வியாழன், 30 ஆகஸ்ட், 2018

அழகிரி : கட்சியில் மீண்டும் சேர்த்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார்:

tamilthehindu :திமுகவில் தன்னை மீண்டும் சேர்த்துக்கொண்டால், ஸ்டாலினைத்
தலைவராக ஏற்கத் தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மூத்த மகனுமாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் செப்.5-ல் அமைதிப் பேரணி நடக்கும் என அழகிரி அறிவித்துள்ளார். அதனையடுத்து அவர் தினமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ''கட்சியில் சேரும் எண்ணம் இருந்தால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்'' என்றார்.
திமுக பொதுக்குழு கூடி ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொண்டது குறித்துக் கேட்டபோது, ''1,500 பேர் மட்டுமே கட்சியை உருவாக்கிவிட முடியாது. உண்மையான கட்சித் தொண்டர்கள் என்னிடம் உள்ளார்கள். பேரணிக்குப் பிறகு அந்த எண்ணிக்கை அதிகரிக்கும்'' என்றார்.
'பதவி தேவையில்லை'
மேலும் பேசிய அழகிரி, கட்சியில் மீண்டும் இணைய தனக்கோ தன் மகன் தயாநிதி அழகிரிக்கோ கட்சியில் எந்தப் பதவியும் தரத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தன்னுடைய தந்தை கருணாநிதியைத் தவிர யாரையும் தன் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அழகிரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: