வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

மீனவ மக்களுக்கு நிலநடுக்கத்தை தாங்கும் அதி நவீன வீடுகள்!

மீனவ மக்களுக்கு நிலநடுக்கத்தை தாங்கும் அதி நவீன வீடுகள்!மின்னம்பலம்: மீனவக் கிராம மக்களுக்காக அதி நவீன தொழில் நுட்பத்தில் ரூ.59 கோடி செலவில் திருவொற்றியூரில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகள் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டவை என்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் எம்.எஸ்.சண்முகம் நேற்று (ஆகஸ்ட் 30) தெரிவித்தார்.
சென்னை எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலை திட்டத்துக்காக திருவொற்றியூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. இவற்றில் வசித்த பெரும்பாலானவர்கள் எர்ணாவூரில் அமைக்கப்பட்டுள்ள குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். ஆனால், திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள், தங்களை இப்பகுதியிலிருந்து இடம் மாற்றினால் மீன்பிடித் தொழில் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறி வீடுகளைக் காலி செய்ய மறுத்து வந்தனர்.


இந்த நிலையில், 2018 ஜனவரி 30ஆம் தேதி தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் தியாகராஜர் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 2.14 ஏக்கர் நிலத்தை மாத வாடகை ரூ.5.34 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த காலி நிலத்தில் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்தைச் சேர்ந்த 446 மீனவ குடும்பங்களுக்கு ரூ. 59 கோடி செலவில் அடுக்குமாடி வீடுகளைக் கட்டும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. பணி நடைபெறும் இந்த அடுக்கு மாடி வீடுகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் எம்.எஸ்.சண்முகம் நேற்று பார்வையிட்டார்.
நூறாண்டு ஆயுள்காலம் கொண்ட வீடுகள்
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "இங்கு ரூ.59 கோடி செலவில் 10 அடுக்குகளில் நான்கு கட்டடங்களாக 480 அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணி நடைபெறுகிறது. தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தரை ஓடுகள் பதிப்பது, மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் வசதிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வீடுகள் ஜெர்மன் நாட்டின் கட்டடத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கட்டப்பட்டு வருகின்றன.

கான்கிரீட் தூண்கள், பலகைகள் தயார் செய்யப்பட்டு பின்னர் கிரேன்கள் மூலம் அடுக்குகள் அமைக்கப்படுகின்றன. பத்து மாடிகளுக்கும் மின்தூக்கி வசதி உள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கும் இடவசதி உள்ளது.
இந்த வீடுகள் நூறாண்டு ஆயுள்காலம் கொண்டவையாக உறுதியாகக் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமானப் பணி கட்டுமான கால அவகாசத்துக்கு ஓரிரு மாதம் முன்பே நிறைவடையும் வாய்ப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து பயனாளிகளிடம் வீடுகள் ஒப்படைக்கப்படும். ஒரு வீட்டுக்கான தோராய மதிப்பு ரூ.11 லட்சம். இருப்பினும் எவ்வித பங்குத் தொகையும் பயனாளிகளிடம் வசூலிக்கப்படவில்லை. பராமரிப்புத் தொகையாக ரூ.750 மாதம்தோறும் ஒவ்வொரு பயனாளியும் செலுத்த வேண்டும்" என அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: