சனி, 17 செப்டம்பர், 2016

சாதனை: நேற்று பிச்சைத் தொழில்; இன்று கேம்ப்ரிட்ஜ் படிப்பு!


minnambalam.com : ‘கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற கூற்றுக்கேற்ப சென்னை தெருக்களில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஜெயவேல் (22), இப்போது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது பொய்யாகவில்லை. ஏனெனில் ஜெயவேல் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் சோதனை நிறைந்த தன் வாழ்வை சாதனை மிகுந்ததாக மாற்றியுள்ளார்.
விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால், நெல்லூரில் இருந்து சென்னைக்கு ஜெயவேலுவின் குடும்பத்தினர் வந்தனர். எந்த வேலையும் கிடைக்காத நிலையில், அவர்களின் பெற்றோர் வாழ்வாதரத்துக்காக சென்னை தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
பெற்றோரால் பிச்சை எடுக்கத் தள்ளப்பட்ட குழந்தைகளில் ஜெயவேலும் ஒருவராவார். “நடை பாதைதான் நாங்கள் வசிக்கும் இடம். அங்குதான் தூங்குவோம். மழை வந்தால், போலீஸார் வந்து எங்களை துரத்தும் வரை அருகில் இருக்கும் கடைகளின் கூரைக்கு கீழே தங்கும் நிலையில் இருந்தோம்’’ என தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கிறார். ஜெயவேலுவின் தந்தை இறந்த பிறகு குடிப்பழக்கத்துக்கு ஆளான ஜெயவேலுவின் தாயார், மற்றவர்கள் ஜெயவேலுக்கு பெருந்தன்மையுடன் வழங்கும் பணத்தை கூட, குடிப்பதற்கு எடுத்துச் சென்று விடுவார். ஆனால், அதன் பின்னர் ஜெயவேலுவின் வாழ்க்கையில் நுழைந்த உமா மற்றும் அவரது கணவர் முத்துராமன் ஆகியோர் பெரும் திருப்பத்தை உண்டாக்கினர். அந்த தம்பதி சென்னை தெருக்களில் வாழும் குழந்தைகளைப் பற்றி ‘பேவ்மென்ட் ஃப்ளவர்’ என்னும் ஆவணப்படம் எடுக்க வேண்டும் என நினைத்தனர்.
“எங்கள் மக்களுக்கு அவர்களைப் பிடிக்கவில்லை. ஏனெனில், பல பேர் நாங்கள் உதவுகிறோம் என்ற சாக்கில் எங்கள் பெயரை பயன்படுத்தி அரசாங்கத்தின் நிதியை அவர்கள் பெற்றுக் கொண்டனர். ஆனால், என்னுடைய அந்த எண்ணம் உமா முத்துராமனை சந்தித்தப் பிறகு மாறியது. குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற அக்கறையும் அவருடைய நேர்மையும் என்னை மாற்றியது’’ என ஜெயவேலு கூறுகிறார். 1999ஆம் ஆண்டு, அந்த தம்பதி நடத்தி வந்த சுயம் டிரஸ்ட் மூலம், ஜெயவேலுவுக்கு நிலையான கல்வியை அளித்தனர். “பள்ளியில் இருக்கும் அனைவருக்கும் என்னை பற்றியும் என்னுடைய குடும்பத்தை பற்றியும் தெரியும். நாங்கள் நடைபாதையில் வாழ்வதற்கும் பள்ளியில் ஒரு மூலையில் நான் இருந்ததற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆரம்பத்தில் நான் படிப்பதை வெறுத்து விளையாட ஆசைப் பட்டிருந்தாலும் கூட, மற்றவர்களின் வாழ்க்கைக்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் இருக்கும் வித்தியாசத்தையும், என்னை படிக்க வைக்க உமா மற்றும் முத்துராமன் கஷ்டப்படுவதையும் பார்த்த பிறகு எனது வாழ்க்கைக்கான கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டேன் ‘’ என்கிறார் ஜெயவேல்.
ஜெயவேல் நல்ல மதிப்பெண்களோடு 12ஆம் வகுப்பில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வை எழுதி அங்கு படிப்பதற்கான இடத்தையும் வென்றார். வேல்ஸில் உள்ள க்ளைன்ட்வர் யுனிவர்சிட்டியில் ‘செயல்திறன் கார் விரிவாக்கம் தொழில்நுட்ப பொறியியல்’ படிப்பை படித்தார். இந்த படிப்பு ரேஸ் கார் செயல்திறன் மேம்பாடு குறித்த படிப்பாகும். இப்போது, தனது மேற்படிப்பை தொடர இத்தாலி நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார் ஜெயவேல். ஜெயவேல் லண்டனில் படிப்பதற்காக இந்த தம்பதி ரூபாய் 17 லட்சத்தை கடன் வாங்கியுள்ளனர். மேலும், ஜெயவேல் இத்தாலியில் படிப்பதற்காக அவர்கள் ரூபாய் 8 லட்சம் கடன் பெற வேண்டும்.
சில அதிகாரிகள் தானாக முன்வந்து ஆதரவு கொடுத்தாலும்கூட, அது போதுமானதாக இல்லை. தெருவில் வசிக்கும் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் போராட்டம் உண்மையானது. ஆனால், அரசாங்கத்தின் அக்கறையின்மை இன்னும் பல தடைகளை உருவாக்கியுள்ளது.
ஜெயவேல் படிப்பு முடிந்த பிறகு இந்தியாவுக்குத் திரும்பவே ஆசைப்படுகிறார். தன்னை ஒரு மனிதனாக உருவாக்கிய உமா முத்துராமன் தம்பதிக்கும் மற்றும் சுயம் டிரஸ்ட்டை நடத்தவும் அவர்களுக்கு உதவப்போவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், சென்னையைச் சேர்ந்த ஒரு கல்வி அமைப்பால் தேனியைச் சேர்ந்த கார்த்திகா, அதிக மதிப்பெண் பெற்று ரஷ்யாவில் மருத்துவம் படிக்க தேர்வாகினார். இப்போது அவர் மருத்துவம் படித்து வருகிறார். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் வறுமையின் காரணமாக நெல்லை சங்கரன்கோவிலைச் சேர்ந்த கார்த்திகா குடும்பத்துடன் தேனியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் என்பது ஒரு நீண்ட துன்பியல் கதை. கல்வி மட்டுமே ஒருவரை நினைத்துப் பார்க்க முடியாத உயரத்துக்கு கை பிடித்து அழைத்துச் செல்லும் என்பது உண்மை.

கருத்துகள் இல்லை: