சனி, 1 செப்டம்பர், 2018

அணில் அப்பளத்தில் புழுக்கள்!

அணில் அப்பளத்தில் புழுக்கள்!மின்னம்பலம்: திண்டுக்கல்லில் தயாராகி நாடு முழுவதும் விற்பனையாகி வரும் அணில் சேமியா நிறுவனத்தின் அப்பளக்கட்டுகளில் வெள்ளைப் புழுக்கள் நெளிந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்  ரயில்நிலையம் அருகே தினகரன் என்பவரின் மளிகைக்கடையில், அப்பகுதியைச் சேர்ந்த முகமது ஜியாவுதீன் என்பவர் அணில் அப்பளம் வாங்கி சென்றார். பொரிப்பதற்காக எடுத்தபோது, அப்பளத்தில் வெள்ளை நிறத்தில் புழுக்கள் இருந்ததைக் கவனித்தார் ஜியாவுதீன். இதுபற்றி, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து, தினகரன் கடையில் சோதனை நடத்தினர் அதிகாரிகள். அதில், அங்கிருந்த அப்பளக்கட்டுகளில் புழுக்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அந்த அப்பளக்கட்டில் மே 17ஆம் தேதி தயாரிக்கப்பட்டு, செப்டம்பர் 13ஆம் தேதியன்று காலாவதி ஆகுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திண்டுக்கல்லில் உள்ள அணில் சேமியா நிறுவனத்தில் அனைத்துப் பொருட்களையும் சோதனை செய்தனர். “அணில் அப்பளக்கட்டுகள் கெட்டுப்போய் புழுக்கள் தோன்றுவதற்கு என்ன காரணம்? அதனைக் கூட சரிபார்க்காமல் கெட்டுப்போன அப்பளங்களை அணில் நிறுவனம் எப்படி விற்பனைக்கு அனுப்பியது?” என்பது குறித்து விசாரித்தனர். அப்பளங்களின் மாதிரிகளை ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இந்தப் பரிசோதனைக்குப் பின்பே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு அதிகாரி நடராஜன் தெரிவித்துள்ளார்.
சேமியா தயாரிப்பின்போது தலைமுடி விழுந்து விடக்கூடாது என்று தலையைத் துணியால் மூட அறிவுறுத்தியும், கால்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, உபகரணங்களின் உதவியுடன் சேமியாவை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அணில் சேமியா நிறுவனத்தினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: