செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

திமுக தலைவர் ஸ்டாலின் .. பொதுசெயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவிப்பு!

திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்மாலைமலர் :திமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் பேசும்போது,
திமுகவின் கனவை நிறைவேற்றுவதற்காக இன்று புதிதாய் பிறந்திருப்பதாக தெரிவித்தார். சென்னை: திமுக தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளராக அண்ணா பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர்  கட்சியின் தலைவர் ஆனார். தொடர்ந்து 50 ஆண்டுகள் தலைவராக அவர் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவரது மறைவிற்கு பிறகு, கட்சியின் 2-வது தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
கட்சியின் பொதுக்குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டார். பின்னர் பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவர் பேசியதாவத திமுக தலைவராக நான் பொறுப்பேற்றதை பார்க்க கலைஞர்  இல்லையே என்பதே எனது ஒரே குறை. கலைஞரை  போல் மொழி ஆளுமை தனக்கு கிடையாது. நான் கலைஞர் இல்லை... அவரை போல் எனக்குப் பேச தெரியாது.
திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன். நீங்கள் பார்க்கும்... கேட்கும் ஸ்டாலின் வேறொருவன். சொந்த நலன்களை மறந்து தமிழக மக்களின் நலனுக்காக ஒன்று சேர்ந்து உழைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார். ஸ்டாலின் தலைவர் ஆனது தொடர்பான அறிவிப்பு வெளியானதும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே கூடியிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்


மின்னம்பலம் :சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
திமுக தலைவர்-பொருளாளரை தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் பொதுக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று (ஆகஸ்ட் 28) காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இரங்கல் தீர்மானம்
கூட்டத்தின் முதலில் மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, ஐநாவின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான், தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலைஞரின் மறைவு செய்தி கேட்டு உயிரிழந்தவர்கள், மறைந்த திமுக மூத்த முன்னோடிகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கேரள வெள்ளம் ஆகியவற்றில் பலியானவர்களுக்கும் அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தணிக்கை குழு அறிக்கை தாக்கல்
1.10.2016 முதல் 31.07.2017 வரையிலான தணிக்கை குழு அறிக்கையை தணிக்கை குழு உறுப்பினர் காசிநாதன் தாக்கல் செய்து பேசினார்.
தலைவரானார் ஸ்டாலின்
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மைக்கைப் பிடித்து, தலைவர்- பொருளாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பெயரை பொதுச்செயலாளர் க.அன்பழகன் முறைப்படி அறிவிப்பார்கள். பொறுப்பேற்க உள்ளவர்களை தற்போது யாரும் இடையூறு செய்ய வேண்டாம். அவர்கள் இன்று மாலை அண்ணா அறிவாலயம் வந்து அனைவரின் அன்பையும் பெற்றுக் கொள்வார்கள் என்று கூறினார்.

தலைவர்-பொருளாளர் தேர்வு முடிவுகளை அறிவித்துப் பேசிய திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், “கலைஞரின் மகன் தலைவராக வர வேண்டும் என்று நிறைவேற்றப்படும் இந்த தீர்மானம் உங்கள் கருத்துக்கு விடப்படுகிறது. கலைஞரின் மகன் ஸ்டாலின், தனது இளம் வயதிலேயே கழகத்தின் செயல்பாடுகளில் ஈடுபட்டு, நெருக்கடி நிலையின்போது ஒராண்டுக்கும் மேல் சிறைக் கொட்டடியில் துன்பங்களை அனுபவித்துள்ளார். பின்னர் சென்னை மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக பல்வேறு நிலைகளை கடந்து வந்த நிலையில், திமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்காக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘தந்தை என்ற முறையில் ஸ்டாலின் முன்னேற்றத்திற்கு நான் எந்த கடமையும் ஆற்றவில்லை. ஆனால் மகன் என்ற முறையில் தன்னுடைய கடமைகளை சரிவர ஆற்றி, என்னை மகிமைப்பட வைத்திருக்கிறார் ஸ்டாலின். இப்படி ஒரு மகன் கிடைக்கப்பெற்றமைக்காக மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்று கலைஞர் கூறியுள்ளார்.
தலைவர் பதவிக்கு ஸ்டாலின் மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனுவில் 1307 பேர் முன்மொழியவும் வழிமொழியவும் செய்துள்ளனர். தலைவர் பொறுப்புக்கு ஸ்டாலின் தவிர யாரும் போட்டியிடாததால், ஸ்டாலின் கழகத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளும் எழுந்து நின்று தங்களது உற்சாக கரவொலியை எழுப்பினர். மேடைக்கு வந்த ஸ்டாலின், அண்ணா, கலைஞர் ஆகியோரின் படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய பிறகு அன்பழகன் காலின் விழுந்து ஸ்டாலின் ஆசி பெற்றார். அவருக்கு க.அன்பழகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பொருளாளராக துரைமுருகன் தேர்வுசெய்யப்பட்டதாகவும் அறிவித்தார்.
செயல்தலைவர் பதவி நீக்கம்
திமுக செயல்தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்படுவதாகவும், புதிதாக தொழில்நுட்ப அணி உருவாக்கப்படுவதாகவும், மாவட்டத் தலைநகரங்களில்தான் கட்சி அலுவலகம் அமைய வேண்டும் என்றும் அங்கு கண்டிப்பாக ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை: