வியாழன், 5 ஏப்ரல், 2018

மெரீனாவில் போராட்டம் ஸ்டாலின் திடீர் அறிவிப்பு .. தொண்டரகள் குவிந்தனர் ,,, ஸ்டாலினை குண்டு கட்டாக தூக்கி கைது


சென்னை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின்
சென்னை அண்ணாசாலை மற்றும் மெரீனா கடற்கரையில், மு.க ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், பல இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று காலை முதலே திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் திராவிடர் கழக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா சாலையில் மு.க ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் இதில் பங்கேற்றனர். பின்னர் ஊர்வலமாக சென்ற எதிர்கட்சியினர் சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து. இதனால் அண்ணா சாலை-வாலஜா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை போலீஸார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை: