செவ்வாய், 3 ஏப்ரல், 2018

திமுக போராட்டத்திற்கு பாமக ஆதரவு!

 மின்னம்பலம் :திமுக போராட்டத்திற்கு பாமக ஆதரவு!மின்னம்பலம் :காவிரி உரிமைகளை மீட்பதற்கு அரசியல் தடையாக இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டு திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததால் தமிழகத்தில் தொடர் போராட்டம் வெடித்துள்ளது. இதுகுறித்து நேற்று திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இன்று முதல் 5ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தவும், 5ஆம் தேதியன்று முழு அடைப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,'இந்த போராட்டத்திற்கு அனைத்து எதிர்க் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முடிந்தால் அதிமுகவுக்கும் அழைப்பு அனுப்பப்படும்' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக தலைமையிலான கட்சிகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு பாமக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (ஏப்ரல் 2), "காவிரி பிரச்னைக்காக தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை நடத்தப்படவுள்ள கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கக் கோரி விக்கிரமராஜா கடிதம் எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் வரும் 5ஆம் தேதி திமுக கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடத்தப்படவுள்ள பொதுவேலை நிறுத்தத்திற்கு பாமகவின் ஆதரவைக் கேட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எனக்குக் கடிதம் எழுதியுள்ளார்" என்றும் கூறியுள்ளார்.
"அவர்களின் வேண்டுகோள்களை ஏற்று நாளை நடைபெறவுள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கும் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுவேலை நிறுத்தத்திற்கும் பா.ம.க ஆதரவு அளிக்கும். காவிரி உரிமைகளை மீட்பதற்கு அரசியல் தடையாக இருக்கக் கூடாது என்பதே பாமகவின் நிலைப்பாடு ஆகும். அதை மதித்து காவிரிப் பிரச்சினை தொடர்பாக நடத்தப்படும் அனைத்துப் போராட்டங்களையும் பாமக ஆதரவளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மத்திய அரசைக் கடுமையாக குற்றம் சாட்டியுள்ள ராமதாஸ், "காவிரிப் பிரச்சினையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு சாதகமாக மத்திய அரசு செய்யும் துரோகங்கள் மன்னிக்க முடியாதவை. மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் வெடித்துள்ள போராட்டங்கள் தான் மத்திய அரசுக்கு தமிழகத்தின் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை இப்போராட்டங்கள் உறுதி குறையாமல் தொடர வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டில் திமுக கூட்டணியிலிருந்து விலகிய பாமக, இதுவரை அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை. திமுகவைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும், போராட்டங்களிலும் கூட கலந்துகொள்ளாமல் பாமக தனியாக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது காவிரி பிரச்னையில் பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை: