திங்கள், 2 ஏப்ரல், 2018

மத்திய அரசை கண்டித்து கேரளாவில் பந்த்: தமிழகப் பேருந்துகள் நிறுத்தம்

கேரளாவில் பந்த்:  தமிழகப் பேருந்துகள் நிறுத்தம்!மின்னம்பலம்: மத்திய அரசைக் கண்டித்து கேரளாவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதால் தமிழகப் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசு அலுவலகங்களில் நிரந்தர தொழிலாளர்கள் அல்லாது பகுதி நேர தொழிலாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று நிரந்தர தொழிலாளர் சட்ட விதிகளில் திருத்தம் செய்வதை எதிர்த்து கேளராவில் முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று (ஏப்ரல் 2) காலை 6 மணி முதல் போராட்டம் நடைபெற்றுவருகிறது. பாஜக தவிர அனைத்துக் கட்சிகள் மற்றும் 16 தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளனர். இது தவிர, திருவனந்தபுரத்தில் உள்ள மியூசியம் காவல் நிலையத்திலிருந்து ஆளுநர் மாளிகை வரை ஊர்வலமாகச் செல்ல தொழிலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக தமிழகத்திலிருந்து கன்னியாகுமரி வழியாகக் கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் தமிழகத்தின் எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்து நிறுத்தத்தால் செங்கோட்டை பேருந்து நிலையம், புளியரை சோதனை சாவடி ஆகிய இடங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: