ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

கேரள 61 அணைகளில் ஒன்றில்கூட அவசர ஏற்பாடு இல்லை! - தணிக்கை அறிக்கை

கேரள வெள்ளம்: 61 அணைகளில் ஒன்றில்கூட அவசர ஏற்பாடு இல்லை! - தணிக்கை அறிக்கைஇரா.தமிழ்க்கனல் vikatan  : அணைகளைத் திடீரெனத் திறந்துவிட்டதுதான் இவ்வளவு பேரழிவுக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா. அணைகளின் பாதுகாப்பை முன்னிட்டே அவற்றிலிருந்து அதிகப்படியான நீரானது திறந்துவிடப்பட்டது எனக் கேரள அரசுத் தரப்பிலும் ஒப்புக்கொள்கிறார்கள். 
த்து லட்சம் பேரை தண்ணீரில் தவிக்கவிட்ட கேரள வெள்ளம் இயற்கையானதுதானா எனும் கேள்வி, இன்று வரை எழுப்பப்பட்டுவருகிறது. இதற்கு ஆதரவான தகவல்களும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. மாநிலத்தில் உள்ள 61 நீர்த்தேக்கங்களில் ஒன்றில்கூட அவசர நிலைக்கான செயல்பாட்டுத் திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை எனும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அதன் முன்னெச்சரிக்கைக்கான திட்டங்களைப் பற்றிய மத்திய தலைமைக் கணக்காயரின் அறிக்கை மூலம், இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் வெள்ளத்தால் உண்டாகும் சேதத்தின் அளவு அபரிமிதமாக இருந்துவரும் நிலையில், இந்தியத் தலைமைக் கணக்காயர் மூலமாக இந்தத் தணிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது. 2017-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையில், அண்மையில் வெள்ளம் பாதித்துள்ள கேரளத்தின் நிலைமையைப் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் 38.90 லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் 8.70 லட்சம் எக்டேர் பரப்பானது, வெள்ள அபாயப் பகுதி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், மத்திய நீர் ஆணையமானது இந்த மாநிலத்தில் ஒரு இடத்தில்கூட வெள்ள முன்னெச்சரிக்கை நிலையத்தை அமைக்கவில்லை.

இங்கு மட்டுமல்ல, அந்தமான்- நிகோபார், சண்டிகார், டாமன் -டையூ, கோவா, இமாசலப்பிரதேசம், லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் வெள்ள முன்னெச்சரிக்கை மையங்கள் அமைக்கப்படவில்லை என்கிறது, 2017 தணிக்கை அறிக்கை!
கேரள வெள்ளம்
அணைகளைத் திடீரெனத் திறந்துவிட்டதுதான் இவ்வளவு பேரழிவுக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா. அணைகளின் பாதுகாப்பை முன்னிட்டே அவற்றிலிருந்து அதிகப்படியான நீரானது திறந்துவிடப்பட்டது எனக் கேரள அரசுத் தரப்பிலும் ஒப்புக்கொள்கிறார்கள்.
அணைகளின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் என்னதான் செய்தன?
மத்திய அரசைப் பொறுத்தவரை, 11-ம் ஐந்தாண்டுத் திட்டத்தில், ‘அணைப் பாதுகாப்பு படிப்பினை மற்றும் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்காக முதலில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மத்திய நீர் ஆணையத்தின் உதவியுடன் அணைகள் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு, கேரளம், மத்தியப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள 223 அணைகளின் பாதுகாப்பு, வலுவூட்டலுக்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. மத்திய நீர் ஆணையத்தின் அணைகள் பாதுகாப்பு மறுசீரமைப்பு இயக்கம் இதைச் செயல்படுத்துவதற்கான முழுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
கடந்த 2011-ம் ஆண்டில், மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய அணைகளுக்கான அவசரநிலைக்கால செயல்பாட்டுத் திட்டத்தை உருவாக்குமாறு மத்திய நீர்வள அமைச்சகம் கேட்டுக்கொண்டது. ஆனால், அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, 2006 மே மாதத்தில், அணைகளின் பாதுகாப்பு மற்றும் அவசரநிலைக்கான செயல்பாடு குறித்த வழிகாட்டல்களை மத்திய நீர்வள ஆணையம் தயாரித்து, மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கையாக அனுப்பியிருந்தது. இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் மாநில அரசுகள் தரப்பில் அணைகளுக்கான அவசரநிலைக்கால செயல்பாடு பற்றிய திட்டம் வகுக்கப்பட்டிருக்கவில்லை எனத் தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல்வாக்கில், மத்திய நீர் ஆணையம் வெளியிட்ட ஆவணத்தின்படி, 24 மாநிலங்களில் ஆணையத்தின் வெள்ள முன்னெச்சரிக்கை நிலையங்கள் செயல்பாட்டில் இருந்தன. மாநிலங்களுக்கிடையே ஓடும் 19 பெரிய ஆறுகள் இந்தப் பட்டியலில் உள்ளன. இந்த ஆறுகளின் படுகைகளில் 226 முன்னெச்சரிக்கை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்படியான வெள்ளத்தை முன்னெச்சரிக்கை செய்வதற்கு, அந்தந்த மாநில அரசுகள் முறைப்படி, ஆணையத்திடம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மத்திய நீர்வளத் துறை வட்டாரத்தில். இந்த ஆண்டு, கேரள அரசுத் தரப்பிடமிருந்து இப்படியான கோரிக்கை எதுவும் வரவில்லை என்றும் கூறுகிறார்கள். ஆனாலும் வெள்ளத்தின் உயர்மட்டத்துக்கு மேலே இருக்கும்படி அமைக்கப்படும் நீர்மானிகள், இந்த வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன எனச் சோகம்கொள்ளச் செய்கிறார்கள், கேரளப் பொறியாளர்கள்.

கருத்துகள் இல்லை: