வியாழன், 30 ஆகஸ்ட், 2018

கலைஞர் குடும்பத்தினர் அழகிரிக்கு ஆலோசனை?

மின்னம்பலம் : “திமுகவிலிருந்து அதிருப்தியில் விலகி நிற்பவர்களையும்,
மாற்றுக் கட்சிக்குப் போனவர்களையும் இழுக்க அழகிரி முயற்சி செய்துவருவது தெரிந்ததுதான். அதே நேரம் அழகிரிக்கு முன்பாக அவர்களை எல்லாம் தன் பக்கம் இழுத்து ஆதரவுக்கரம் நீட்ட ஆரம்பித்துவிட்டார் ஸ்டாலின். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத அழகிரி கொஞ்சம் ஆடிப்போய்த்தான் இருக்கிறாராம்.
முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனையும் விழுப்புரத்தில் பொன்முடிக்கு எதிரானவர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அழகிரி பேசிவருவதை நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருந்தோம்.
விழுப்புரத்தில் என்ன நடந்தது என்பதைச் சொல்கிறேன்.
முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வான புஷ்பராஜ் தலைமைக்கு நம்பிக்கையானவர். பொன்முடிக்கும் புஷ்பராஜுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். புஷ்பராஜை, பொன்முடி தொடர்ந்து ஓரங்கட்டிவருகிறார்.
இதெல்லாம் தெரிந்துதான் புஷ்பராஜுடன் அழகிரி பேசியிருக்கிறார். அப்போது, ‘நீ இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் இப்படியேதான் இருக்கணும். பொன்முடி உன்னை வளரவிடவே மாட்டார்..’ என்று சொல்ல... அதற்கு புஷ்பராஜ், ‘நீங்க சொல்றது உண்மைதான்ணா… எனக்கும் பொன்முடிக்கும்தான் பிரச்னை. எனக்கும் தளபதிக்கும் எந்த பிரச்னையும் இல்லை.
இனி இது சம்பந்தமாகப் பேச வேண்டாம்...’ என்று சொல்லி போனைத் துண்டித்துவிட்டாராம்.

அதேபோல் முன்னாள் தர்மபுரி மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முல்லைவேந்தனுக்கும் அழகிரியிடமிருந்து போன் போயிருக்கிறது. ‘ தலைவர் கலைஞர் வளர்த்த கட்சி திமுக. எனக்கு அங்கே பல வருத்தங்கள் இருந்துச்சு. அதனால்தான் தேமுதிகவுக்குப் போனேன். அங்கே போன பிறகுதான் அது கட்சியே இல்லை என்பது தெரிஞ்சுது. ஏதோ ரசிகர் மன்றம் மாதிரிதான் தேமுதிக நடக்குது. அதனாலதான் இது எதுவும் வேண்டாம்னு விலகி நிற்கிறேன். இனி எந்தக் கட்சிக்கும் போகும் திட்டம் எனக்கு இல்லை. கடைசி வரை திமுக தொண்டனாக மட்டுமே இருந்துட்டுப் போயிடணும் என்பதுதான் என் விருப்பம். உங்க குடும்ப பிரச்னை எல்லாம் காலப்போக்கில் சரியாகிடும்...’ என்று சொல்லி அவரும் இணைப்பைத் துண்டித்திருக்கிறார்.
இன்று காலை, முல்லைவேந்தன் செல்போனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. போனை எடுத்திருக்கிறார். எதிர்முனையில் புதிய பொருளாளர் துரைமுருகன். ‘முல்லை, நான் துரைமுருகன் பேசுறேன்...’ என்று சொல்ல... ‘சொல்லுங்கண்ணே.. எப்படி இருக்கீங்க.. தளபதி எப்படி இருக்காரு...’ எனப் படபடத்திருக்கிறார் முல்லைவேந்தன். ‘தலைவர்தான் (ஸ்டாலின்) உங்ககிட்ட பேசச் சொன்னாரு. உன்னைப் பார்க்க மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்ரமணி வருவாரு. பாஞ்சாலி சபதம் முடிந்தது...’ என்று சொல்லிவிட்டு, போனை கட் செய்துவிட்டாராம் துரைமுருகன்.
அவர் சொன்னபடியே அடுத்த சில மணி நேரத்தில், முல்லைவேந்தன் தோட்டத்துக்கு தர்மபுரி மாவட்டச் செயலாளர் சுப்ரமணியன் போயிருக்கிறார். முல்லைக்கு சால்வை போட்ட கையோடு, யாருக்கோ போனையும் போட்டு அவர் கையில் கொடுத்திருக்கிறார். லைனில் இருந்தவர் எ.வ.வேலு. ‘நீங்க உடனே கிளம்பி சென்னைக்கு வாங்க. நாம தலைவரை சந்திக்கப் போகலாம்!’ என அழைத்திருக்கிறார் வேலு. உடனே முல்லையும் கிளம்பிவிட்டார்.
இப்படி அழகிரி யாரையெல்லாம் தொடர்பு கொண்டு பேசினாரோ அவர்களுக்கெல்லாம் ஸ்டாலின் தரப்பிலிருந்து உடனடியாக போனும் போகிறது. ஆளும் போகிறார்கள். இதுதான் அழகிரியை செம அப்செட் ஆக்கிவிட்டது” என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.
தொடர்ந்து, ஸ்டேட்டஸ் ஒன்றையும் டைப் செய்து போஸ்ட் கொடுத்தது. “கலைஞர் பயன்படுத்திய கண்ணாடியையும் அவர் பயன்படுத்திய கர்சீப்பையும் பத்திரமாக வைத்திருந்தார் மகள் செல்வி. அது இரண்டையும் தற்போது கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகன் அறிவுநிதியிடம் கொடுத்திருக்கிறார். கலைஞரின் மூத்த பேரனான அறிவுநிதி, அந்தக் கண்ணாடியையும் கர்சீப்பையும் தன் பூஜை அறையில் வைத்துப் பாதுகாத்துவருகிறாராம். இந்தச் சூழ்நிலையில் அழகிரியிடமிருந்து அறிவுநிதிக்கும் போன் போயிருக்கிறது. ‘நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த எல்லோரும் சேர்ந்து போவோம் வாங்க...’ எனக் கூப்பிட்டாராம்.
அதற்கு அறிவுநிதியோ, ‘நீங்க கூப்பிட்டது ரொம்பவும் சந்தோஷம் சித்தப்பா. ஆனால், இந்தச் சூழ்நிலையில் நாங்க அங்கே வருவது ஸ்டாலின் சித்தப்பாவை சங்கடப்படுத்தும். அதனால நாங்க வரலை. சித்தப்பா என்ற முறையில் உங்க மேல எனக்கு எப்பவும் மரியாதை உண்டு. குடும்பத்துல எந்த விழான்னாலும் சொல்லுங்க. முதல் ஆளா வந்து நிற்கிறேன். இந்த அரசியல் எனக்கு வேண்டாம்...’ என சொல்லிவிட்டாராம் அறிவுநிதி.
அதேபோல செல்விக்கும் அழகிரியிடமிருந்து போன் போயிருக்கிறது. ‘நீங்க எல்லோரும் ஒன்று சேர்ந்து இருக்கணும் என்று ஆசைப்பட்டது நான்தான். அது முடியலை. என்னால் சேர்த்து வைக்க முடியலை. அதுக்காக நான் தம்பியை எதிர்த்துக்க முடியாதுண்ணா... குடும்பமாக அப்பாவுக்கு அஞ்சலி செலுத்த எப்போ வேணும்னாலும் போகலாம்.
ஆனால், அதுல அரசியல் பண்ணனும்னு நீங்க நினைச்சு கூப்பிட்டால் தம்பியை பகைச்சுகிட்டு என்னால வர முடியாது..’ என்று சொல்லி தவிர்த்துவிட்டாராம்.
இப்படி எல்லோருமே அழகிரி கூப்பிட்டதுக்கெல்லாம் கைவிரிக்க ஆரம்பித்துவிட்டனர். என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் அழகிரி. அந்தக் குழப்பத்தின் வெளிப்பாடுதான் இன்று மீடியாவிடம் பேசியபோது அழகிரியிடம் வெளிப்பட்டது. ‘நான் திமுகவை எதிர்க்கவில்லை. என்னை திமுகவில் இணைத்துக்கொண்டால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார்” என்ற அளவுக்கு இறங்கிவந்துவிட்டார் அழகிரி. ஆனாலும் ஸ்டாலின் தயாராக இல்லை”

கருத்துகள் இல்லை: