புதன், 4 ஏப்ரல், 2018

திமுக + காங்கிரஸ் கூட்டணி தொடருமா? தொகுதி ஒதுக்கீடுகளில் அதிருப்தி?.


தினமலர் :லோக்சபா தேர்தலில், நான்கு; சட்டசபை தேர்தலில், 24 தொகுதிகளை மட்டும், காங்கிரசுக்கு ஒதுக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ள தகவல் தெரிய வந்ததும், அதிர்ச்சி அடைந்த, தமிழக காங்கிரஸ் தலைமை, இதுபற்றி விவாதிக்க, செயற்குழுவை கூட்டியுள்ளது. சென்னையில், வரும், 7ல் நடக்கும் அவசர செயற்குழுவுக்கு பின், தி.மு.க., கூட்டணிக்கு, காங்கிரஸ் முழுக்கு போடலாம் என, கூறப்படுகிறது. இது குறித்து, தமிழக காங்கிரஸ் வட்டாரம் கூறியதாவது: தமிழக காங்., கட்சியின் அவசர செயற்குழு கூட்டம், வரும், 7ம் தேதி, சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது. மாநில தலைவர், திருநாவுக்கரசர் தலைமையில் நடக்கும், இக்கூட்டத்தில், தி.மு.க., உறவு குறித்து, விவாதிக்கப்பட உள்ளது. 2014 லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு, ஐந்து தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., முன்வந்ததால், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, தோல்வி அடைந்தது.


கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், 41 தொகுதிகளில் போட்டியிட்டு, எட்டில் வெற்றி பெற்றது. 'வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிட வேண்டும்; கூட்டணி கட்சிகளும், உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்' என, தி.மு.க., மாவட்ட செயலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காவிரி பிரச்னையில், தொடர் போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்க, ஏப்., 1ல், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் தலைமையில், கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தது. அதன்பின், ஸ்டாலின் தலைமையில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே மறியல் நடந்தது. அதில், தி.மு.க.,வினர் திரளாக பங்கேற்றனர்; ஆனால், காங்கிரசார் பங்கேற்க, அவகாசம் தரப்படவில்லை.

இதற்கிடையில், சட்டசபை தேர்தலில், தி.மு.க., 180 தொகுதிகளில் போட்டியிட தயாராகி < வருகிறது. மீதமுள்ள, 54 தொகுதிகளில், 24ஐ காங்கிரசுக்கும், மற்றவற்றை, இதர கட்சிகளுக்கும் ஒதுக்க, தி.மு.க., திட்டமிட்டு உள்ளது. லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு, நான்கு தொகுதிகளும், மற்ற கட்சிகளுக்கு தலா, ஒன்று என, 10 தொகுதிகளை ஒதுக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த பங்கீடு தகவலை, டில்லியில், தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., ஒருவர், காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காங்கிரஸ் செயற்குழு, வரும், 7ம் தேதி கூட்டப்பட்டு உள்ளது. அதில், தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: