திங்கள், 27 ஆகஸ்ட், 2018

BBC : வாஜ்பேயி மென்மையானவரும் அல்ல, அவரது ஆட்சி ஊழலற்றதும் அல்ல

வாஜ்பேயிபேராசிரியர் அ.மார்க்ஸ்.மனித உரிமை செயற்பாட்டாளர்< (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்) இன்று அரசாலும் ஊடகங்களாலும் முன் நிறுத்தப்படுகிறார்.
ஒரு பக்கம் அவர் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆகியவற்றின் விசுவாசமான ஊழியராகவே வாழ்வைத் தொடங்கி முடித்தவராயினும், இன்னொரு பக்கம் அவர் ஒரு மென்மையான இந்துத்துவவாதி, பாபர் மசூதி இடிப்பில் கலந்து கொள்ளாதவர், குஜராத் 2002 வன்முறையைக் கண்டித்தவர், அவரது ஆளுகை ஊழலற்ற ஒன்று என்பதாக அவரது பிம்பம் இன்று கட்டமைக்கப்படுகிறது.
அவரது கட்சி மட்டுமின்றி, ஊடகங்களும். இந்தப் பிம்ப உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தப் பின்னணியில் இந்துத்துவ அரசியல் குறித்த மாற்றுக் கருத்து உடையவர்களாலும் கூட, “ஒரு தவறான கட்சியிலிருந்த சரியான மனிதர்” என்றெல்லாம் அவ்வப்போது அவர் குறித்து கருத்துக்கள் உதிர்க்கப்படுகின்றன.
நான் அவரது ஆட்சிக் காலங்களை மிகக் கூர்மையாகக் கவனித்துக் குறைந்த பட்சம் நான்கு நூல்களுக்கு மேல் எழுதியவன் என்கிற வகையில் இந்தக் கருத்துக்கள் எதிலும் எனக்கு உடன்பாடில்லை.




வாஜ்பேயி மற்றும் கருணாநிதி
இந்துத்துவ அரசியலுக்கு எதிரானவன் என்கிற வகையில் என் கருத்துக்கள் ஒரு பக்கச் சார்பானவை என யாரும் குற்றஞ்சாட்டினால் அதில் நியாயம் உண்டு.
ஆனால் அந்தக் குற்றச்சாட்டு மட்டுமே நான் வாஜ்பேயி குறித்துச் சொல்பவை தவறு எனச் சொல்வதற்கு ஆதாரங்களாகிவிடாது.
குஜராத் வன்முறையை கண்டிக்கவில்லை
மோடி ஆட்சியில் குஜராத்தில் (2002) நடந்த மிகப் பெரிய மத வன்முறையில் பெரிய அளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது வாஜ்பேயி அதைக் கண்டித்தார் என்கிற கருத்தை எடுத்துக் கொள்வோம். அது ஒரு தவறான கருத்து.
அப்படிப் பெரிதாக மோடியை அவர் எதுவும் கண்டிக்கவில்லை. “ஆள்பவர்களுக்கு ராஜதர்மம் வேண்டும்” என மோடியை வாஜ்பேயி கண்டித்தார் என்பார்கள்.
குஜராத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது வாஜ்பேயி அப்படிச் சொன்னது உண்மை. மேடையில் அமர்ந்திருந்த மோடி, “நான் அப்படித்தான் ஆட்சி நடத்துகிறேன்” என்றார். வாஜ்பேயி உடனடியாக அதை ஏற்று அதை உண்மை என்றார். அதுதான் அன்று உண்மையில் நடந்தது.



வாஜ்பேயி மற்றும் வை. கோபால்சாமி
சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் நடந்த மிகப்பெரிய மதக் கலவரம் அது. ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடிழந்தனர். கண்முன் கொலைகளை மோடியின் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது.
ஒரு கேபினட் அமைச்சர் வன்முறைகள் நடந்து கொண்டிருந்த ஒவ்வொரு இடங்களாகச் சென்று வன்முறையாளர்களை ஊக்குவித்துக் கொண்டு வந்தார்.
இப்படியான வன்முறையில் வாஜ்பேயி ஒரு பிரதமராக இருந்து தெரிவித்த கண்டனம் இவ்வளவுதான். அதற்கு மேல் எந்த நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் நரேந்திரமோதி பதவி விலகவேண்டும் என்று கூட அவர் சொல்லவில்லை.
பாபர் மசூதி இடிப்பை எதிர்க்கவில்லை



பாபர் மசூதி இடிப்புபடத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாபர் மசூதி இடிப்பு
பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று அவர் அந்த இடத்தில் இல்லாதிருந்திருக்கலாம். அத்வானியுடன் ரத யாத்திரையில் பங்கு பெறாமலும் இருந்திருக்கலாம்.
ஆனால் வாஜ்பேயி மசூதி இடிப்பை எந்நாளும் எதிர்க்கவில்லை. குறைந்தபட்சம் வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே நாளில் அவர், “அயோத்தியில் இராமர் கோவிலைக் கட்டுவது என்பது இன்னும் பூர்த்தி செய்யப்படாத தேசிய உணர்வின் வெளிப்பாடு” எனக் கூறி (The Hindu, Dec 07, 1992) அதை ஆதரித்தார்.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் வேண்டுமென்றே வழக்கை இழுத்தடித்ததன் விளைவாக 1999 வரை வழக்கு விசாரணை தொடங்கவே இல்லை.< லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியபோது மத்தியில் வாஜ்பேயி தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சிதான்.



வாஜ்பேயியும், நரேந்திர மோடியும்
இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டபோது மசூதி இடிப்பு தொடர்பான இரண்டு குற்றப்பத்திரிகைகள் ஒன்றாக இணைக்கப்பட்டதில் ஒரு சட்டப்பிரச்சினை உள்ளது என நீதிபதி ஜகதீஷ் பல்லா குறிப்பிட்டார்.
அதைத் திருத்துவதற்கு அன்றைய பா.ஜ.க ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது. இன்றுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.
அணுகுண்டு வெடிப்பு புத்திசாலித்தனமானது அல்ல
வாஜ்பேயி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டு வெடிப்பு எந்த வகையிலும் புத்திசாலித்தனமானது அல்ல. ஏற்கனவே 1974 லேயே இந்திரா பிரதமராக இருந்தபோது அணுகுண்டு வெடித்து இந்தியா அணு வல்லமையுள்ள நாடு என்பது நிறுவப்பட்டு விட்டது.
ஜெயலலிதா மற்றும் வாஜ்பேயிமீண்டும் ஒரு முறை சிறிய அளவிலான குண்டுகளை வெடித்து அன்று வாஜ்பேயி அரசு பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. இந்தியா ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இன்றுவரை ஆக முடியாமல் இருப்பது ஒன்றுதான் இதனால் விளைந்த ஒரே பயன்.

காவிமயமான ராணுவம்
“ராணுவத்தை காவி மயமாக்குவது” என்பது இந்துத்துவத்தின் அடிப்படை அணுகுமுறைகளில் ஒன்று. வாஜ்பேயி ஆட்சியில் மிகப்பெரிய அளவில் ராணுவத்தில் இந்துத்துவக் கருத்தியல் உடையவர்கள் புகுத்தப்பட்டனர்.
வாஜ்பேயி அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட கப்பற்படைத் தளபதி விஷ்ணு பக்வத், “இக்காலகட்டத்தில் ராணுவத்தில் பெரிய அளவில் காவிக் கருத்தியலுடையவர்கள் பல்வேறு மட்டங்களில் புகுத்தப்பட்டனர்” என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பின்னாளில் மலேகான் (2008), மெக்கா மசூதி, சம்ஜூதா எக்ஸ்பிரஸ் (2007) ஆகியவற்றில் குண்டுகள் வெடித்துப் பலரும் கொல்லப்பட்டபோது அதற்குக் காரணமாக இந்துத்துவ அமைப்பினர் பலர் கைது செய்யப்பட்டனர்.



Presentational grey line
வாஜ்பேயி: இந்துத்துவ பாஜக-வின் மிதவாத முகம் – காணொளி




வாஜ்பேயி: இந்துத்துவ பாஜகவின் மிதவாத முகம்

Presentational grey line
அவர்களுள் ஸ்ரீகாந்த் புரோஹித், ரமேஷ் உபாத்யாயா முதலான முன்னாள், அன்னாள் ராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். ராணுவ வெடிமருந்துக் கிடங்கிலிருந்து கொண்டுவரப்பட்ட வெடிமருந்துகள் இந்தத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதும் உறுதியாயிற்று.



சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம்படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம்
இரண்டு
1995 மே 7 ம் நாள் அன்று ஆர்.எஸ்.எஸ்.சின் ‘ஆர்கனைசர்’ இதழில் வாஜ்பேயி கட்டுரை ஒன்று எழுதினார். “சங்கம் எனது ஆன்மா” என்பது தலைப்பு. சங்கம் என்பது ‘ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம்’ (RSS) என்பதைக் குறிக்கிறது.
இக்கட்டுரை இன்றும் சங்கத்தின் அதிகாரபூர்வ இணையத் தளத்தில் உள்ளது. அடுத்த சில மாதங்களில் அவர் பிரதமர் நாற்காலியில் முதல் முறையாக அமரப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ் முன்னுள்ள இரண்டு கடமைகளாக அவர் அதில் குறிப்பிடுவன:
1. இந்துக்களை அமைப்பாக்க வேண்டும்
2. முஸ்லிம்களைத் தன்வயப்படுத்த வேண்டும்.
இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் மிக முக்கியமானவை.



வாஜ்பேயி
அடுத்து அவர் இதற்கான முஸ்லிம்கள் குறித்த அணுகல் முறைகள் எப்படியெல்லாம் இருக்க முடியும் என்பதற்கு மூன்று வடிவங்களைச் சொல்கிறார். அவை:
அ. திரஸ்காரம்: ஒதுக்குதல், விலக்குதல். அதாவது முஸ்லிம்களின் இருப்பையும் அடையாளங்களையும் மறுத்தல்;
ஆ. புரஸ்காரம்: முஸ்லிம்களுக்குச் சலுகைகள் கொடுத்து அவர்களை வசப்படுத்தல்.
இ. பரிஸ்காரம்: அவர்களை மாற்றிச் செரித்துக் கொள்ளுதல்.
இதில் இரண்டாவதாக அவர் குறிப்பிடுவது காங்கிரசின் அணுகல்முறையாம். மற்ற இரண்டும்தான் அவர்களின் அணுகல்முறைகளாம்.
அதாவது முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாக விலக்குவது அல்லது அவர்களை அடையாளம் இழக்கச் செய்து உள்ளே கொண்டுவருவது.
அவைதான் இன்று பசுக் கொலைகள், ‘கர்வாபசி’, ‘சுத்தி’ எனப் பல்வேறு நடவடிக்கைளாகச் சங்கப் பரிவாரங்களால் மேற்கொள்ளப்படுபவை.
வாஜ்பேயியின் மென்மை இந்துத்துவம் என்பது இதுதான்.
மூன்று
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்புகளுக்கு இடையே எப்போதும் ஒரு மெல்லிய ‘இழுபறி’ நிலவும். அதனுடைய சுதேசியக் கொள்கைக்கும், கார்ப்ரேட் ஆதரவுக்கும் இடையிலான முரண்தான் அது.
ஆனால் இறுதியில் வலிமையான இந்தியா, நவீனமான இந்தியா என்கிற முழக்கத்தின் ஊடாக சுதேசியம் என்பது ஊற்றி மூடப்படும்.
காங்கிரஸ் முதலான கட்சிகளைக் காட்டிலும் பலமடங்கு தீவிரமான கார்ப்ரேட் மயமாதல், அந்நிய மூலதன ஊடுருவல் ஆகியவற்றிற்கு வழி திறக்கப்படும்.



வாஜ்பேயிபடத்தின் காப்புரிமை Getty Images
வாஜ்பேயி தலைமையிலான அரசுக்கும், மோதி அரசுக்கும் இந்த வகையில் எந்த வேறுபாடும் இல்லை. வாஜ்பேயி அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகள் மட்டும் இங்கே:
1.இந்திய காப்பீட்டுத் துறையில் அந்நிய மூலதன நுழைவைக் கடுமையாக எதிர்த்து வந்தது பா.ஜ.க. ஆனால் 1998 ல் வாஜ்பேயி அரசு அதிகாரத்தில் அமர்ந்தவுடன் முன்வைத்த ‘இன்சூரன்ஸ் சட்ட வரைவு’ அத்துறையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதோடு 40 சத அந்நிய மூலதனத்துக்கு வழிவகுத்தது.
2. தயாரிப்பு முறைக்கு வேண்டுமானால் ‘பேடன்ட்’ உரிமம் வழங்கலாம். ஆனால் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு ‘பேடன்ட்’ உரிமம் வழங்கக் கூடாது என்பது பா.ஜ.கவின் கொள்கை. ஆனால் ஆட்சிக்கு வந்த பின் தயாரிக்கப்பட்ட பொருளுக்கும் ‘பேடன்ட்’ உரிமம் வழங்கும் வரைவைச் சட்டமாக்கியது (1998) வாஜ்பேயி அரசு.



3. முன்னுரிமை இல்லாத துறைகளில் அந்நிய நேரடி மூலதனத்திற்கு கட்டுப்பாடு வேண்டும்; உயர் தொழில்நுட்பம், உள் கட்டுமானம் முதலான முன்னுரிமைத் துறைகளில் மட்டும் அந்நிய மூலதனத்தை அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த வாஜ்பேயி ஆட்சிக்கு வந்த பின் முன்னுரிமை இல்லாத துறைகள் எவை என வரையறுக்க மறுத்தார். புகையிலை, சாராய வகைகள் உட்பட எல்லாவற்றிலும் அந்நிய நேரடி மூலதன நுழைவிற்கு வழி வகுக்கப்பட்டது.
சுருக்கம் கருதி ஒரு சிலவற்றை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன்.



படத்தின் காப்புரிமை Getty Images
இந்தியப் பொருளாதாரம் கார்பொரேட் மயமாவதற்கான செயல்பாடுகள் வாஜ்பேயி அரசில் தீவிராமாயின.
டாக்டர் இராதாகிருஷ்ணன், பேரா.கோத்தாரி முதலான புகழ்மிக்க கல்வியாளர்கள் தலைமையில் கல்விக் கொள்கை அறிக்கைகள் உருவாக்கிக் கொண்டிருந்த மரபு வாஜ்பேயி ஆட்சியில் மாற்றப்பட்டது.
குமாரமங்கலம் பிர்லா, முகேஷ் அம்பானி என்கிற இரு கார்பொரேட் பெருமுதலாளிகளின் தலைமையில் உயர்கல்விச் சீர் திருத்தம் தொடர்பான குழு அமைக்கப்பட்டது.
‘நீட்’ உட்பட இன்றைய உயர்கல்விப் பிரச்சினைகள் பலவற்றிற்கும் தோற்றுவாயாக அமைந்தது அந்த அறிக்கையின் பரிந்துரைகள்.



வாஜ்பேயி மற்றும் எல்.கே. அத்வானிபடத்தின் காப்புரிமை Getty Images
“மாவட்டம்தோறும் ஒரு நவோதயாப் பள்ளி, மதிப்பீட்டுக் கல்வி எனும் பெயரில் புராண இதிகாசங்களைப் பாடத் திட்டத்தில் சேர்ப்பது, தேசிய அளவில் ஒரு பொதுவான பாடத் திட்டத்தை நோக்கி நகர்வது, ஆரம்ப மற்றும் நடுநிலைக் கல்விகளில் உள்ளூர்ச் சமூகத்திடமிருந்து நிதி திரட்டுவது. சந்தைத் தேவையை ஒட்டிக் கல்வி அமைப்பை மாற்றுதல், பல்கலைக் கழகங்களுக்கு நிதியைக் குறைத்து மாணவர் கட்டணங்களை அதிகப் படுத்துதல், புதிய தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கச் சட்டம் இயற்றுதல், கல்லூரிகள் தரச் சான்றிதழ் (accreditation) பெறுவதைக் கட்டாயமாக்குதல், கல்லூரிகளைத் தன்னாட்சிக் கல்லூரிகளாக்குதல், உயர் கல்வியில் அந்நிய நேரடி முதலீடு, பல்கலைக்கழகங்களில் அரசியல் நடவடிக்கைகளைத் தடைசெய்தல், வெளிநாட்டு மாணவர்களுக்கு உயர்கல்விச் சந்தையைத் திறந்துவிடல், இதற்கெல்லாம் தோதாகப் பொருளாதாரத்தை எல்லாவிதக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுவித்தல்” முதலான பரிந்துரைகளை அந்த அறிக்கை முன்வைத்தது.
இவை அனைத்தும் இன்று நடைமுறைகளாகிவிட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் பாடநூல்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், உயர்கல்வி நிறுவனங்களை இந்துத்துவ சக்திகளைக் கொண்டு நிரப்பியது, ஜோதிடம், வேதம் முதலானவற்றையெல்லாம் பாடத் திட்டத்தில் புகுத்தியது முதலான செயல்பாடுகளுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்புகள் உருவாயின.



வாஜ்பேயி
வாஜ்பேயி இறப்பை ஒட்டி அவரது சாதனைகளாக இன்று தொலைத் தொடர்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சி, நால்வழிச் சாலைகள் மூலம் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டது, அணுவல்லமை பெற்ற நாடாக இந்தியா ஆகியது, பொதுத்துறைகள் தனியார் மயமாக்கப்பட்டது ஆகியன முன்வைக்கப்படுகின்றன.
தொலைத் தொடர்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட “புரட்சி” என்பது இன்று உலக அளவில் ஏற்பட்டுள்ள ஒன்று. அரசு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., வி.எஸ்.என்.எல். ஆகியன வீழ்த்தப்பட்டு இன்று ரிலையன்ஸ் முதலான கார்ப்ரேட்கள் நுழைவதற்கும், பெரும் ஊழல்களுக்கும் அவை வழி வகுத்தன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இந்தியாவின் பெருமை மிக்க நிறுவனங்களாக இருந்த பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டதை பெருமைக்குரிய செயலாக கருத இயலாது. வாஜ்பேயி ஆட்சியில்தான் ‘நவரத்தினங்கள்’ என்றெல்லாம் போற்றப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை சிதைத்து விற்பதற்கென்றே ஒரு துறை அமைக்கப்பட்டு அதற்கென ஓர் அமைச்சரும் நியமிக்கப்பட்ட அவலம் நிகழ்ந்தது.
நான்கு
பிரதமர் பதவி ஏற்றபோது மிகவும் தளர்ந்த உடலையுடைய ஒரு வயோதிகர் வாஜ்பேயி. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டின் அரசுப் பொறுப்பை நிர்வகிக்க அவருக்கு நம்பிக்கையான துணைகள் தேவையாக இருந்தன.

கூட்டணிக் கட்சிகளை அதிகமாக முண்ட விடாமல் ஒடுக்கி வைக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இருந்தது. இந்தப் பின்னணியில்தான் அவர் பிரஜேஷ் மிஸ்ரா, என்.கே.சிங் என்கிற தனக்கு மிகவும் நம்பிக்கையான இருவரைப் பெரும் அதிகாரங்கள் உள்ள பதவிகளைக் கொடுத்து அருகில் வைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
இவர்களோடு எந்தப் பதவியும் இல்லாமல் ஒட்டிக் கொண்ட வாஜ்பேயியின் வளர்ப்பு மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யாவையும் சேர்த்து ஒரு சூப்பர் அரசாக அவர்கள் செயல்படத் தொடங்கினர்.
கேள்விக்குறியான ஜனநாயக அமைப்பின் நடைமுறை
வேறு எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு ஓர் அதிகாரம் குவிந்த உச்சி அமைப்பாகப் பிரதமர் அலுவலகம் (PMO) இந்திய வரலாற்றில் முதல் முறையாக உருவாகியது.
இந்த பிரஜேஷ் மிஸ்ராவும், என்.கே சிங்கும் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ‘ஏஜென்டுகள்’ எனச் சொல்லும் அளவுக்கு நெருக்கமானவர்கள்.
பிரதமரின் முதன்மைச் செயலர், தேசப் பாதுகாப்ப்பு ஆலோசகர் என இரட்டைப் பதவிகள் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்டன. தேசப்பாதுகாப்பு ஆலோசகர் என்பது அதுவரையில் இல்லாத ஒரு பதவி. ‘பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான சிறப்பு அதிகாரி’ என்கிற பதவி உருவாக்கப்பட்டு சிங்கிற்கு அளிக்கப்பட்டது.



அத்வானிபடத்தின் காப்புரிமை PTI
அமெரிக்க அரசைக் காப்பி அடித்து உருவாக்கப்பட்ட பதவிகள் இவை. சிங் இடையில் ஓய்வுபெற்றுவிட்ட போதும் ‘பிரதமர் அலுவலகச் சிறப்பு அலுவலர்’ என்கிற பெயரில் அவர் தக்க வைக்கப் பட்டார்.
இதற்கெல்லாம் அரசியல் சட்டத்தில் இடமில்லை. அரசியல் சட்டப்படி அமைச்சரவைதான் உயர் அமைப்பு. அமைச்சரவைச் செயலர் (Cabinet Secretary) தான் உயர் அதிகாரப் பதவி. கூட்டு முடிவுகளுக்கு அமைச்சரவைதான் பொறுப்பு. துறை சார்ந்த முடிவுகளுக்கு அந்தந்த அமைச்சர்களும், செயலர்களும் பொறுப்பு.
ஒரு அமைச்சரவையின் முடிவைப் பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டுமானால் மொத்த அமைச்சரவையையும் கூட்டித்தான் அதைச் செய்ய வேண்டும். இதுதான் ஒரு ஜனநாயக அமைப்பின் நடைமுறை.
அதிகார குவியல்
ஆனால் இந்த ஜனநாயக நெறிகளை எல்லாம் தாண்டிய ஒரு சூப்பர் அரசாக வாஜ்பேயியின் அலுவலகம் அதிகாரத்திலும், அளவிலும் பெரியதாகியது. அதன் ஒரு உச்சகட்ட அதிகாரக் குவியலை இன்றைய மோடி ஆட்சியில் நாம் காண முடியும்.
பிரதமர் அலுவகம் என்கிற பெயரில் அமைச்சரவை முடிவுகளில் தலையிட்டுத் தமக்கு வேண்டிய கார்ப்ரேட்களுக்கு வேண்டிய சலுகைகளைச் செய்ய இந்தச் சிறப்பு அதிகாரிகள் இதன் மூலம் வாய்ப்புகள் பெற்றனர்.
காஷ்மீர்ப் பிரச்சினை உட்படப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் முடிவெடுக்கும் சிறப்பு அதிகாரம் மிஸ்ராவுக்கும், அந்நிய மூலதனம் உட்பட முக்கிய தொழில்துறை அதிகாரங்கள் சிங்கிற்கும் அளிக்கப்பட்டன.



அதோடு துறை சார்ந்த சிறப்பு முடிவுகளை எடுக்க ‘அமைச்சரவைக் குழுக்களை’ (GoM) அமைக்கும் முறையும் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் துறை சார்ந்த அமைச்சர்களின் அதிகாரமும் பறிக்கப்பட்டு, அமைச்சரவைக்குழு என்கிற பெயரில் பிரதமர் அலுவலகமே முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டது.
அமைச்சரவைக் குழுக்களில் தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க, திரிணாமூல் முதலான 21 கட்சிகள் ஒதுக்கப்பட்டன. இதன் மூலம் கூட்டணி ஆட்சி என்பதும் கேலிக்கூத்தாக்கப்பட்டது.
இப்படியான அமைச்சரவைக் குழுவை அமைத்து பெருந்தொழில் நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கப்பட்ட ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்கே காணலாம்.
2001 ஜனவரி 29 அன்று தொலைத் தொடர்புச் செயலர் சியாமல் கோஷ் தொழில்துறைச் செயலர் பியூஷ் மன்காடுக்கு ஒரு கடிதம் எழுதினார். இதை ‘அவுட்லுக்’ இதழ் (மார்ச் 5, 2000) வெளியிட்டு அம்பலப்படுத்தியது.
பிரச்சினை இதுதான்: வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தொழில்துறையிடம் உள்ளது. தொலைத் தொடர்புத் துறை திறந்துவிடப்பட்ட காலம் அது. சில வெளிநாட்டு நிறுவனங்கள் 70 சதத்திற்கும் மேலாக முதலீடு செய்ய அனுமதி கோரியிருந்தன.



பேராசிரியர் அ. மார்க்ஸ்

ஆனால் 49 சதத்திற்கும் மேலாக வெளிநாட்டு மூலதனத்திற்கு அனுமதி இல்லை என்கிற விதியின்படி தொழில்துறை அவற்றை மறுத்துவிட்டது. ஆனால் வாஜ்பேயியின் பிரதமர் அலுவலகம் நியமித்த அமைச்சரவைக்குழு ஒன்று தொழில்துறை அமைச்சகத்தின் ஆணையைப் புறந்தள்ளி, தொழில்துறை அமைச்சர் உட்பட யாருக்கும் தெரியாமல் இந்த அனுமதிகள் வழங்கப்பட்டன.
தமக்குத் தெரியாமலேயே இவ்வாறு தம் ஆணை புறக்கணிக்கப்பட்டு இந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதைக் கண்டித்து தொழில்துறைச் செயலர் பியூஷ் எழுதிய கடிதத்தைத்தான் அவுட்லுக் இதழ் அம்பலப்படுத்தியது.
இவை தவிர பிரதமரின் பொருளதார ஆலோசனைக்குழு (EAC), செயற்திட்ட நிர்வாகக் குழு (SMG) ஆகியவற்றின் ஊடாக பிரதமர் அலுவலகம் நேரிடையாகத் தலையிட்டு எடுத்த வேறு சில முடிவுகள்:
1.ஹிர்மா மின்சாரத் திட்டத்திற்கு (ஒரிசா) ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 20,000 கோடி ரூபாய் லாப உத்தரவாதத்துடன் அனுமதி அளிக்கப்பட்டது. நிதி, பொருளாதாரம், மின்சாரம் ஆகிய மூன்று துறை அமைச்சகங்களும் இதற்கு ஏற்கனவே அனுமதி மறுத்திருந்த நிலையில் பிரஜேஷ் மிஸ்ராவின் தலைமையிலான குழு நவம்பர் 17, 2000 அன்று இந்த அனுமதியை ரிலையன்சுக்கு அளித்தது.
2.நிதி அமைச்சகமும், பொது முதலீட்டு வாரியமும் மறுத்த யூரியா இறக்குமதித் திட்டம் ஒன்றை ஜனவரி 24, 2001 அன்று பிரதமர் வாஜ்பேயியின் அலுவலகம் அனுமதித்தது. சுமார் இரண்டு பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி இந்தியாவுக்கு செலவாகும் ஒரு தேவையற்ற திட்டம் இது.
3.நிலையான தொலைத்தொடர்புச் சேவை (FSPS) அளிக்கும் மொபைல் தொலைபேசிச் சேவைக்கு (LMS) அனுமதி வழங்கும் முடிவொன்றை பிரதமர் வாஜ்பேயி அலுவலகம் ஜனவரி 5, 2001 அன்று எடுத்தது. ஒரு மெகா ஹெர்ட்ஸ் ரூ 830 கோடி விலை உள்ள 30 மெகாஹெர்ட்ஸ் அதிர்வெண்களை ‘ரிலையன்ஸ்’ மற்றும ‘இமாச்சல் ஃப்யூச்சரிஸ்டிக் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெ’ எனும் நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கும் திட்டத்தை உள்ளடக்கியது இம்முடிவு. இதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பு ரூ 25,000 கோடி. மொபைல் உரிமையாளர் சங்கம் இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது (அவுட்லுக், பிப் 26, 2001). குஜராத் பூகம்பத்தால் பேரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் அதை ஈடுகட்ட வருமான வரி 2% உயர்த்தப்பட்ட பின்னணியில் ரிலையன்சுக்கும் இமாச்சல் லிமிடெடுக்கும் இந்தச் சலுகைகளை அளித்தார் வாஜ்பேயி.



பிரதமர் வாஜ்பேயி அலுவலகத்தின் இத்தகைய செயல்களைக் கண்டித்து பொருளதார விவகாரச் செயலர் இ.ஏ.எஸ். ஷர்மா நவம்பர் 2000ல் பதவி விலகியது குறிப்பிடத் தக்கது.
பிரதமர் அலுவலகம் மூலம் ரிலையன்ஸ், இந்துஜா முதலான நிறுவனங்கள் அரசை ஆட்டிப்படைப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். “தேவையானால் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும் அளவிற்கு இந்துஜாக்கள் அதிகாரம் மிக்கவர்களாக உள்ளனர்” என ஷர்மா குற்றம்சாட்டினார்.
அது மட்டுமல்ல ரிலையன்ஸ்களும் இந்துஜாக்களும் ஒரு வகையில் மாநில அரசுகளையும் காட்டிலும் அதிகாரம் மிக்கவர்களாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்குமுன் வரலாற்றில் இப்படியான நிலை இருக்கவில்லை. இந்திரா ஆட்சியில் இப்படி பிரதமர் அலுவலகம் நடைமுறையில் (defacto) அதிகாரம் பெற்றிருந்தது எனக் கூறினாலும் இத்தகைய முறை மீறல்கள் இந்த அளவிற்கு அப்போது சட்டபூர்வமாகவில்லை.
வாஜ்பேயியின் கடிதம் ஒன்றை எடுத்துக் கொண்டு ஒருமுறை பிரஜேஷ் மிஸ்ரா பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரைச் சந்திக்கப் போகிறார். போபார்ஸ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்துஜாவையும் அவர் கூட அழைத்துச் சென்றதையும் அவுட்லுக் இதழ் (மார்ச் 5, 2001) அம்பலப்படுத்தியது.
அரசுப் பணி நிமித்தம் இன்னொரு நாட்டுப் பிரதமரைச் சந்திக்கும் ஓர் உயரதிகாரி ஒரு தொழிலதிபரைக் கூட அழைத்துச் செல்வது ஜனநாயக மரபல்ல.



நவாஸ் ஷெரிஃப் மற்றும் வாஜ்பேயிபடத்தின் காப்புரிமை Getty Images
பொதுத்துறை நிறுவனமான ‘பாரத் அலுமினியம் கம்பெனி லிமிடெட்டின்’ (BALCO) பங்குகள் வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டுக்கு குறைந்த விலைக்குத் தரப்பட்டதும் வாஜ்பேயியின் காலத்தில்தான்.
பங்குச் சந்தை ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு ஸ்டெர்லைட், பி.பி.எல், வீடியோகான் ஆகியவை இரண்டாண்டுகாலம் மூலதனச் சந்தையில் பங்குபெறக் கூடாது என ‘செபி’ அமைப்பால் தடை விதிக்கப்பட்டிருந்த நேரம் அது.
அந்தத் தடையை மீறியும், பால்கோ ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்களைக் கண்டு கொள்ளாமலும் பால்கோவின் 51% பங்கை வெறும் 550 கோடி ரூபாய்க்கு வேதாந்தாவிடம் விற்றது வாஜ்பேயி அரசு.
ஐந்து
வாஜ்பேயி ஒரு திறமையான பிரதமராகவும் இல்லை. கார்கில் போர் பிரச்சினை ஓர் எடுத்துக்காட்டு.
இந்தியாவிற்கு மிகப்பெரிய படை இழப்பும், பொருள் இழப்பும் ஏற்படுத்திய போர் அது. இந்திய அரசின் கணக்குப்படி 1,300 இந்தியப் படை வீரர்கள் கார்கில் போரில் கொல்லப்பட்டனர். 1750 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானின் அறிக்கை கூறுகிறது.
பாபர் மசூதி இடிப்புக்கு யார் காரணம்? (காணொளி)




பாபர் மசூதி இடிப்பு: பிரச்சனை தொடக்கம் முதல் இன்று வரை

இந்தியாவிற்கு ஏற்பட்ட பொருள் இழப்பு 2.5 பில்லியன் டாலர் (ஃப்ரன்ட்லைன், செப் 29, 2000). அப்போதைய இந்திய அரசு, உளவுத்துறை மற்றும் ராணுவத்தின் கவனக் குறைவுகளே இந்த இழப்புகளுக்குக் காரணம் என இது குறித்த ஆய்வுகள் சொல்கின்றன.
ஜனவரி 1999 லிருந்து கார்கில் பகுதியில் நடந்துவந்த ஊடுருவலை மே 99 வரை இந்தியாவால் கண்டு பிடிக்க முடியவில்லை.
தனது உளவுத்துறை தவறிழைக்கவில்லை என வாஜ்பேயி அடித்துச் சொன்னார். ஆனால் இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சுப்பிரமணியம் குழு உளவுத்துறையின் தவறையும் தோல்வியையும் சுட்டிக் காட்டியது.
வாஜ்பேயி திறமையான பிரதமரும் அல்ல. அவரது ஆட்சி ஊழலுக்கு அப்பாற்பட்டதும் அல்ல. இந்தக் கட்டுரையில் நான் அவரது ஆட்சி, கல்வி மற்றும் இதர துறைகளில் புகுத்திய மிக ஆபத்தான் காவியாக்க முயற்சிகளை அதிகம் பேசவில்லை. வாஜ்பேயி அரசு அறுதிப் பெரும்பான்மையற்ற ஒரு கூட்டணி அரசு.
இப்போதுள்ள மோடி அரசு அறுதிப் பெரும்பான்மையுள்ள அரசு. மோடியைக் காட்டிலும் வாஜ்பேயி சற்றே மென்மையாகத் தோன்றுவதன் அடிப்படை இதுதானே ஒழிய சாரத்தில் இருவரும் ஒன்றுதான்.
bbc

கருத்துகள் இல்லை: