வியாழன், 3 மார்ச், 2016

தே.மு.தி.க.,வுடன் கூட்டணி இழுபறி ஏன்? விஜயகாந்த் நிபந்தனை; ஸ்டாலின் முரண்டு

ஸ்டாலின் விட்டுக் கொடுக்காததால் தி.மு.க., -தே.மு.தி.க., இடையே, கூட்டணி உறுதியாவது, தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கூட்டணி தொடர்பான பரபரப்புகள் அதிகரித்துள்ளன. தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு இழுக்க, தி.மு.க.,- - பா.ஜ., -- மக்கள் நலக் கூட்டணி முயற்சித்து வருகின்றன.கடந்த மாதம், 28ம் தேதி, மத்திய அமைச்சர் ஜாவடேகர், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை சந்தித்து, கூட்டணி பேச்சு நடத்தினார்.தி.மு.க., தரப்பில், திரைமறைவு பேச்சு அரங்கேறி வருகிறது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், வேட்பாளர் நேர்காணலில், தி.மு.க., கூட்டணி தொடர்பாகவே, கேள்வி எழுப்பிஇருந்தார்.


தி.மு.க., கூட்டணியில், 50 'சீட்' வரை தருகிறோம் என கூறுவதாக, நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் கூறினார். அதேநேரத்தில் தி.மு.க.,விடம், தே.மு.தி.க., தரப்பில், 65 'சீட்'கள் கேட்கப்படுகின்றன. 'உள்ளாட்சி தேர்தல் கூட்டணி உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும்' எனவும், தே.மு.தி.க., கோரிக்கை வைப்பதாக கூறப்படுகிறது. இந்த நிபந்தனைகளை ஏற்க, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. அதனாலேயே, கூட்டணி அறிவிப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கும் ஸ்டாலின், அக்கட்சி தரப்பில் வைக்கும் எந்த நிபந்தனைகளையும் ஏற்க மறுக்கிறார். இது குறித்து, கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், ஸ்டாலினிடம் தொடர்ந்து பேசி, அவரை இறங்கி வர கேட்கின்றனர். ஆனால், அவர்களிடம் ஸ்டாலின், 'தி.மு.க., தற்போது, 33.5 சதவீத ஓட்டு வங்கி வைத்துள்ளது. ஆனால், தே.மு.தி.க.,வுக்கு 6.33 சதவீதம் தான் உள்ளது. 'இப்படி தே.மு.தி.க.,வுக்கு செல்வாக்கு சரிந்துள்ள நிலையில், அந்த கட்சிக்கு 50 'சீட்'களை கொடுக்க முன் வந்திருப்பதே அதிகம். ஆனாலும், அவர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கும் ஒப்பந்தம் போட வேண்டும் என, இப்போதே பேசுவதில், எங்களுக்கு உடன்பாடில்லை' என,கூறிவிட்டார்.இதனாலேயே, இரு கட்சிகளுக்கும் இடையில், கூட்டணி ஏற்படுவதில், இழுபறி ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பா.ஜ., தலைமை ஏற்குமா?
இதற்கிடையில், கடந்த மாதம், 28ம் தேதி பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் ஜாவடேகர், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தினார். அப்போது, பல்வேறு ரகசிய கோரிக்கைகளை விஜயகாந்த் முன்வைத்துள்ளார்.'பா.ஜ., கூட்டணியில் இணைய வேண்டும் என்றால், மைத்துனர் சுதீஷுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும். இதற்காக, அவரை, ராஜ்யசபா எம்.பி., ஆக்க வேண்டும். தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். தேர்தல் செலவுகளை பா.ஜ., ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், விஜயகாந்த் கேட்டுள்ளதாக தெரிகிறது.இவற்றை, பா.ஜ., தேசிய தலைமையிடம், மத்திய அமைச்சர் ஜாவடேகர் எடுத்து கூறியுள்ளதாக தெரிகிறது. மீண்டும் சென்னை வரவுள்ள அவர், இது தொடர்பாக, பதில்களை வைத்திருந்தால் மட்டுமே மீண்டும் விஜயகாந்தை சந்திப்பார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-நமது சிறப்பு நிருபர்-   dinamalar.com

கருத்துகள் இல்லை: