வியாழன், 3 மார்ச், 2016

ஜெயலலிதா மாஸ்டர் ஸ்ட்ரோக் ? குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435ன் கீழ் விடுதலை?

Savukku · com :முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு தமிழகர்களை விடுவிக்க மத்திய அரசின் கருத்தைக் கோரி கடிதம் எழுதியதன் மூலம், ஆங்கிலத்தில் “மாஸ்டர் ஸ்ட்ரோக்” என்று சொல்லும்படி ஒரு அற்புதமான அரசியல் காய் நகர்த்தலை செய்திருக்கிறார் ஜெயலலிதா.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ராஜீவ் கொலையாளிகள் அனைவரையும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435ன் கீழ் விடுதலை செய்யப்போவதாக சட்டப்பேரவையில் அறிவித்தார் ஜெயலலிதா.  அந்த அறிவிப்பில் சிபிஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால், இந்த முடிவு குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்திருப்பதாகவும், மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கவில்லை என்றால், மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஏழு பேரையும் விடுவிக்கப் போவதாக சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.        இந்த வழக்கு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணையில் இருந்தது.     நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், கோவைக்கு வருகை தந்திருந்த சதாசிவம், தமிழர்களின் விடுதலை தொடர்பாக ஒரு நல்ல தீர்ப்பு வரும் என்று  பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
ஏழு தமிழர் விடுதலை என்ற முடிவின் காரணமாக, தமிழர்களின் ஒரே பிரதிநிதி என்ற பட்டத்தை ஜெயலலிதா தட்டிப் பறித்து விட்டாரே என்று ஏற்கனவே எரிச்சலில் இருந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சதாசிவத்தின் பேச்சு மேலும் எரிச்சலை மூட்டியது.   எப்போதுமே நீதிபதிகளையும், நீதித்துறையையும் ஒரு போதும் விமர்சிக்காத கருணாநிதி, சதாசிவத்தை வெளிப்படையாக விமர்சித்தார்.    அவர் வெளியிட்ட அறிக்கையில் “ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப் பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  இந்நிலையில், கோவையில் வெள்ளிக்கிழமை நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் வரும் 25-ம் தேதிக்குள் முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று ராஜீவ் கொலை வழக்கினை பற்றி வெளிப்படையாகத் தெரிவித்தார். அது அனைத்து நாளேடுகளிலும் வெளி வந்தது.
வரும் 24ஆம் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நீதிபதி சதாசிவம் அவர்கள் தான் ஓய்வு பெறவுள்ள 25-ம் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்திலே ஏற்படுத்துமோ என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் மத்தியில் இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரும் என்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக, பாதகங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதையும், அது நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.”
கருணாநிதியின் இந்த வெளிப்படையான விமர்சனத்தைக் கண்டு சதாசிவம் பின் வாங்கினார்.    எழுவர் விடுதலை தொடர்பாக ஏழு கேள்விகளை எழுப்பி அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கை அனுப்பி விட்டு, நிம்மதியாக ஓய்வு பெற்று, கேரள மாநில ஆளுனரானார்.    1)  வாழ்நாள் சிறை என்றால் வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்க வேண்டுமா ?   அவர் முன்னதாக விடுதலை செய்யப்படலாமா செய்யப்படக் கூடாதா  2) மரண தண்னை விதிக்கப்பட்டு பின்னர் அது வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்ட கைதிகளை 14 ஆண்டுகள் கழித்தும் சிறையில் வைத்திருக்கும் வகையில் ஒரு புதிய வகையை உருவாக்கலாமா  ?  அந்த புதிய வகையினரை முன்கூட்டி விடுதலை செய்ய இயலாது என்று தரம் பிரிக்கலாமா 3) அரசியல் சாசன சட்டப் விரிவு 161 அல்லது 72ஐ பயன்படுத்தி ஒருவரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட பிறகு அரசு மீண்டும் தண்டனை குறைப்பு அல்லது விடுதலை செய்ய முடியுமா ?    என்பது போன்ற ஏழு கேள்விகளை எழுப்பி அரசியல் சாசன அமர்வுக்கு அவ்வழக்கை தள்ளி விட்டார் சதாசிவம்.
இவ்வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  அந்த தீர்ப்பில், சிபிஐ விசாரித்த வழக்குகளில், மத்திய அரசின் முன் அனுமதி பெற்ற பிறகே மாநில அரசு விடுவிக்க முடியும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435க்கு விளக்கமளித்து தீர்ப்பு கூறியது.  தமிழக அரசு ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க பிறப்பித்த உத்தரவு சரியா தவறா என்பதை விசாரித்து தனியாக தீர்ப்பளிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அந்த வழக்கை மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.   அந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வராமல் நிலுவையில் உள்ளது.
குற்றவாளிகளுக்கு தண்டனை குறைத்து விடுதலை செய்ய மாநில அரசுக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435ஐத் தவிர அரசியல் சாசன சட்டப் பிரிவு 161ன் படி அதிகாரம் உண்டு.   இந்த அதிகாரத்தின்படி மாநில அரசு அமைச்சரவையை கூட்டி விவாதித்து, விடுதலை செய்வது என்று முடிவெடுத்து மாநில ஆளுனருக்கு அனுப்பி விடுதலை செய்ய வைக்க முடியும்.      161 பிரிவின் கீழ் மாநில அரசுக்கு உள்ள உரிமைகள் இது வரை கேள்விக்குள்ளாக்கப் பட்டதில்லை.
மேலும், அரசியல் சாசன பிரிவு 161ன் படி விடுதலை செய்வதில், குற்றவாளிகளின் வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரித்ததா, மாநில போலீஸ் விசாரித்ததா என்பது போன்ற நிபந்தனைகளும் இல்லை.   அது மாநில அரசுக்கு வழங்கப்பட்ட முழுமையான அதிகாரம்.    ஆனால் இந்த அதிகாரத்தை ஜெயலலிதா பயன்படுத்தாமல், மீண்டும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் உள்ள 435 அதிகாரத்தைப் பயன்படுத்தியே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள திமுக ஒரு காலத்திலும் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.    ராஜீவ் கொலையாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, சோனியா காந்தியின் சம்மதத்தைக் கேட்டு, நளினியின் தூக்கு தண்டனையை மட்டும் ரத்து செய்தால் போதும், மீதம் உள்ள மூவரை தூக்கிலிடலாம் என்று பரிந்துரை செய்தது திமுக அரசு என்பதை மறக்க முடியாது.     மீண்டும் எழுவர் விடுதலை தொடர்பாக தேர்தல் அறிவிப்புக்கு சில தினங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுத்ததன் மூலம், காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்க உள்ள திமுகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.    2014ல், ஏழு பேரை விடுதலை செய்வது என்று சட்டப்பேரவையில் அறிவித்தபோது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.< திமுக காங்கிரஸ் கட்சிகளை விட பெரிய நெருக்கடியை பிஜேபி கட்சிக்கு உருவாக்கியுள்ளார் ஜெயலலிதா.      மூன்று மாவட்டங்களில் மட்டுமே நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிக்கு அனுமதி பெற்றுத் தந்தால், பிஜேபியை தமிழர் கட்சி என்று ஏற்றுக் கொள்வார்கள்.   அதனால் தமிழகத்தில் ஒரு பிரம்மாண்டமான வெற்றியை பெற்று விடுவோம் என்பது போல கனவு கண்டு பிஜேபி, தலைவர்களும் அமைச்சர்களும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வரிந்து கட்டிக் கொண்டு பேசினர்.  ஜல்லிக்கட்டு நடத்துவதால் பிஜேபிக்கு சல்லிக்காசுக்கு பிரயோஜனம் கிடையாது என்பதை அத்தலைவர்கள் உணரவில்லை.
ஜனவரி மாதம் பிறந்ததும் தினந்தோறும் ஒவ்வொரு பிஜேபி தலைவராக ஜல்லிக்கட்டு குறித்து பேசி வந்தனர்.   இறுதியாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஜல்லிக் கட்டுக்கு அனுமதி பெற்றுத் தந்து விட்டதாக பெருமையாக அறிவித்தார்.   அதற்காக கடவுளுக்கெல்லாம் நன்றி கூறினார்.     வேக வேகமாக அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார்.     அதன்பிறகு உச்சநீதிமன்றத்தால் மூக்குடைபட்டது பிஜேபி.  பொங்கல் முடிந்ததும், ஜல்லிக்கட்டு குறித்து வசதியாக அனைவரும் மறந்தனர்.
அப்சல் குருவை தூக்கிலிட வேண்டும் என்று அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாக கடுமையாக குரல் கொடுத்து வந்தது பிஜேபி.  காங்கிரஸ் கட்சி அவரை இரவோடு இரவாக தூக்கிலிட்டதும் அது குறித்து பேசாமல் இருந்தனர்.  தற்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அப்சல் குரு தூக்கிலிட்டத்தைக் கண்டித்துப் பேசியதும் அப்படிப் பேசியவர்கள் தேச விரோதிகள் என்று நாடெங்கும் பிரச்சினை எழுப்பி வருகிறது பிஜேபி.     அப்படிப்பட்ட பிஜேபி தான் தற்போது ஒரு தீவிரவாதச் செயலாக உச்சநீதிமன்றம் பார்த்த ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்க சம்மதம் தர வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.       இதற்கு சம்மதம் தெரிவித்தால், வட இந்தியாவிலும், வட இந்தியா ஊடகங்களிலும் பிஜேபி கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் என்பதில் சந்தேகம் இல்லை.  தமிழகத்தில் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருப்பது போல வட இந்தியாவில் துளியும் இல்லை.   வட இந்தியாவில் உள்ளவர்களில் பெரும்பாலானோர்,   ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமானவர்கள் அனைவரும் சிறையிலேயே இருந்து சாக வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.
அப்படிப்பட்ட சூழலில், ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய சம்மதம் என்று பிஜேபி அரசு முடிவெடுக்குமானால், கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.     மேலும் பிஜேபி தலைவர்களில் ஒருவராக உள்ள சுப்ரமணிய சுவாமியே இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வார்.
அதே நேரத்தில் தமிழகத்தில் கூட்டணிக்கு ஆள் இல்லாமல் பிஜேபி தவித்துக் கொண்டிருக்கிறது.    திமுகவோடு கூட்டணிக்கு எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, விஜயகாந்தின் வீட்டு வாசலில் துண்டை விரித்து படுத்துக் கொண்டிருக்கிறது பிஜேபி.   அடுத்த சில மாதங்களில் தேர்தல் வர இருக்கிறது.
இந்த நிலையில் பிஜேபி ராஜீவ் கொலையாளிகள் விஷயத்தில் தனது முடிவை தெளிவுபடுத்தியயே ஆக வேண்டும்.    இந்த விவகாரத்தில் முடிவெடுக்க தாமதப்படுத்தினாலோ, அல்லது விடுவிக்கக் கூடாது என்று முடிவெடுத்தாலோ, பிஜேபியை தமிழின விரோத கட்சியாக சித்தரிக்க அதிமுக தயங்காது.   தப்பித்தவறி பிஜேபிக்கு வாக்களிக்கலாம் என்று நினைக்கும் ஒரு சிலரையும் வாக்களிக்க விடாமல் இதர அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பிஜேபியை காய்ச்சி எடுக்கும்.      இந்த விவகாரத்தில் பிஜேபியை நெருக்கடிக்குள்ளாக்கி ஒரு மூலையில் தள்ளியிருக்கிறார் ஜெயலலிதா என்றால் அது மிகையாகாது.
தேர்தல் நெருங்க நெருங்க எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையிலேயே இந்த விவகாரத்தை ஜெயலலிதா கையில் எடுத்திருக்கிறார்.      தனது அரசுக்கு எதிர்ப்பு கடுமையாக மக்கள் மத்தியில் உள்ளது என்பதை ஜெயலலிதா நன்கு உணர்ந்த காரணத்தாலேயே இது வரை தனித்து போட்டி என்றோ, அதிமுக வேட்பாளர்களை அறிவிக்காமலோ, எதிர்க்கட்சிகளின் கூட்டணி எப்படி அமையும் என்பதற்காக காத்திருக்கிறார்.     “கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை” என்று இறுமாப்போடு முழங்கிய ஜெயலலிதா இன்று இல்லை.    விஜயகாந்த் எந்தப் பக்கம் போவார் என்பதை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ஜெயலலிதாதான் இன்று இருக்கிறார்.      நான் சொல்கிறபடி டெல்லி செவிசாய்க்கும் என்று எக்காளமிட்ட ஜெயலலிதா இன்று இல்லை.    முதல்வரை காணவில்லை என்று திமுகவின் விளம்பரத்தைப் பார்த்து பயந்து கொருக்குப் பேட்டைக்கும், ஆர்கே நகருக்கும் நேரில் விஜயம் செய்யும் ஜெயலலிதாதான் இன்று இருக்கிறார்.
ஈழமும், ஈழத் தமிழர் விவகாரங்களும், தமிழகத்தில் ஒரு போதும் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் விஷயங்கள் இல்லை என்பதை 2009 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்தின.    ஏழு தமிழர்களின் விடுதலையை தமிழக மக்கள் அமைதியாக வரவேற்றாலும் கூட, இதை மனதில் வைத்து, ஈழத் தாயாக ஜெயலலிதாவை பாவித்து, ஜெயலலிதாவின் பாவங்களை மன்னித்து, அவரை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்துவார்கள் என்று ஜெயலலிதா நினைப்பாரானால் அது பகற்கனவே.      இந்த நடவடிக்கையால் தனது பாவங்கள் கழுவப்படும், தான் மன்னிக்கப்படுவோம் என்று ஜெயலலிதா கருதினால் அது எவ்வளவு பெரிய பிழை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.
ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை, அனைத்து எதிர்க்கட்சிகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் ஒரு அற்புதமான காய் நகர்த்தல் என்று மட்டுமே இதை வரையறுக்க முடியும்.   அரசியல் காய் நகர்த்தலோ இல்லையோ.     எந்த காரணத்திற்காக என்றாலும் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அந்த ஏழு தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றால், உள்ளார்ந்த மகிழ்ச்சியே.
மீண்டும் உச்சநீதிமன்றம் இந்த நடவடிக்கைக்கும் முட்டுக்கட்டை போடாமல் இருந்து, ஏழு தமிழர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புவோம்.

கருத்துகள் இல்லை: