ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

கிரண் பேடிக்கு ஸ்டாலின் எதிர்ப்பு!... இலவச அரியை நிறுத்த கடும் கண்டனம்

கிரண் பேடிக்கு ஸ்டாலின் எதிர்ப்பு!மின்னம்பலம் :தூய்மையான கிராமம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே, அங்கு வசிப்பவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்று நேற்று (ஏப்ரல் 28) கருத்து வெளியிட்டிருந்தார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி. இந்த நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
நேற்று புதுச்சேரியை அடுத்துள்ள மண்ணாடிப்பட்டு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட அம்மாநிலத் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, புதுவையிலுள்ள கிராமங்கள் தூய்மையானவை என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே, அங்கு வசிப்பவர்கள் இலவச அரிசியைப் பெற முடியும். இது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்ததோடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கும் கடிதம் எழுதினார் கிரண் பேடி. இதில், புதுச்சேரி வட்டாரத்திலுள்ள கிராமங்கள் சுகாதாரமற்று இருப்பதாகவும், இதனைச் சுத்தம் செய்ய அளிக்கப்பட்ட அவகாசம் மே 31ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிரண் பேடியின் இந்த அறிவிப்புக்கு புதுச்சேரி அதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று கிரண் பேடியின் அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
”இலவச அரிசி விநியோகத்தையும் சுகாதாரத்தையும் தொடர்புபடுத்துவது, சமூக நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்கு எதிரானது. இது அரசியலமைப்புக் கருத்துகளை மீறுவதாகவும், ஊட்டச்சத்து மற்றும் பொதுசுகாதாரம் குறித்த நேரடியான கொள்கைகளைத் தோற்கடிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென கிரண் பேடியை வற்புறுத்துகிறேன்” என்று இதில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: