புதன், 6 அக்டோபர், 2010

ஜனாதிபதியின் 2வது பதவிக்காலம்; சத்தியப் பிரமாண நிகழ்வு அநுராதபுரத்தில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்திற்கான சத்தியப் பிரமாண நிகழ்வு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அநுராதபுர நகரில் நடைபெறுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எதிர்வரும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரமளவில் மிகவும் கோலாகலமான முறையில் நடைபெறவுள்ள சத்தியப் பிரமாண நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்தில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பிலுள்ள மகா வலி கேந்திரத்தில் இடம்பெற்றது.
அமை ச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிடுகையில், மிகவும் மோசமான ஒரு சூழலில் 2005ம் ஆண்டு நாட்டை பொறுப்பேற்ற ஜனாதிபதி யுத்த நெருப்புக்களை தற்பொழுது வெற்றிகரமான முறையில் அணைத்துள்ளார். இதனையடுத்து அமோக வாக்குகளை அடுத்து ஜனாதிபதிக்கு மீண்டும் ஆணையை வழங்கிய மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளனர்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்று வது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளார் என்றார். இந்நிலையில், ஐ.தே.க., ஜே.வி.பி. உட்பட எதிர்கட்சிகள் சில தமது அரசியல் வங்குரோத்து நிலையை மறைக்கும் நோக்குடன் சரத்பொன்சேக்காவின் விடயத்தை ஒரு கருப்பொருளாக கொண்டு பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். சரத் பொன்சேக்காவை காண்பித்து தமது கட்சியின் செயற்பாடுகளை பலப்படுத்த இவர்கள் முயற்சிக்கின்றனர்.
சட்டம், நீதி என்பது சகலருக்கும் சமமானது. அவற்றில் எந்த பாகுபாடும் கிடையாது. சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகளையே அரசு மேற்கொண் டுள்ளது. அரசாங்க ஊழியர்கள், பாதுகாப்பு படையினர்கள், சாதாரண மக்கள் தொடக்கம் அரசியல் பிரமுகர்கள் வரை சட்டம் சகலருக்கும் சமமானது என்றும் அமைச்சர் மைத்திரிபால சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது பதவிக் காலம் முடிவுறும் இறுதிநாள் அம்பாந்தோட்டை துறை முகத்தில் முதலாவது கப்பல் வெள்ளோட் டம் விடப்படும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அதேசமயம், ஜனாதிபதியை கெளரப் படுத்தும் வகையில் பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களும் அன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: