன் 'வேறு குழுக்களை' கஷ்டப்பட்டு கலைத்து அனுப்பினீர்கள்? கைது செய்திருந்தால் உங்கள் 'வேறு குழுக்கள்' கட்டுக்கதை நாறியிருக்கும். அத்தனை பேரும் உண்மையான மாணவர்கள்.
அவர்களை கலைக்க அரசாங்கம் இட்ட உத்தரவை நிறைவேற்ற, உங்கள் துறையில் உள்ளவர்களே ஆட்டோ கொளுத்துகிறார்கள், வீட்டைக் கொளுத்துகிறார்கள்.
அது வலைதளத்தில் வெளி வந்த உடன் பகிர்பவர்களை மிரட்டுகிறீர்கள். நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் உலகம் முழுதும் பகிர்ந்துகொள்ள லட்சக் கணக்கானோரை தேட வேண்டும். அதையும் செய்யுங்கள் பார்ப்போம்.
சட்டப்படி தான் நடந்து கொள்ளவில்லை. மனசாட்சிப்படியாவது நடந்து கொள்ளுங்கள்.
# ஓய்வு காலத்தில், மனசாட்சி கொல்லாமல் இருக்கும் !  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: