வெள்ளி, 6 செப்டம்பர், 2013

கலைஞர் : ராசாவை பலிகடாவாக்க யார் முயன்றாலும் விட மாட்டோம் !

சென்னை: "முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை, பலிகடாவாக ஆக்க யார் முயன்றாலும், அதற்கும் இடம் தர மாட்டோம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது பேட்டி: கல்வி துறை அமைச்சர், ஆசிரியர் தினவிழாவில், கலந்து கொள்ள இருந்த நேரத்தில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கியுள்ளார். அமைச்சர்களை மாற்றுவது என்பது, முதல்வரின் விருப்பத்தை பொறுத்தது. அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அமைச்சர்களை மாற்றுகிறவரும், மாற்றப்படுகிறவர்களும் தான் கவலைப்பட வேண்டும்; நான் கவலைப்படவில்லை. நாங்கள் யாரையும் பலிகடாவாக ஆக்க மாட்டோம். ராஜாவை பலிகடாவாக ஆக்க யார் முயன்றாலும், அதற்கும் இடம் தரமாட்டோம்.
லோக்சபா, ராஜ்யசபாவில், ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கிற எம்.பி.,க்களின் எண்ணிக்கையை பொறுத்து, பார்லிமென்ட் கூட்டுக் குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் விசாரணை எல்லாம் முடிந்து, அறிக்கை கொடுக்கவுள்ள நேரம் இது. அதில் பிரச்னை ஏற்படாமல் இருப்பது நல்லது. ராஜ்யசபாவில், உணவு மசோதாவின் மீது கனிமொழி தான் பேசினார். அப்போது எந்தவிதமான அமளியும் ஏற்படவில்லை. அவர் அவ்வப்போது, பேசிக் கொண்டு தான் இருக்கிறார்; வாய்ப்புகள் மறுக்கப்படவில்லை. சேது சமுத்திர திட்டத்தில், சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்புக்கு உதவியாக, மத்திய அரசு அளிக்கும் கருத்து இருக்க வேண்டுமல்லவா? சேது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, மத்திய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பற்றி ஞானதேசிகன் கவலைப்பட துவங்கியிருப்பது பாராட்டத்தக்கது. இவ்வாறு, கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: