செவ்வாய், 13 செப்டம்பர், 2016

கர்நாடக தமிழர்களின் கறுப்பு தினங்கள்!



வாரத்தின் முதல் நாளான நேற்றைய திங்கட்கிழமை இத்தனை அவலத்தோடு முடியும் என்று கர்நாடக தமிழர்கள் நினைக்கவில்லை. இளம் தம்பதிகள் அவர்கள். இருவருமே பெங்களூரு ஆங்கிலக் கல்லூரி ஒன்றின் பேராசிரியர்கள். தங்களின் தமிழக பதிவெண் கொண்ட காரில் வந்தபோது வழிமறித்த கும்பல் அவர்களை இறக்கிவிட்டதோடு அவர்களிடம் இருந்த பேக், பர்ஸ், வாட்ச் உள்ளிட்ட சகலத்தையும் கழற்றி வாங்கிக்கொண்டு துரத்த, உயிர் தப்பினால் போதும் என்று ஓடியிருக்கிறார்கள். நல்லவேளை, அவர்களின் வாகனம் எரிக்கப்பட்ட இடத்துக்கு அருகில் தன் சக கல்லூரி பேராசிரியரின் வீடு இருக்க, அங்கே போய் தப்பியிருக்கிறார்கள்.


பேருந்துகளில் பயணிக்கும் தமிழ் மக்கள் தங்களின் அருகில் இருப்பவர்களிடம்கூட பேசாமல் பயணித்தார்கள். ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கும் தங்களின் செல்போன்களை எடுக்கக்கூட இல்லை. அந்த அழைப்பை எடுத்தால் தமிழில் பேசியாக வேண்டும். காரணம், பெங்களூருவில் இருக்கும் சொந்தங்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள தமிழகத்திலிருந்து சென்ற போன்கால்கள் தான் அத்தனையும். ஏற்கனவே ஒரு நாள் பந்த் போராட்டம் நடந்த நிலையில் இன்றும் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ள இந்த பந்த் போராட்டத்தை பாஜக உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சிகளும் ஆதரித்துள்ள நிலையில், தமிழர்கள் கடந்த பல நாட்களாக வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.

அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் அசம்பாவிதம் எதுவும் இல்லை. ஆனால், இயல்பு வாழ்க்கை தொலைந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: