சனி, 1 செப்டம்பர், 2018

ஸ்டாலினைச் சந்திக்கக் கெடுபிடி?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினைச் சந்திக்கக் கெடுபிடி?
மின்னம்பலம்: “இனி என்னைப் பார்க்க யாரும் வீட்டுக்கு வர வேண்டாம். என்ன வேலையாக இருந்தாலும் அறிவாலயத்துக்கு வாங்க. இனி கட்சிக்காரங்களை அறிவாலயத்தில் மட்டுமே சந்திப்பேன்... - தலைவராகப் பொறுப்பேற்றதும் கட்சிக்காரர்களுக்கு இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் ஸ்டாலின். யாரையும் வீட்டில் இனி சந்திப்பதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால், அதையும் தாண்டி சிலர் மட்டும் விதிவிலக்காக வீட்டிலும் பார்க்கிறார்கள்.
அறிவாலயத்தில் கலைஞர் அறைக்கு வெளியே இருந்த பெயர்ப் பலகை மாற்றப்பட்டு, ஸ்டாலின், தலைவர் என்ற புதிய பலகை வைக்கப்பட்டுவிட்டது. அந்தத் தலைவர் அறைக்குச் செல்வதற்கு வெளியே உள்ள ஹாலில் எந்த நேரமும் காத்திருப்பவர் மகேஷ் பொய்யாமொழி மட்டுமே. அவரைக் கடந்துதான் யாராக இருந்தாலும் ஸ்டாலினைச் சந்திக்க முடியும். யார் வந்தாலும் முதலில் மகேஷுக்கு ஒரு வணக்கம் போட்டுவிடுகிறார்கள்.

அந்த வரவேற்பு அறையில் சோபா இருந்தாலும் மகேஷ் நின்றபடியேதான் இருக்கிறாராம். யாராவது வந்திருக்கும் தகவலைக்கூட மகேஷ்தான் ஸ்டாலின் அறைக்குள் சென்று சொல்லிவிட்டு வருகிறார். அதன் பிறகே ஸ்டாலின் வெளியே வந்து விருந்தினர்களைச் சந்திக்கிறார். கட்சியின் சீனியர்களே வந்தாலும் இதுதான் நடைமுறையாகிவிட்டது.
அதேபோல அந்த ஹாலில் வைக்கப்பட்டுள்ள டிவியில் கலைஞர் செய்திகள் சேனல்தான் ஒடுகிறது. அதில் எதுவும் தவறுகளைப் பார்த்தால் உடனடியாக சேனலுக்குப் பேசுகிறார் மகேஷ். ‘இதை இப்படி மாத்தச் சொல்லுங்க’ என சில ஐடியாக்களையும் கொடுக்கிறார். கையில் வைத்திருக்கும் ஐ-பேடில் சோஷியல் மீடியாவில் வரும் செய்திகளை ஸ்டாலினிடம் காட்டுவதும் அவர்தான். ஸ்டாலின் கையில் இருக்கும் போன் சாதாரண கீ பேட் டைப்பிலான மொபைல்தான். அதில் நெட் வசதி எதுவும் கிடையாது. பேசுவதற்கு மட்டுமே அந்த எண்ணைப் பயன்படுத்திவருகிறார் ஸ்டாலின். பல நேரங்களில் மகேஷ் போனில்தான் ஸ்டாலின் பேசுகிறார்.
இதெல்லாம்தான் கட்சியின் சீனியர்களிடம் ‘இப்போ எங்களுக்கே கட்டுப்பாடு விதிக்கிறாங்க...’ என்ற புலம்பலை ஏற்படுத்தியுள்ளது. என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது. “கலைஞருக்கு அகில இந்தியத் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று சென்னையில் நடந்தது தெரியும். அந்த நிகழ்வுக்கு வந்த தலைவர்கள் எல்லோருமே செம ஹேப்பியாம். காரணம், விழாவுக்குச் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள்தானாம். நிகழ்ச்சிக்கு வரும் தலைவர்களைச் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பதில் தொடங்கி, அவர்களை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வது, அங்கிருந்து விழா மேடைக்கு அழைத்து வருவது, மீண்டும் ஹோட்டல், அங்கிருந்து ஏர்போர்ட் என எல்லா ஏற்பாடுகளும் பக்காவாகச் செய்யப்பட்டிருந்தனவாம்.
ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு நபரை இதற்காகவே நியமித்திருக்கிறார் ஸ்டாலின். அதுவும் சாதாரணமான ஆட்கள் இல்லை; தயாநிதி மாறன் உள்ளிட்ட முக்கியமானவர்கள்தான் இந்த வரவேற்பு வேலையைக் கவனித்தார்களாம். இதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர் கனிமொழி. யாரை, யார் அழைக்க வேண்டும் என்பதில் தொடங்கி, விழா நடக்கும் மேடையில் போடப்பட்ட சேர்களின் ஆர்டர், யார் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என அனைத்தையுமே கனிமொழிதான் ஏற்பாடு செய்திருக்கிறார். அகில இந்தியத் தலைவர்கள் கிளம்பும் போது எல்லோருமே ஸ்டாலினிடம் சொன்னது, ‘ஃபர்பெக்ட் அரேஞ்ச்மெண்ட்’ என்பதுதான்.
விழா முடிந்த பிறகு, கனிமொழியிடம் ஸ்டாலினும், ‘ரொம்பவும் நல்லா பண்ணிட்டீங்கன்னு எல்லோரும் பாராட்டினாங்க. அந்தப் பெருமையெல்லாம் உனக்குத்தான்...’ எனப் பாராட்டினாராம்”

கருத்துகள் இல்லை: