வெள்ளி, 23 நவம்பர், 2018

ராஜஸ்தான் ஆட்டுக்கு அவசியம் என்ன? ஒரு நாளைக்கு எட்டு கோடி ரூபாய் வியாபாரம் .......

 சிறப்புச் செய்தி: ஒரு பிரேக்கிங் நியூஸும் எட்டு கோடி ரூபாய் இழப்பும்!
ஆரா - மின்னம்பலம் : கடந்த சனிக் கிழமை (நவம்பர் 17 ஆம் தேதி) பகல் பொழுதில் ஒரு பிரேக்கிங் நியூஸ் உண்மையிலேயே பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
‘சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து அனுப்பப்பட்ட 2 ஆயிரம் கிலோ நாய்க் கறி கைப்பற்றப்பட்டது” என்பதுதான் அந்தத் தகவல். அனைத்து செய்தித் தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும், இணைய ஊடகங்களிலும் இந்தச் செய்தி பிரதான இடம் பிடித்தது. சென்னை மக்களிடையே இது பெரும் பீதியையும் ஏற்படுத்தியது. நாய்க் கறி கைப்பற்றப்பட்டது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியானதால் பலரும் கறி சாப்பிடவே தயங்கினர். சமூக ஊடகங்களில் இதை வைத்து பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டன.

ஆனால் இந்தச் சம்பவம் நடந்து ஆறாவது நாள், அதாவது நேற்று (நவம்பர் 22) சென்னை எழும்பூரில் ஜோத்பூர் விரைவு ரயிலில் வந்தது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறிதான் என்பது ஆய்வில் உறுதியானது. சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் ஆய்வில் அது ஆட்டுக்கறி என்பது உறுதியானது. ஆனால் நாய்க்கறி என்று பரவிய தகவலின் வேகத்துக்கு இணையாக இந்த உண்மைத் தகவல் பரவவில்லை.

இந்த ஒரு வதந்தியால் சென்னையின் ஆட்டுக் கறி சந்தைக்கும், அதனால் நேரடி, மறைமுக வேலை பெறும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட இழப்பு 6 நாட்களில் 8 கோடி ரூபாய் என்கிறார்கள் இறைச்சி உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்கத்தினர்.
ராஜஸ்தான் ஆட்டுக்கு அவசியம் என்ன?
பொதுவாகவே தமிழகத்தின் ஆட்டுக் கறி தேவையில் கணிசமான பங்கினை நிறைவேற்றுவது அண்டை மாநிலமான ஆந்திராதான். தமிழகத்தில் ஆடு வளர்ப்பு ஒரு காலத்தில் விவசாயம்போல கட்டமைக்கப்பட்ட ஒரு தொழிலாக இருந்தது. ஆனால் படிப்படியாக தமிழகத்தில் ஆடு வளர்ப்பு என்ற தொழில் குறைந்து வருகிறது. ஆனால் ஆந்திராவில் ஆடுவளர்ப்பு என்பது மிகப் பெரிய தொழிலாக இன்றும் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தின் கணிசமான ஆட்டுக் கறித் தேவையை ஆந்திரா ஈடுகட்டி வருகிறது.
தமிழகத்தில் ஒரு கிலோ ஆட்டுக் கறி சுமார் 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆந்திராவின் ஆடுகளும் சமீபத்தில் விலையேறிக் கொண்டிருக்கும் நிலையில்தான் ஆட்டுக் கறி மொத்த விற்பனையாளர்களுக்கு ராஜஸ்தான் வெள்ளாடுகள் பற்றிய தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ராஜஸ்தான் போன்ற வெப்ப பிரதேசத்தில் வெள்ளாடுகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கிறது. அங்கிருக்கும் மார்வாடிகள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் ஆட்டுக் கறி உண்பதில்லை என்பதால் ராஜஸ்தானில் இருந்து வெள்ளாடுகளை மலிவு விலைக்கு இறக்குமதி செய்யலாம் என்பதே ஆட்டுக் கறி விற்பனையாளர்களின் திட்டம். இதற்கென தரகர்கள் இருக்கிறார்கள்.
ஒரு கிலோ 500 ரூபாய் என்று வாங்கி 600 ரூபாய்க்கு விற்கும் நிலையில் ராஜஸ்தானில் இருந்து கிடைக்கும் ஆட்டுக் கறி கிலோ 300 க்குள் முடிந்துவிடுகிறது என்பது ஆட்டுக் கறி விற்பனையாளர்களுக்கு ‘அல்வா’ சாப்பிட்டது போல் இருந்தது. போக்குவரத்து கட்டணம் உட்பட சென்னைக்கு ஒரு கிலோ 300 ரூபாய்க்கு ராஜஸ்தானில் இருந்து ஆட்டுக் கறி இறக்குமதி செய்யப்பட்டது. இவற்றை பெரும்பாலும் ஹோட்டல்களுக்கே விற்றுவந்தனர் விற்பனையாளர்கள். இந்த நிலையில்தான் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தானில் இருந்து ரயிலில் வந்தது நாய்க்கறி என்று செய்தி பரவியது.
தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராயபுரம் ஏ. அலியிடம் இதுகுறித்துப் பேசும்போதுதான் நாய்க்கறி வதந்தியால் ஏற்பட்ட பொருளாதார பூகம்பம் தெரியவந்தது.

சென்னைக்கு மட்டும் எட்டுகோடி நட்டம்
“எந்தச் செய்தியையும் உண்மையா, பொய்யா என்று உறுதிப்படுத்தாமல் பரப்பி வரும் ஊடகங்களாலும் அதை அப்படியே வாந்தியெடுத்து வைக்கும் சமூக தளங்களாலும் எங்கள் தொழிலும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
பொதுவாக சென்னையில் புளியந்தோப்பு, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், பல்லாவரம் நான்கு இடங்களில் அரசு அங்கீகாரம் பெற்ற ஆடு அறுக்கும் மையங்கள் உள்ளன. பொதுவாக வார நாளில் இந்த மையங்களில் மொத்தமாக நாலாயிரம் ஆடுகள் அறுப்போம்., இதுவே ஞாயிற்றுக் கிழமை என்றால் நம் ஊரில் கறி சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகமாகும் என்பதால் இரண்டரை மடங்கு மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். அதாவது எட்டாயிரம் முதல் பத்தாயிரம் ஆடுகள் ஞாயிற்றுக் கிழமைகளில் அறுக்கப்படும். .
ஆனால் போன சனிக்கிழமை இந்த நாய்க்கறி செய்தி பரவியதால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மேற்குறிப்பிட்ட நான்கு ஆடு அறுக்கும் மையங்களிலும் சேர்த்து மொத்தம் ஆயிரம் ஆடுகள் கூட அறுக்கப்படவில்லை. அந்த அளவுக்கு பிசினஸ் படுத்துவிட்டது. அதாவது சென்ற ஞாயிறு மட்டும் பத்தாயிரம் ஆடுகளுக்கு பதிலாக ஆயிரம் ஆடுகளே அறுக்கப்பட்டன. நாய்க்கறி செய்தியால் மக்களிடையே கறி சாப்பிடலாமா என்ற பீதியும், நான் வெஜ் ஹோட்டல்களில் கஸ்டமர்கள் குறைவுமே இதற்குக் காரணம். நேற்று வரை எங்கள் வியாபாரம் 70% படுத்துவிட்டது.
நாய்க்கறி செய்தி பரவிய கடந்த சனிக்கிழமையில் இருந்து நேற்று வியாழக் கிழமை வரை சுமார் 15 ஆயிரம் ஆடுகள் அறுப்பு குறைந்துவிட்டது ஏழரை கோடி ரூபாய் முதல் எட்டு கோடி ரூபாய் வரை சென்னையில் மட்டும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆடு அறுக்கும் மையங்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை செய்தால்தான் காசு. கடந்த ஒரு வாரத்தில் அவர்களின் பிழைப்பும் பாதிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் ராயபுரம் அலி.
நட்டம் மட்டுமல்ல சட்டம் ஒழுங்கு பிரச்சினையும்
“சென்னைக்கு மட்டும்தான் இந்த எட்டு கோடி ரூபாய் நட்டம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கறி விற்பனை குறைந்துவிட்டது. அதையும் கணக்குப் போட்டால் இந்த வதந்தியால் ஏற்பட்ட பொருளாதாச் சரிவு மேலும் அதிகமாகவே இருக்கும்.
இதுமட்டுமல்ல, சென்னையில் பல இடங்களில் கறிக்கடைகளில் இந்த பொய்ச் செய்தியால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்கின்றன. ‘பாய்... நாய்க்கறிய போட்றாத’ என்றெல்லாம் கஸ்டமர்கள் சொல்ல சில இடங்களில் விற்பனையாளர்கள் அதை எதிர்க்கப் போக பிரச்சினை ஆகியிருக்கிறது” என்றும் சொல்கிறார் ராயபுரம் அலி.
அதிகாரிகளுக்குப் பின்னால் அரசியல்?
இந்த விவகாரத்தில் இது நாய்க்கறிதான் என்று அன்றே உறுதிப்படுத்தியது போல அறிவித்த அதிகாரிகளின் செயல்பாடுக்குப் பின்னால் அரசியல் இருப்பதாக சந்தேகம் கிளப்புகிறார் மனித நேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் புழல் ஷேக் முகமது அலி.
“இந்த இறைச்சித் தொழிலில் இருப்பவர்களில் 80 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்கள்தான். விற்பனையாளர்களில் இருந்து தொழிலாளர்கள் வரை இதில் அடங்குவார்கள். ஆட்டுத் தொட்டிகளில் தினமும் போய் ஐந்தாயிரம் ரூபாய்க்கு கறி வாங்கி அதை ஆறாயிரம் ரூபாய் வரை விற்று சொற்ப லாபம் பார்க்கும் அனேக வியாபாரிகள் சிறு வியாபாரிகளான இஸ்லாமியர்கள். கடந்த வாரம் நடந்த அந்த சோதனையில் முகவரி சரியில்லை, யார் அனுப்பியவர் என்பது தெரியவில்லை என்ற சந்தேகங்கள் எல்லாம் ஒருபக்கம் நடக்கட்டும். அந்த வகையில் அதிகாரிகளின் பணியில் தலையிட வில்லை.
ஆனால் எடுத்த எடுப்பிலேயே இது நாய்க்கறிதான் என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள்தான் ஊடகங்களிடம் சொல்லியிருக்கிறார்கள். அதுபோக சோதனைக்கு அனுப்பப்பட்ட கறிபோக மீதம் இருப்பவற்றில் பினாயிலை ஊற்றியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் அதிகாரிகளுக்கு யார் அனுமதி கொடுத்தது? இப்போது அது நாய்க்கறி அல்ல ஆட்டுக் கறிதான் என்று முடிவு வந்துவிட்டது. இப்போது அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ன? அவர்களால் ஏற்பட்ட பல ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதார இழப்புக்கு ஈடு என்ன?” என்று கேள்விகளை அடுக்குகிறார் ஷேக் முகமது அலி.

மேலும், “இந்தத் தொழிலில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களே ஈடுபட்டிருப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்தைக் குலைக்கும் ஒரு சதி இருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். இத்தொழிலில் அரசாங்கத்தின் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதிலும், சுத்தமான இறைச்சி அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதிலும் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் கடந்த வாரம் நடந்த சம்பவத்தில் இதையும் மீறிய ஒரு ஒரு சதி இருப்பதாகவே கருதுகிறோம்” என்கிறார் ஷேக் முகமது அலி.
ஒரு செய்தி கிடைக்கிறது, அதுவும் உறுதிப்படுத்தப்படாமல் கிடைக்கிறது. அது பரப்பப்படுகிறது. அதனால் ஏற்படும் இழப்பு என்பது கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ பேரின் வாழ்க்கை என்பதை நினைத்தாவது ஊடகங்களுக்கு ஒரு பொறுப்பு வரவேண்டும். சமூக தளங்களில் மீம்ஸ் என்ற பெயரில் கறிக்கடை நடத்துபவர்களும் இதுபற்றி சிந்திக்க வேண்டும்!

கருத்துகள் இல்லை: