வெள்ளி, 16 செப்டம்பர், 2016

திமுக: விதை விருட்சமான வரலாறு! - பகுதி 1


மின்னம்பலம்.காம் : திமுக உருவான தினம் இன்று. திமுக-வைத் தவிர்த்து விட்டு தமிழக வரலாற்றை பேசவோ, எழுதவோ முடியாது. தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்தில் இருந்து அறிஞர் அண்ணாவும் வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில் செப்டம்பர் 17, 1949இல் கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என முடிவெடுத்தனர். அன்று தொடங்கி இன்று வரை தமிழக மக்களின் வலுவான மக்கள் இயக்கமாக நிற்கிற திமுக-வின் வரலாறு என்ன?
திராவிட இன மக்களின் உரிமைகளை, தன்மான உணர்வுகளை, தனித்தன்மையை, தன்னிகரற்ற சிறப்பினைப் பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், நாடு வாழ, நலிவுகள் தீரப் போராடவும், திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) 1949 செப்டம்பர் 17இல் அறிஞர் அண்ணா என அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் சி.என்.அண்ணாதுரை தொடங்கினார். தி.மு.கழகத்தின் வரலாறு என்பது தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கத்தின், மறுமலர்ச்சி இயக்கத்தின் வரலாறாகும்.
தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் பாதுகாத்து மேம்படுத்த ஓர் அரசியல் இயக்கம் நடத்திய பேராட்டங்களின் தொகுப்பாகும்.
தீக்கொழுந்து

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழர் எனப் போற்றப்படும். அறிஞர் அண்ணா அவர்கள் மேட்டுக்குடியில் பிறக்கவில்லை. ஆனால், கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் நாவன்மை பெற்றிருந்தார். ‘சங்கீதம் கேட்பது போல் இருக்கிறதே’, ‘என்ன வளம்! என்ன அழகு!’, ‘மடை திறந்தாற்போல பேச்சு’, ‘அது குற்றாலத்து அருவி கொஞ்சு தமிழ்ச்சிந்து’ - இப்படியெல்லாம் அவர் பேச்சுக்குப் படித்தவர் மத்தியிலும் பாமரர் மத்தியிலும் பாராட்டுரைகள் குவிந்தன. மடை திறந்தாற்போல் தமிழிலும், ஆங்கிலத்திலும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளால் பண்டைய தமிழ் நாகரிகத்தின் சிறப்பினை, தமிழ் மொழியின் தொன்மையை நினைவுப்படுத்தினார். லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். சினிமா, நாடகம், பத்திரிகை, மேடை ஆகிய ஊடகங்களின் வழியாகச் சமுதாயத்தை தட்டி எழுப்பினார். அறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’, டாக்டர் கலைஞரின் ‘முரசொலி’ ஆகிய ஏடுகள் மக்களிடையிலும், கட்சி தொண்டர்களிடையிலும் புதிய விழிப்புணர்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தி தி.மு.கழகத்தின் வாளாக கேடயமாக வலம் வந்தன. இத்தனைக்கும் மேலாக, கழக உறுப்பினர்களிடையே ‘அண்ணன் – தம்பி’ என்ற பாசப்பிணைப்பை ஏற்படுத்தின. ஆலமரத்தின் சிறு விதைப்போல முளைத்தெழுந்த திமுக மாபெரும் வளர்ச்சியுற்று, மதக்கோட்டைகளை தகர்த்தது. லட்சக்கணக்கான ஏழைகளின் நிழலாகப் பாதுகாப்பு அரணாக அமைந்தது. பெரியாரை விட்டுப் பிரிந்தாலும், அவரின் லட்சியங்களையும், நோக்கங்களையும் அடைய தி.மு.கழகம் அரசியலமைப்பு விதிகளுக்குட்பட்டு போராடி வந்தது. அறிஞர் அண்ணா குறிப்பிட்டது போல், தி.மு.கழகமும், திராவிட கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக சமுதாய சீர்கேடுகளுக்கு எதிராகப் போராடின.
உதய சூரியன்
கழக லட்சியங்களை நியாயமான, சட்டத்துக்குட்பட்ட முறையில் அடைய போராட வேண்டும் என்ற நோக்கத்துடன், அறிஞர் அண்ணா அவர்கள் தனது தம்பியரை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரம் மூலம் கட்டுக்கோப்பான வழியில் நடத்திச் சென்றார். இதனால்தான், திமுக ஒரு மக்கள் இயக்கமாக மாறி பதினெட்டே ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு வளர்ச்சிப் பெற்றது. உலகத்தில் எந்த அரசியல் இயக்கமும் இத்தகைய வளர்ச்சியைப் பெற்றதில்லை.
சட்டமன்றத்துக்குள் சென்றால் மட்டுமே ஜனநாயக வழியில் கழக லட்சியங்களை நிறைவேற்ற முடியும் எனக்கருதி அறிஞர் அண்ணா, 1956இல் திருச்சி திமுக மாநில மாநாட்டில் அதற்கான ஒப்புதலை கட்சித் தொண்டர்களிடம் பெற்றார். 1957 பொது தேர்தலில் திமுக 15 சட்டமன்ற இடங்களிலும், இரண்டு நாடாளுமன்ற இடங்களிலும் வெற்றிப் பெற்றது. அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகிய முன்னணி தலைவர்கள் வெற்றிவாகை சூடினர். அசைக்க முடியாது என ஆணவ முரசம் கொட்டிய காங்கிரஸ் கோட்டையில் கீறல்கள் உருவாயின. இவ்வெற்றியால் திமுக-வுக்கு ‘உதயசூரியன்’ தேர்தல் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.
1959 சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றது. 100 பேர் கொண்ட மாநகராட்சி மன்றத்தில் திமுக 45 இடங்களை பெற்றது. திமுக உறுப்பினர் அ.பொ.அரசு, கழகத்தின் முதல் மேயராகப் பதவி ஏற்றார். தமிழகத்து அரசு கட்டிலிலும் தி.மு.கழகமே அமரப்போகிறது என்பதற்கு இது ஓர் அறிகுறியாக அமைந்தது.

டாக்டர் கலைஞர் அவர்களைத் தலைவராகவும் பேராசிரியர் க.அன்பழகன் பொதுச் செயலாளராகவும் ஆற்காடு வீராசாமி பொருளாளராகவும் கொண்ட மாபெரும் இயக்கமான திமுக-வுக்கு 65 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 60,000 கிளைக்கழகங்கள் உள்ளன. உட்கட்சி தேர்தல்களை காலந்தவறாது ஜனநாயக வழியில் நடத்தும் ஒரே இயக்கம் திமுக ஆகும். பல்வேறு சமூகத்தினரின் நலம் காக்க தொண்டர், இளைஞர், மகளிர், மாணவர், தொழிலாளர், நெசவாளர், உழவர், ஆதிதிராவிடர், மீனவர் என்று தனித்தனி அணி அமைத்து பணிபுரிகிறது. சென்னையில் கம்பீரமாக நிற்கும் கழகத்தின் தலைமைச் செயலகம் ‘அண்ணா அறிவாலயம்’ கலைஞரின் தளரா உழைப்புக்கும், தொண்டர்களின் ஆதரவுக்கும் தலையாய சான்றாகும்.
தி.மு.கழகத்தின் இம்மகத்தான வளர்ச்சிக்கும், சாதனைக்கும் முதன்மை காரணங்களை ஏழை எளிய மக்களின் நலனை தனது லட்சியமாக ஏற்றது. அவர்களோடு தொடர்ந்து பணியாற்றியது. அவர்களுக்காகப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பல நடத்தியது. அவர்களின் தூய தொண்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டது.
கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவிக்கவும், அத்தொழிலாளர்களின் துயர் துடைக்கவும் அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோருடன் மற்ற முன்னணி தலைவர்கள் 1953இல் கைத்தறித் துணிகளை தோளிலே சுமந்து வீதிகளில் விற்று நிதி திரட்டினர். கழகத்தினர் அனைவரும் கைத்தறி ஆடையே அணிய முடிவு எடுக்கப்பட்டது. தஞ்சையில் 1954இல் ஏற்பட்ட புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் கண்ணீர் துடைக்கக் கழகம் நிதியும், உடையும் வழங்கியது. 1962இல் சீனா ஆக்கிரமிப்பின்போது காங்கிரஸ் அரசுக்கு திமுக முழு ஆதரவு அளித்தது. மாநாடுகள் நடத்தி தேசிய பாதுகாப்புக்கு பெரும் நிதி திரட்டி அளித்த பெருமை திமுக-வுக்கு மட்டுமே கிடைத்தது. இத்தனைக்கும் மேலாக கட்சியின் நலனைவிட நாட்டு நலனை முன்னிறுத்தி, அறிஞர் அண்ணா திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டார். திமுக-வின் தேசியப் பார்வையில் இது ஒரு திருப்புமுனையாகும்.
மக்களின் நலனை பேணும் பாதுகாவலனாக, அவர் இடர் துடைக்க அறவழியில் போராட திமுக என்றுமே தயங்கியதில்லை. கழகம் தொடங்கிய ஐந்தாம் ஆண்டிலேயே 1953இல் மும்முனைப் போராட்டம் நடத்தியது. ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒரு முனையிலும், தமிழர்களை ‘முட்டாள்கள்’ என்று அவதூறு செய்த பிரதமர் பண்டித நேரு அவர்களைக் கண்டித்து இரண்டாவது முனையிலும், டால்மியாபுரம் புகைவண்டி நிலையத்தின் பெயரை மாற்றிக் கல்லக்குடி என்று தமிழ் பெயரிட வேண்டும் என்று மூன்றாவது முனையிலும் திமுக போர்க்களங்களை அமைத்தது. அந்த அறப்போரில், கல்லக்குடி களத்துக்கு, கலைஞர் படைத் தலைவர். ஜூலை 15 ஒரே நாள் போரில், ஆறு உயிர் களப்பலி, அநேகர் சித்திரவதை, 5000 பேர் சிறைக்காவல். கலைஞரின் சிறை யாத்திரை தொடங்கிவிட்டது. கழகத்தின் தியாக வரலாறு தொடங்கியது.
இந்தி எதிர்ப்பு

‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்ற உணர்வில் ஊறிப்போன தமிழர்களின் இந்தி எதிர்ப்பு நீண்ட வரலாறு கொண்டது. இன்றைய இந்தியின் தாய்மொழியான வடமொழி (சமஸ்கிருதம்) தமிழ் மீது ஆதிக்கம் செலுத்தவும், அடிமைப்படுத்தவும் பலமுனைகளில் முயன்று தோல்வியையே தழுவியுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆசியுடன் இந்தி ஆதிக்கம் தமிழகத்தில் நுழைய முற்பட்டது. 1938இல் ‘சென்னை ராஜதானி’ என அன்று அழைக்கப்பட்ட தமிழகத்திலுள்ள பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடமாக புகுத்தப்பட்டது. இதனை எதிர்த்து தந்தை பெரியார் தலைமையில் தமிழறிஞர்களும், மதத் தலைவர்களும் கட்சி வேறுபாடின்றி அணிவகுத்து நின்றனர். அறிஞர் அண்ணா, கி.ஆ.பெ. விசுவநாதம், ‘வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்! வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்!’ என சங்கநாதம் புரிந்தனர்.
தமிழன் தொடுத்த இப்போரில் தாளமுத்து, நடராசன் என்ற இரு இளைஞர்கள் இந்தியை எதிர்த்து சிறை புகுந்து சிறைக்கோட்டத்தில் பிணமாயினர். தமிழன், மொழிப் போராட்டத்தின் கொடியை அந்த வீரர்களின் குறுதியிலே தோய்த்து விண்முட்ட பறக்க விட்டான். இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி மறைமுகமாகவும், புறவாசல் வழியாகவும், இந்தியைப் புகுத்த முனைந்தது. தேசிய மொழி, பொது மொழி, இணைப்பு மொழி, நிர்வாக மொழி, ஆட்சி மொழி என்ற பல்வேறு பெயர்களில் இந்தியை திணிக்க முனைந்தது. ஆனால், அறிஞர் அண்ணாவின் தலைமையில் தி.மு.கழகம் பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி இந்தியை எதிர்த்தது. தமிழைக் காத்தது.
இந்தி எதிர்ப்பு வரலாறு, 1964-க்குப்பின் 1984இல் மீண்டும் திரும்பியது. ஆனால், இம்முறை போராட்டம் எதிரிகளுக்கு எதிராக அல்ல. துரோகிகளுக்கு எதிராக எனலாம். புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் ராஜீவ் காந்தி அரசு ‘நவோதயா’ பள்ளிகள் திறக்கவும் அங்கு இந்தி மட்டுமே போதனை மொழியாக அமையவும் திட்டம் வகுத்து, தாராளமான நிதி ஒதுக்கீடு செய்தது. நிதியுதவி மூலம் இந்தியை நாடெங்கும் பரப்ப முனைந்த ஆட்சியாளர் சூழ்ச்சியை தி.மு.கழகம் கண்டு கொண்டது. எனவே 1963இல் அண்ணா போராடிய அதே நாளில் அதாவது 1986 நவம்பர் 17இல் அரசியல் சட்டப்பிரிவு பகுதி 17ஐ பொது மேடைகளில் எரித்திட தீர்மானம் நிவைவேற்றியது.
தொடரும்...

கருத்துகள் இல்லை: