நிலம்பூரில் பார்த்த கிராமங்களில் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதைத் தெரிந்துகொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் வள்ளிக்கடவு என்ற கிராமத்தை அடைவதற்கும் முன்னாலேயே நிலச்சரிவு ஏற்பட்டு வேரோடு சாய்ந்திருந்த மரம் பாதையை அடைத்திருந்தது. அதனால், வேறுவழியில் பயணித்தோம். எங்குமே மழையின் வேகம் குறையவில்லை. இயற்கை அதன் உறைவிடமான கேரளத்தின்மீது தன் காதலை அளவுக்கு அதிகமாகவே கொட்டிக்கொண்டிருந்தது. திருவம்பாடியிலிருந்து கோழிக்கோடு செல்லும் வழியில் மரிப்புழா நதி ஓடுகிறது. அதன்மீது கட்டப்பட்டிருந்த பாலம் வெள்ளத்தால் உடைந்து போக்குவரத்தைத் தடைசெய்திருந்தது. 9-ம் தேதி வெள்ளம் பாலத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்தபோதே போக்குவரத்து அதிகாரிகள் பாலத்தின் வழியைத் தடை செய்திருந்தார்கள். அதனால் அங்குச் சேதங்கள் தவிர்க்கப்பட்டிருந்தன.
வைத்திரி நிலச்சரிவால் முற்றிலுமாகத் தகர்ந்துபோன கட்டடம்
அதியம்பரா அருவியில் ஏற்பட்ட வெள்ளம் அதற்கு அருகிலிருந்த கிராமங்களில் அபரிமிதமான நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. அந்த நிலச்சரிவுகளில் சிக்கிய ஐந்து பேரை மீட்புப்பணி வீரர்கள் எவ்வளவோ போராடியும் மீட்கமுடியாமல் போனது. நிலச்சரிவுக்குப் பலியானவர்களை நினைத்து வருந்தக்கூட நேரமின்றித் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அந்த மக்களை ஓடவைத்தது இயற்கை. ஆகஸ்ட் 9-ம் தேதி ஏற்பட்ட இழப்புகளுக்குப் பிறகு நிலம்பூர் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை 11-தேதி சந்தித்தோம். நடந்ததை விவரிக்கும்போது “உன்னைத் தானே நாங்கள் நம்பியிருக்கிறோம். வனபூமியின் மடிமீதே தூங்கும் எங்களை இப்படியா வஞ்சிப்பாய்!” என்று அவர் கதறிய ஓலம் இன்றுவரைச் செவிப்பறைகளில் மோதிக்கொண்டிருக்கிறது.

வெள்ளநீர் சூழ்ந்த கேரளாவில், வெள்ளத்தால் ஏற்பட்ட இடர்பாடுகளுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் நிலச்சரிவுகளும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு, கோழிக்கோடு, பத்தனம்திட்டா போன்ற மாவட்டங்களில் நிலச்சரிவுகள் அதிகமாகவே அரங்கேறியுள்ளது. கேரளாவில் மொத்த உயிர்ச்சேதங்களில் 94 பேர் நிலச்சரிவுகளில் உயிரிழந்துள்ளனர். தற்போது எட்டு நாள்களில் பெய்துள்ள மழை ஒரு வருடத்துக்குப் பெய்யவேண்டிய மழை அளவைவிடவே அதிகம். மழைச்சாரல் மட்டுமே இருக்கவேண்டிய காலமான ஒன்றரை மாதங்களுக்கு முன்பிருந்தே பலமாகத்தான் பெய்துகொண்டிருக்கிறது.
மண்ணுக்கென்று ஓர் அளவு உள்ளது. ஓரளவுக்குமேல் அதனால் நீரை உறிஞ்சமுடியாது. அப்படி நீரை உறிஞ்சமுடியாத சமயங்களில் நதிகளில் பாயும் நீர் பொங்கிவந்து வெள்ளமாக ஊருக்குள் பாய்கின்றது. அதுவே மலைப் பிரதேசங்களில் அளவுக்கு அதிகமாக நீரை உறிஞ்சிய மண் தனது பிடிப்பை இழந்து சரியத் தொடங்குவதால் நிலச்சரிவு ஏற்படுகிறது.
வயநாட்டில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து அங்கு நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த
சமூக ஆர்வலர் ஷோபா ராஜன் அவர்களைச் சந்தித்துப் பேசினோம், “இங்கு
நதியோரத்தில் வாழும் மக்களே அதிகமான இழப்புகளைச் சந்தித்துள்ளார்கள்.
அவர்களில் ஏழை மக்களும், ஆதிவாசி மக்களும்தான் அதிகம். மலைப் பிரதேசங்களில்
இருக்கும் பெரிய பாறைகளுக்கு நடுவிலிருக்கும் கிராமங்களிலும்
நிலச்சரிவுகளால் மக்கள் அதிகம் பாதித்துள்ளனர். நல்லவேளையாகச் சில
கிராமங்களைச் சுற்றியிருந்த நிலப்பகுதிகள் சரிந்தனவே தவிர அவை
தப்பித்துவிட்டன. ஆனால், அவற்றுடனான தொடர்புகளை நாங்கள் இழந்துவிட்டோம்.
அவர்களைக் காப்பாற்றுவது மிகவும் கடினமாக இருந்தது. மலைப் பிரதேசங்களில்
பெரும்பான்மையாகப் பழங்குடி மக்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கல்பட்டாவுக்கு அருகில் இருக்கும் குருமணி என்ற கிராமத்தில் சுமார் எட்டு
ஏக்கர் நிலப்பகுதி மொத்தமாகச் சரிந்து விழுந்து அந்தப் பகுதியைப் பாதி
புதைத்துவிட்டது” என்றார்.நிலத்தின் தன்மையை மாற்றினால் என்ன நடக்குமென்பதை இயற்கை நமக்கு உணர்த்திவிட்டது. இனி அதன் தன்மையை மாற்றாமல் வாழ நமக்கு என்ன மாற்றுவழி உள்ளது என்பதைச் சிந்தித்தாக வேண்டிய கட்டாயத்தையும் உணர்த்தியுள்ளது.
vikatan.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக