ஞாயிறு, 9 அக்டோபர், 2011

திருச்சி:அ.தி.மு.க., - தி.மு.க., நேரடி மோதல்: ஜெயலலிதா இன்று பிரசாரம்

திருச்சி:முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொரு ளாளர் ஸ்டாலின் ஆகியோர் களத்தில் குதிப்பதால், திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி என அ.தி.மு.க.,வும், தி.மு. க.,வும் அறிவித்ததால், மற்ற கட்சிகள் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை பொருட்டாக கருதவில்லை.

உள்ளாட்சி தேர்தலுக்காக, திருச்சி மாவட்டத்தில் பிரசாரம் செய்யும் கட்சித் தலைவர்கள், திருச்சி மேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது என்பதை பற்றி கவலைப்படாமல், அதை கடந்து செல்கின்றனர்.கூட்டணியிலிருந்து தனித்து விடப்பட்ட கோபத்தால், இடைத் தேர்தல் அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்குமானது என்றே மற்ற கட்சிகள் ஒதுங்கி நிற்கின்றன. அ.தி.மு.க.,வும், தி.மு.க., வும் இடைத்தேர்தலை தங்களுக்கான பலப்பரீட்சையாக கருதி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன
.ஆட்சிக்கு வந்து நான்கு மாதத்தில் நடக்கும் இடைத்தேர்தல் என்பதாலும், பொதுத்தேர்தலின் போது மக்கள் அளித்த ஆதரவை தக்க வைத்துக்கொள்ளவும் அ.தி.மு.க., முனைப் பாக செயல்படுகிறது.முதல்வர் ஜெயலலிதா, இன்று சூறாவளி பிரசாரத்தை மேற்கொள்வதால், பிரசாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. காலை முதல் இரவு வரை ஜெயலலிதா பிரசாரம் செய்வதால், திருச்சி மேற்கு தொகுதி களைகட்டியுள்ளது. அவர், திருச்சி ஈ.வெ.ரா., சிலை பஸ் ஸ்டாண்டு, புத்தூர் நான்கு ரோடு, உறையூர், நாச்சியார்கோவில், தென்னூர் உள்ளிட்ட பகுதிகளில், வேனில் இருந்தபடி பிரசாரம் செய்கிறார். பிரசாரத்தை தீவிரப்படுத்த, 26 பேரை கொண்ட "மெகா' தேர்தல் பணிக்குழுவை அ.தி.மு.க., அமைத்துள்ளது.

தி.மு.க., வேட்பாளர் நேரு, சிறையில் இருப்பதால், முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதியே ஆக்கிரமித்துள்ளார். இதற்கு ஈடுகொடுக்கும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் வேலு, செல்வராஜ், எம்.பி.,க்கள் செல்வகணபதி, விஜயன், சிவா ஆகியோர் தலைமையிலான தி.மு.க., தேர்தல் பணிக்குழு, பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது.பொருளாளர் ஸ்டாலின் நேற்று முதல் பிரசாரத்தை துவக்கியுள்ளார். திருச்சியில் நான்கு நாட்கள் முகாமிட்டு அவர் பிரசாரம் செய்கிறார். இவரை தொடர்ந்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி நாளை பிரசாரம் செய்கிறார். புத்தூர் நான்கு ரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், நேருவுக்காக அவர் ஓட்டு சேகரிக்கிறார்.

பொதுத்தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் துவங்கி விட்டோம். இனி, தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுமென, அ.தி.மு.க., ஆதரவு கேட்கிறது.ஆட்சிக்கு வந்த நான்கு மாதத்திலேயே பழிவாங்கும் நடவடிக்கைகளை அ.தி.மு.க., துவங்கி விட்டது. பொய் வழக்கில், வேட்பாளர் நேருவை சிறை வைத்துள்ளது. சமச்சீர் கல்வி உள்ளிட்ட திட்டங்களை முடக்க முனைந்து, ஆளும் கட்சி தோல்வியடைந்துள்ளது. ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் ஓட்டளியுங்கள் என, தி.மு.க., பிரசாரம் செய்கிறது.

தோழமை கட்சிகளின் துணையின்றி அ.தி.மு.க., வும், தி.மு.க.,வும் நேரடியாக மோதிக் கொள்ளும் இடைத்தேர்தல் என்பதால், இவ்விரு கட்சிகளுக்கும் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை அறிய, இத்தேர்தல் ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது.தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சை, சாலை விபத்தில் இறந்ததால், திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு, வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பரஞ்ஜோதியும், தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் நேருவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர சுயேச்சைகளும், ஐ.ஜே. கே., வேட்பாளரும் களத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: