ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

நாடாளுமன்ற தேர்தல்..காங்கிரஸ் 3 குழுக்களை அமைத்துள்ளது ... தமிழகத்தில் இருந்து சிதம்பரம் மட்டுமே....

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயார் ஆகிறது 3 முக்கிய குழுக்களை அமைத்தார் ராகுல்காந்தி
தினத்தந்தி :புதுடெல்லி, : நாடாளுமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு (2019) மே மாதத்துடன் முடிவடைகிறது.
 எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அனேகமாக அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் இப்போதே தொடங்கிவிட்டது.
தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பது, பெண்கள் அதிக அளவில் போட்டியிட வழிவகை செய்வது, தேர்தல் செலவை குறைப்பது போன்ற அம்சங்கள் குறித்து தேர்தல் கமிஷன் டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளுக்கும், 51 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இன்னும் சில மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. கூட்டணி அமைப்பது, வியூகங்கள் அமைப்பது போன்ற பணிகளை கட்சிகள் தொடங்கிவிட்டன.
ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருமித்த கருத்து கொண்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் முன்கூட்டியே தயாராகி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியில் முக்கிய குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, விளம்பர குழு என்ற மூன்று குழுக்களை அமைத்து உள்ளார்.
இந்த குழுக்களில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கிறார்கள்.</ இதில் 9 பேர் கொண்ட முக்கிய குழுவில் முன்னாள் மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, அகமது பட்டேல், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இந்த குழு கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் செயல்படும்.
ராகுல் அமைத்த குழுவில் தமிழகத்தில் இருந்து ஒரே தலைவர் ப.சிதம்பரம்

கருத்துகள் இல்லை: