செவ்வாய், 1 மார்ச், 2016

அதிமுக ஸ்டிக்கர் பற்றி ஜவடேகர் பேசியதற்கு அதிமுக பார்லியில் பழிவாங்கல்?

சென்னையில், தங்கள் கட்சியை விமர்சனம் செய்த, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு, மறைமுக பதிலடி தரும் வகையில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், லோக்சபாவில், நேற்று அமளியில் இறங்கி, அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். நேற்று லோக்சபாவில், பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்வதற்காக எழுந்து நின்றார். அப்போது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை கண்டித்து, காங்., - எம்.பி.,க்கள் கோஷமிட்டனர். யாரும் எதிர்பாராத விதமாக, அ.தி.மு.க., - பார்லி., குழு தலைவர் வேணுகோபால் தலைமையில், அக்கட்சி எம்.பி.,க்களும் எழுந்து நின்று, கோஷங்கள் எழுப்பினர். மத்திய அரசுடன், பார்லிமென்ட்டில் நட்புடன் இருந்து வரும் அ.தி.மு.க.,வும், அமளியில் இறங்கியது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்தில்  தூங்கி கொண்டிருந்த நமக்கு வாய்த்த 37+4 எம்பீக்களையும் எழுப்பி விட்ட பிரகாஷ் ஜவ்தேஹருக்கு நன்றி.ஏமாற்றம். கூட்டணிக்கு தன்னிடம் கெஞ்சுவார்கள், தான் போடும் கட்டளைகளுக்கு அடிபணிவார்கள் என்ற எதிர்பார்ப்பு, பெங்களூருவில் நடக்கும் வழக்கை சற்றே ஆறபோடுவார்கள் என்ற நினைப்பு, கேட்டது உடனே கொடுக்கப்படும் என்ற விருப்பம், இதெல்லாம் பிஜேபியிடம் நடைபெறவில்லை . உடனே தங்கள் ஆயுதத்தை இறக்கி பார்லிமெண்டில் ஒரு ஆர்பாட்டம் உண்டாக்கி எச்சரிக்கை கொடுக்கிறார். 


இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், வெளிநாடுகளில் பெரும் முதலீடு செய்திருப்பதாகவும், அதுகுறித்து மத்திய அமலாக்கத் துறை சோதனை நடத்தி, பல உண்மைகளை கண்டறிந்திருப்பதாவும் கூறி, டில்லியிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுஇருந்தது.இதை அடிப்படையாக வைத்து, அ.தி.மு.க., -
எம்.பி.,க்கள், முன்னாள் அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆனால், பட்ஜெட் உரையை துவங்கும் முன், அமளியில் இறங்குமளவுக்கு, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் சென்றதற்கு, வேறு அரசியல் பின்னணி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிரொலிக்கும்!
அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:சட்டசபை தேர்தலுக்காக, தமிழக அரசை விமர்சிக்கும் முயற்சியில், பா.ஜ., தலைவர்கள் ஈடுபட்டால், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அதற்கான எதிர்வினைகள் கண்டிப்பாக எதிரொலிக்கும். முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, அ.தி.மு.க.,வின் தயவு தேவைப்படுவதால், பா.ஜ., தலைவர்கள், அதுபோன்ற விஷப் பரீட்சையில் இறங்க மாட்டர் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

'கெயில்' பிரச்னையும் காரணம்!
டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: 'கெயில்' எரிவாயு குழாய் பதிக்கும் பிரச்னைக்காக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குழு, நேரில் சந்தித்து கோரிக்கை வைப்பதற்காக, நேரம் கேட்டு, துணை சபாநாயகர் தம்பிதுரை சார்பில், இரண்டு முறை முயற்சித்தும், பிரதமர் அலுவலகம், இதுவரை பதில் கூறவில்லை.இதையடுத்தே, சிதம்பரத்தின் பிரச்னையை காரணமாக வைத்து, யாரும் எதிர்பாராத வகையில், பட்ஜெட் தாக்கலின்போது, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அமளியில் இறங்கினர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னணி என்ன? பார்லிமென்ட்டில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தினத்தன்று, சபை முழுவதுமாக நிறைந்து வழியும். அப்போது, எந்த பிரச்னையுமின்றி, சபை அமைதியாக இருப்பது வழக்கம். அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், சபையில் அமைதி காப்பதும், அமளியில் இறங்குவதும், தலைமையின் உத்தரவின்றி நடப்பதில்லை. சட்டசபை தேர்தலில் கூட்டணி தொடர்பாக, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைக்க, பா.ஜ., தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதுகுறித்து பேச்சு நடத்துவதற்காக, தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரான பிரகாஷ் ஜாவடேகர், சென்னை வந்திருந்தார். அப்போது, அவர் அளித்த பேட்டியில், அ.தி.மு.க., அரசை, நேரடியாக விமர்சித்தார். 'மழை, வெள்ள சேதங்களுக்கு, மத்திய அரசு, 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதை வைத்துத் தான், வெள்ள நிவாரண உதவியாக, தலா ஒருவருக்கு, 5,000 ரூபாய் வழங்கப்பட்டது' என்றார். ஏற்கனவே, கூடுதல் வெள்ள நிவாரண நிதி கேட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில், பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும், இதுவரை பலனில்லை. இதுகுறித்து, அ.தி.மு.க., - எம்.பி.,க்களும், பலமுறை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மத்திய அமைச்சரின் பேட்டி, அ.தி.மு.க.,வை, சற்றே அதிர்ச்சியடைய வைத்தது.இதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்பதற்காகவே, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், பா.ஜ.,வுக்கு, இந்த மறைமுக அதிர்ச்சி வைத்தியத்தை அளித்ததாக கூறப்படுகிறது.

- நமது டில்லி நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: