திங்கள், 19 நவம்பர், 2018

வேலூர் வசூல் ரவுடி ரங்கராஜனை அடித்து கொன்ற குடும்ப தலைவி

ரவுடிரவுடி.vikatan.com  -venkatesan--logeswaran.: வேலூரில் 30-க்கும் அதிகமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை, பெண் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி இந்திரா நகர் குருத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவரின் மகன் தங்கராஜ் (35). பிரபல ரவுடி வசூர் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 30-க்கும் அதிகமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி தங்கராஜுக்கும், அதே பகுதியில் கணவரைப் பிரிந்து இரண்டு மகன்களுடன் வாழும் தண்டுமாரி (39) என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்றிரவு குடிபோதையில் இருந்த தங்கராஜ், தண்டுமாரியின் வீட்டிற்குச் சென்றார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கத்திப் போன்ற கூர்மையான ஆயுதத்தால் தண்டுமாரியை தங்கராஜ் குத்தியுள்ளார். தண்டுமாரியின் அலறல் சத்தம் கேட்டு அவரின் மூத்த மகன் தர்மன் (19) அங்கு ஓடி வந்தார். தாயைத் தாக்கிய ரவுடி தங்கராஜை தடுத்துள்ளார். அப்போது தர்மனையும் ரவுடி தாக்கினார்.

இதையடுத்து, தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தண்டுமாரியும், அவரின் மகன் தர்மனும் சேர்ந்து கையில் கிடைத்த ஆயுதங்களால் ரவுடி தங்கராஜை பயங்கரமாக தாக்கினர். மேலும், தலையில் கல்லைப் போட்டு முகத்தைச் சிதைத்தனர். ரவுடி தங்கராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து, வீட்டிற்குள்ளேயே பிணத்தை கிடத்தி விட்டு மகன் தர்மனுடன் தண்டுமாரி தப்பி ஓடித் தலைமறைவாகி விட்டார்.
இதுபற்றி தகவலறிந்ததும், சத்துவாச்சாரி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரவுடியின் உடலைக் கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தாய்-மகனைத் தீவிரமாக தேடி வருகின்றனர். ரவுடி கொல்லப்பட்டது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டதற்கு, ‘‘ரவுடி தங்கராஜின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.

எங்களின் நிம்மதியைக் கெடுத்து வந்தார். தெருவில் நடப்பவர்களை மறித்து பணம் பறித்தார். எப்படியோ... அவர் கொலை செய்யப்பட்டது ஒரு விதத்தில் எங்களுக்குச் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி நாங்கள் நிம்மதியாக வாழ்வோம்’’ என்றனர். ரவுடி கொல்லப்பட்டதை தொடர்ந்து, சத்துவாச்சாரி பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: