வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

முல்லை பெரியாறு: கேரளா தவறான தகவலைப் பரப்புகிறது!

முல்லை பெரியாறு: கேரளா தவறான தகவலைப் பரப்புகிறது!மின்னம்பலம் : முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தவறான தகவல்களை பரப்புவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டதும் வெள்ள சேதத்திற்கு ஒரு காரணம் என்று கேரள அரசு அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சேலத்தில் இன்று (ஆகஸ்ட் 31) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “பருவமழை தொடங்குவதற்கு முன்னர் நிபுணர் குழு, முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்து அணை உறுதியாக உள்ளது, 142 அடி வரை நீரை தேக்கிக் கொள்ளலாம் என்று சான்றளித்தது. அதனடிப்படையில்தான் 142 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது.
ஆனால் கேரள அரசு வேண்டுமென்றே தவறான தகவலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அணையை பலப்படுத்திய பிறகு நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை அடிப்படையில் 152 அடியாக உயர்த்துவதற்காக அணையை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
கனமழையின் காரணமாக கேரளாவின் பெரும்பாலான அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியே வந்த காரணத்தால் அம்மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் 152 அடியாக உயர்த்தக்கூடாது என்பதற்காக முல்லை பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரினால்தான் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தவறான தகவலை கேரள அரசு பரப்புகிறது. அது உண்மையல்ல” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளோம். அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்துகொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்ட முதல்வர், “ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றவுடன் தான் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்கின்றோம். உள்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆக ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்துள்ளோம்” என்று பெருமிதம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு சட்ட ஆணையம் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளதே என்ற கேள்விக்கு, “நமக்கு 2021வரை பதவிக்காலம் உள்ளது. அதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான கருத்துருவும் இன்னும் எட்டப்படவில்லை. எப்படி தேர்தல் வந்தாலும் நாங்கள் அதனை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளோம். வாக்குச் சீட்டு முறையாக இருந்தாலும், மின்னணு முறையாக இருந்தாலும் எங்களுக்கு எதிலும் சந்தேகம் கிடையாது. மக்களின் நீதியைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே எந்த முறையாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்று பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை: