சனி, 17 செப்டம்பர், 2016

அருணாச்சல் ஆட்சி மீண்டும் கவிழ்ந்தது 45 எம் எல் ஏக்களில் 43 எம் எல் ஏக்கள் கட்சி மாறினர்!


இட்டாநகர்: அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடந்து வரும் அருணாச்சலப் பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு உட்பட, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், 43 பேர் கட்சியில் இருந்து விலகினர்;
அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தனர். இதனால், அம்மாநிலத்தில், காங்., மீண்டும் ஒருமுறை ஆட்சியை, 'அம்போ'வென பறிகொடுத்து, படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, அருணாச்சலப் பிரதேசத்தில், முதல்வர் நபாம் துகி தலைமையில், காங்., ஆட்சி நடந்து வந்தது. சட்டசபையில் மொத்தமுள்ள, 60 பேரில், காங்கிரசுக்கு, 45 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். முதல்வர் நபாம் துகிக்கு எதிராக, ஜனவரி மாதம், 30 எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர். இதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து, ஜனாதிபதி ஆட்சி அமலானது. காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., ஆதரவுடன், கலிகோ புல் தலைமையில், புதிய அரசை அமைத்தனர்.


இதை எதிர்த்து, முன்னாள் முதல்வர் நபாம் துகி, சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றார்.வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'ஜனாதிபதி ஆட்சியை

அமல்படுத்தியது செல்லாது' என, ஜூலையில் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, நபாம் துகி, மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

ஆனால், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும் முன்பே, அவர் பதவி விலகினார். இதையடுத்து, கலிகோ புல் உட்பட, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும்,மீண்டும் காங்கிரசுக்கு திரும்பினர்; காங்கிரசின், 45 எம்.எல்.ஏ.,க்களும் ஒன்று கூடி, முன்னாள்முதல்வர், டோர்ஜி காண்டுவின் மகனான, பெமா காண்டுவை, முதல்வராக தேர்ந்தெடுத்தனர்.

அவரது ஆட்சி நடந்து வந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில், நேற்று, மீண்டும் அரசியல் திருப்பம் ஏற்பட்டது. முதல்வர் பெமா காண்டு தலைமையில், 43 காங்., - எம்.எல்.ஏ.,க் கள் கட்சியில் இருந்து, நேற்று விலகினர்; அவர்கள் அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தனர்.

காங்கிரசில் தற்போது, முன்னாள் முதல்வர் நபாம் துகி மட்டுமே எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார்; மற்றொருவர், முன்னாள் முதல்வர் கலிகோ புல். அவர், ஆகஸ்ட் மாதம், தற்கொலை செய்து கொண்டார். இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எதிர்க்கட்சியான பா.ஜ.,வுக்கு, 11 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

கடந்த ஒன்பது மாதங்களில், அடுத்தடுத்து அரசியல் திருப்பங்களை கண்ட அம்மாநிலத்தில், காங்., மீண்டும் ஒருமுறை ஆட்சியை பறிகொடுத்து உள்ளது.
கலிகோ புல் தற்கொலை:


பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன், முதல்வரான கலிகோ புல், பின், சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பதவியிழந்தார்.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி, முதல்வர் பதவியை இழந்த சோகம், குடும்ப பிரச்னை என, மன உளைச்ச லுக்கு ஆளாகி இருந்ததால், அவர் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியது.

அடுத்தது என்ன?


காங்கிரசில் இருந்து விலகிய, 43 எம்.எல்.ஏ.,க் கள், அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர். எனினும், அந்த கட்சி பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க் கள், 11 பேர் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடை பெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

''நாங்கள், அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சியுடன், காங்கிரசை இணைத்து விட்டோம். சபாநாயகரை சந்தித்து விபரங்களை கூறி உள்ளோம்.

- பெமா காண்டு, முதல்வர், அருணாச்சல பிரதேசம்

''காங்., இந்த விவகாரத்தில், பா.ஜ.,வை குறை சொல்லி வந்தது. ஆனால், பா.ஜ.,வுக்கு எந்த தொடர்பும் கிடையாது. காங்., - எம்.எல்.ஏ.,க்கள், கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். ஐந்து நாட்களாக, கட்சி தலைமையை சந்திக்க முடியாததால், அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

- கிரண் ரிஜிஜு மத்திய அமைச்சர், பா.ஜ.,  தினமலர்.com

கருத்துகள் இல்லை: