வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

நெருக்கடி காலத்தில் கலைஞரின் தமிழகம்... 1975 இல் எமெர்ஜென்சி.. அடிகொடுத்த தமிழகம்

மின்னம்பலம் : ஆர்.விஜய் சங்கர் இந்திரா காந்தியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிரான போராட்டத்தை
முன்னெடுத்துச் சென்றதோடு, 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்திரா காந்தியின் அரசைக் கவிழ்த்த அரசியல் சக்தியில் மிக முக்கியப் பங்கையும் கருணாநிதி கொண்டிருந்தார்.
1975ஆம் ஆண்டின் ஜூன் 25, 26 தேதிகளில் இந்திரா காந்தியின் அரசு அவசர நிலையைப்
பிரகடனப்படுத்தியபோது, தமிழக அரசின் முதல்வராகவும் திமுக கட்சியின் தலைவராகவும் கருணாநிதி கடினமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவசர நிலைப் பிரகடனத்தைப் பற்றிய நிறைந்த புரிதலுடன் அதை எதிர்கொள்வதற்கான தைரியத்தை அவர் கொண்டிருந்தார். அப்போது தனது கட்சி பலவீனப்படுத்தப்பட்டு ஆட்சியை இழந்தபோதிலும், இதன் தாக்கம் ஏழு மாதங்கள் வரை தமிழகத்தின் மீது விழாமல் பார்த்துக்கொண்டார். அவரது அரசு கடைசியாக 1976 ஜனவரி 31ஆம் தேதி கலைக்கப்பட்டது.

ஜனநாயகத்தின் தீவாக உருவெடுத்த தமிழ்நாடு, வடஇந்தியாவிலிருந்து அவசர நிலைப் பிரகடனத்தைக் கண்டு அஞ்சிவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அடைக்கலம் வழங்கியது. அவசர நிலைக்கு எதிராகப் பத்திரிகைகளில் ஒரு வார்த்தைகூட எந்தவிதச் செய்தியும் வர முடியாமல் இருந்த அந்த நேரத்தில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.கே.கோபாலனின் பேச்சு தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
நெருக்கடியை உணர்ந்த கருணாநிதி
அவசர நிலைப் பிரகடனத்துக்கு முன்பு வரையிலான நிகழ்வுகளைப் பார்க்கும்போதே, தன் ஆட்சி கலைக்கப்படும் என்பதைக் கருணாநிதி முன்கூட்டியே அறிந்திருந்தார். மாநில அரசுகளுக்குச் சுயாட்சி வேண்டும் என்று கருணாநிதி தனது பல்வேறு மேடைப் பேச்சுகளில் முழங்கியுள்ளார். இதேக் கோரிக்கையும் அதற்கான அதிர்வலைகளும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இந்திரா காந்தியின் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எழுந்த சமயம் அது. அந்தச் சமயத்தில் ஜெய பிரகாஷ் உள்ளிட்ட பெரும் தலைவர்களுடன் கருணாநிதிக்கு நல்ல நட்புறவு இருந்தது.
1971 தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் இந்திரா காந்தியின் வெற்றி குறித்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த ராஜ் நாராயண் அலகாபாத் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்திரா காந்தி தோல்வியைச் சந்தித்தது அவரது அரசுக்கு எதிரான முதல் அடியாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தத் தீர்ப்பு இந்திரா காந்தியை ஆறு ஆண்டுக் காலத்துக்கு தகுதியிழக்கச் செய்தது. இந்திரா காந்தி ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் நெருக்கத் தொடங்கிவிட்டனர்.
தஞ்சாவூர் சென்றிருந்த கருணாநிதியிடம் இது தொடர்பாக கருத்துக் கேட்டபோது, “இப்போது ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி இந்தியாவின் மிகப் பெரிய கட்சியாகும். உலகின் பல்வேறு நாடுகளிடமிருந்து இந்தியாவுக்கு அதிக மதிப்பும் மரியாதையும் கிடைத்து வருகிறது. இந்தக் காரணிகளைக் கருத்தில்கொண்டு, மத்தியில் ஆளும் அரசால் எடுக்கப்படும் முடிவுகள் இந்தியாவின் எதிர்கால அரசியலுக்கு முன்னோடியாக அமைகின்றன. இதே போன்றதொரு நிலைமை தமிழகத்தில் திமுக கட்சிக்கு நேர்ந்தால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் செயல்பாடு இவ்வாறே இருந்திருக்கும்” என்றவர், இந்திரா காந்தி ராஜினாமா செய்திருக்க வேண்டுமா, என்ற கேள்விக்குப் பதிலாக, “அவர் ராஜினாமா செய்திருந்தால் அந்த முடிவை நாங்கள் பாராட்டியிருப்போம்” என்றார்.
இந்தச் சமயத்தில்கூட 1971ஆம் ஆண்டில் தான் கூட்டணியமைத்த காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவரையும் மிகவும் கண்ணியமாகவே கருணாநிதி பேசியுள்ளார். பின்னர் ஜூன் 23ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதோடு, இந்திரா காந்தி பிரதமராகத் தொடர்ந்து செயல்படவும் அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், இந்திரா காந்தியின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டது. இந்திரா காந்திக்கு எதிரான நீதிமன்றத்தின் இந்தத் தற்காலிக உத்தரவு நிபந்தனைக்குரியது என்பதால் இந்திரா காந்தி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராஜ் நாராயண் முறையிட்டார். இந்தக் கோரிக்கையை இந்திரா காந்தி ஏற்பதாக இல்லை. இதனால் ஜூன் 29ஆம் தேதி தேசிய அளவில் ஒரு மாபெரும் போராட்டத்தை நிகழ்த்த எதிர்க்கட்சியினர் ஒரு கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்தனர். இந்தக் கூட்டத்தில் திமுக சார்பாக கருணாநிதியும் பங்கேற்றார்.

இதன் விளைவாக, அமைச்சரவை உறுப்பினர்களைக் கலந்தாலோசிக்காமலேயே அவசர நிலை ஆட்சியை இந்திரா காந்தி பிரகடனப்படுத்தினார். அதன் பின்னர் பல்வேறு சட்டங்களையும் உத்தரவுகளையும் அரசியல் சட்டம் பிரிவு 19இன் கீழ் செயல்படுத்தினார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோருக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தை அணுக இதன்படி தடை விதிக்கப்பட்டது. பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் இந்திரா காந்தி முடக்கினார்.
இந்திரா காந்தியின் இந்த அவசர நிலை பிரகடனத்துக்கு இரண்டு மாநிலங்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தன. இதுபற்றி, டேவிட் செல்போர்ன் தனது ‘An Eye to India: The Unmasking of a Tyranny’ என்ற புத்தகத்தில், இந்த அரசுக்கு முடிவு கட்டவும், வலிமையான மற்றும் நிலையான கூட்டாட்சி அரசை உருவாக்கவும், கருணாநிதி தலைமையிலான தமிழக அரசும், பாபுபாய் ஜே.படேல் தலைமையிலான குஜராத் அரசும் இந்திரா காந்தியின் அவசர நிலை ஆட்சியை எதிர்த்து நின்றதாகக் குறிப்பிட்டிருந்தார்.
திமுக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் குஜராத் மாநில அரசுகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. 1967ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் வெறும் 15 இடங்களை மட்டுமே கைப்பற்றி திமுகவிடம் தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி அப்போது மத்தியில் ஆண்டுகொண்டிருந்ததால் திமுகவுக்கு எதிரான பலமான குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்களையும் திரட்டியது. சில மாதங்களிலேயே குஜராத்தில் ஆட்சி கலைக்கப்பட்டது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பின்தங்கி இருப்பதாகவும், மக்களைத் தவறான முறையில் வழிநடத்துவதாகவும் காங்கிரஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அவ்வாறு மாநில அரசுகள் (தமிழகம்) அதன் மக்களைத் தவறாக வழிநடத்தியிருந்தால் அதில் தேசியக் கட்சி தலையிட்டாக வேண்டும். எனவே, இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சிக்கு அச்சுறுத்தலாக இருந்த திமுகவுக்கு எதிராக இந்திரா காந்தி தனது நடவடிக்கையில் இறங்கினார். முதற்கட்ட நடவடிக்கையாக, 1976 ஜனவரி 9ஆம் தேதி மக்களவையில் இந்திரா காந்தி பேசுகையில், “என்னைப் பற்றிய அவதூறான தனிப்பட்ட தாக்குதல்கள் தமிழகத்திலிருந்து வந்துகொண்டிருப்பதாக அங்குள்ள எங்களது காங்கிரஸ் உறுப்பினர்களிடமிருந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. மேலும், ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தனிநபர் மேம்பாட்டுச் செலவுகள் தேசியச் சராசரியை விட மிகவும் சரிவடைந்துவிட்டது” என்றவர், “எந்தவோர் அரசாங்கத்தையும் (மாநில அரசு) இயக்குவது எனது பழக்கமே இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் நான் அவ்வாறு செய்ய வேண்டும்; ஏனென்றால், தங்களின் சொந்த செயல்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக அவர்கள் மத்திய அரசைக் குற்றம் சாட்டுகிறார்கள்” என்று தனது திமுகவுக்கு எதிரான தனது அஸ்திரத்தைத் தொடுத்தார்.
கருணாநிதி அதற்கு அசைந்தபாடில்லை. “எனது பதவி காலம் முடிவதற்கு முன் நான் ராஜினாமா செய்ய மாட்டேன்” என்று உறுதியாக இருந்தார். அவரது பதவி காலம் 1976 மார்ச் 15 வரையில் இருந்தது. ஆனால் அதற்கு 45 நாட்களுக்கு முன்னரே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.
1976 ஜனவரி 31ஆம் தேதி ஆட்சி கலைக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அந்நிய மூலதனத்திலிருந்து திமுக கணிசமான அளவில் நிதியுதவி பெற்றதாகவும், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், தலைமறைவாக இருப்பவர்களுக்குத் தமிழ்நாடு சரணாலயமாக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அதோடு, தமிழகத்தின் பொருளாதாரம் நலிந்துவிட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் திமுக அரசுக்கு எதிராகக் குவித்தன.
மொரார்ஜி தேசாய் அரசால் 1977 மே 28ஆம் தேதி அமைக்கப்பட்ட நீதிபதி ஜே.சி.ஷா தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குறி வைத்து மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்ட அக்கட்சி உறுப்பினர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக 570 பேர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டனர்’ என்று கூறப்பட்டிருந்தது.
ஷா கமிட்டியின் அறிக்கை
“இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் திமுக கட்சிக்குச் சம்பந்தப்பட்டவர்கள் என்றும், அவர்கள் ரவுடிகள் என்றும் அதிகம் பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏதேனும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்பதைக்கூடக் குறிப்பிடாமல் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.”
“கைது செய்யப்பட்ட நபர் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் அல்லது அக்கட்சியைச் சார்ந்தவர் அல்லது ஆதரவாளர் என்றும், அவரின் கட்டுப்பாட்டில் ரவுடி சக்திகள் இருந்தன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் தனது வட்டாரத்தில் நல்ல செல்வாக்கையும் பெற்றிருந்தார். திமுக அமைச்சரவை கலைக்கப்பட்ட பிறகு அவர் தனது கட்சிக்காரர்களுடன் தொடர்பில் இருந்ததோடு, தீய செயல்களிலும் ஈடுபடும் சூழலில் இருந்தார். சில விவகாரங்களில் அவர் அவசர நிலை குறித்தும், குடியரசுத் தலைவரின் ஆட்சி குறித்தும் விமர்சித்ததாகக் கூறப்பட்டுள்ளது. பல விவகாரங்களில், அவரைக் காவலில் வைத்ததற்கு, அரசுக்கு எதிரான அவரது பிரிவினைவாதப் பேச்சுகள் காரணமாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், எப்போது, எந்த நேரத்தில், எந்தத் தேதியில் அவர் பேசினார் என்பது குறித்த விவரங்கள் வழங்கப்படவில்லை.”
1977இல் வெளியான நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் குழுவின் அறிக்கை அதைவிட அதிர்ச்சியூட்டும் விதமாக இருந்தது. 1976 பிப்ரவரி முதல் 1977 பிப்ரவரி வரையில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் துன்புறுத்தப்பட்டவர்கள் பற்றிய அறிக்கைதான் இது. இந்த அறிக்கை பற்றிய விவரங்களைக் கட்டுரையாக 1978 ஏப்ரல் 22ஆம் தேதி எகனாமிக் & பொலிட்டிகல் வீக்லி பத்திரிகை வெளியிட்டது.
கொடூரமான துன்புறுத்தல்
அறிக்கையின் விவரம்: “உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், குறிப்பாக திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், பல எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மேயர்கள், ஒரு முன்னாள் அமைச்சர் ஆகிய அனைவரும் பிப்ரவரி 2ஆம் இரவில் சிறைச்சாலை அதிகாரிகளால் மிகவும் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளனர். இந்தத் துன்புறுத்தல்கள் தினமும் தொடர்ந்துள்ளன.
இவர்கள் சிறைக்குள் நுழைந்ததிலிருந்தே துன்புறுத்தல்கள் ஆரம்பித்துவிட்டன. தொழுநோயாளிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த மிக மோசமான அறைகளில் இவர்கள் அடைக்கப்பட்டனர். அந்த அறைகளில் ரத்தக் கறை படிந்த துணிக் கட்டுகள் கிடந்தன. இவர்களுக்கு உணவு, தண்ணீர், படுக்கை வசதி, உள்ளிட்ட எதையுமே கொடுக்கவில்லை. அறைக்கு வெளியே சிறை அதிகாரிகள் நின்றுகொண்டு ஒவ்வொரு பெயராக அழைத்து வெளியே இழுத்து வந்து கடுமையாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். லத்திக் கட்டையால் அடித்ததோடு மட்டுமல்லாமல் பூட்ஸ் கால்களால் உதைத்தும் ஏறி மிதித்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
திராவிடர் கழகத்தின் தலைவரான கி.வீரமணி மீது நடத்தப்பட்ட துன்புறுத்தல்களால் அவரது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதைச் சரிசெய்வதற்காக 10 நாட்கள் ரேடியம் தெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால், வெறும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான சிட்டிபாபுவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை இன்னும் பயங்கரமானது. 1976 நவம்பர் 22 முதல் 1977 ஜனவரி 3 வரையில் அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் அடித்தும் மிதித்தும் துன்புறுத்தப்பட்டதால் அவரது குடல், சிறுநீரகம் ஆகியவற்றில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்காகவே அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதய நோயாளியான அவருக்கு நீரிழிவு பிரச்சினையும் இருந்துள்ளது. மிக மோசமான நிலையில் இருந்த அவர், இரண்டாவது சிகிச்சை தொடங்கிய அடுத்த நாளே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.
சிறையில் பாதுகாப்பில் உள்ள திமுக உறுப்பினர்கள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துகொள்ளும்படியும், அதை எழுதித் தரும்படியும் சிறை அதிகாரிகளால் வற்புறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு எழுதித் தராவிட்டால் அவர்கள் மீண்டும் வீடு திரும்ப முடியாது எனவும், அவர்களது குடும்பத்தினரை இனி சந்திக்கவே முடியாது எனவும் மிரட்டப்பட்டுள்ளனர். திமுக கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாக எழுதிக் கொடுத்த பிறகு, காங்கிரஸ் கட்சியில் இணையும்படி ஒப்புக்கொண்ட பின்னரே அவர்களது பெட்டி படுக்கை எல்லாம் அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன.
விசாரணை ஆணையத்திடம் கருணாநிதியின் மகனும், சிறையில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டவர்களில் ஒருவருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நான் சிறையில் இருந்தபோது பக்கத்து அறைகளில் அலறல் சத்தமாகக் கேட்டுக்கொண்டே இருந்தது. அங்குள்ளவர்களைக் கடுமையாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அவர்கள் என்னையும் கடுமையாக அடித்தார்கள், வயிற்றிலேயே மிதித்தார்கள். பின்னர் என்னை ஒரு தனி அறையில் அடைத்துவிட்டார்கள்” என்றார்.
கருணாநிதி இந்த அளவுக்கு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட (குடும்பம்) ரீதியாகவும் பல்வேறு இன்னல்களைக் கடந்து வந்ததாலேயே அவர் மற்ற அரசியல் தலைவர்களிடமிருந்து தனித்து நிற்கிறார்.
திமுக மீது காங்கிரஸுக்கு ஏற்பட்ட இந்தப் பகை உணர்ச்சிக்குக் காரணம் என்ன? மத்திய அரசின் ஒடுக்குமுறையைக் கருணாநிதி எவ்வாறு எதிர்கொண்டார்? இதிலிருந்து திமுக மீண்டெழுந்தது எவ்வாறு? – நாளை தொடரும்...
(கட்டுரையாளர் ஆர்.விஜய் சங்கர் ஃப்ரன்ட்லைன் இதழின் ஆசிரியர்)
நன்றி: ஃப்ரன்ட்லைன் கலைஞர் சிறப்பிதழ்
தமிழில்: செந்தில் குமரன்
.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.
மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.
மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!
சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
பீம் (BHIM) Android / IOS
டெஸ் (TEZ) Android / IOS
போன்பே (PhonePe) Android / IOS
பேடிஎம் (Paytm) Android / IOS
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
en.minnambalam.com/subscribe.html
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
.
சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

கருத்துகள் இல்லை: