புதன், 21 நவம்பர், 2018

எழும்பூர் வந்த 2 டன் கெட்டுப்போன இறைச்சி; ஏஜெண்ட் கைது - ரயில்வே போலீஸ் வழக்குப்பதிவு

THE HINDU TAMIL : எழும்பூருக்கு  ரயில் மூலம் ஜோத்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட கெட்டுப்போன இறைச்சியை மீன் என்கிற பெயரில் புக் செய்த இரண்டு ஏஜண்டுகள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் 21 பார்சல்களில் பதப்படுத்தப் படாத கெட்டுப்போன இறைச்சி 2190 கிலோ பார்சல் மூலம் வந்தது. மீன் என்று புக் செய்யப்பட்டு வந்த அந்த தெர்மோகோல் பெட்டிக்குள் ஆட்டிறைச்சி இருந்தது. இறைச்சியின் தன்மை, எலும்புகள் மற்றும் வாலின் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு அவை நாய் இறைச்சியாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினர். பின்னர் அது ஆட்டிறைச்சியா நாய் இறைச்சியா என ஆய்வுக்கு காலநடை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் நான்கு நாட்களாக உரிய குளிரூட்டப்படாமல் வந்ததால் இறைச்சி கெட்டுபோனதாக தெரிவித்த உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் அவைகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவை கொடுங்கையூர் குப்பைகிடங்கில் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
ரயில் நிலையத்தில் பிரியாணி வியாபாரிகள் நூற்றுக்கணக்கில் வந்து அது ஆட்டிறைச்சித்தான் என்று பேட்டி அளித்தனர். பெறுநர் முகவரி ஏன் இல்லை, மீன் என்று ஏன் எழுதி பார்சல் புக் செய்யப்பட்டுள்ளது ஏன் என்கிற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை.
இந்நிலையில் ஜோத்பூரிலிருந்து மீன் எனக் குறிப்பிட்டு 2190 கிலோ இறைச்சியை அனுப்பியது யார்?  அதற்கு பெறுநர் விலாசம் ஏன் இல்லை, என்பது குறித்து விசாரிக்க ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார்  ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் செல்ல உள்ளனர்.
பார்சலை மீன் என புக் செய்த புக்கிங் ஏஜெண்ட் கணேசன் மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஜெய்சங்கர் ஆகியோர் மீது, இரயில்வே சட்டம் 1989 பிரிவு 163, 145 பி ஆகிய இரு பிரிவுகளின் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் ஜெய்சங்கரை போலீஸார் கைது செய்துள்ளனர், கணேசன் தலைமறைவாகி விட்டார் அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இரயில்வே சட்டத்தை மீறி பார்சல் பதிவு செய்பவர்கள், பார்சல் அனுப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: